Published : 06 Jul 2020 09:20 AM
Last Updated : 06 Jul 2020 09:20 AM

விவசாயத்துக்கு இலவச மின்சாரம்: சலுகை அல்ல, கடமை

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரப்பட வேண்டுமா? சமீபமாக இதுதான் விவாதப் பொருளாக இருக்கிறது. 2003-ம் ஆண்டுக்கான மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன்படி, விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. மின் விநியோக நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்தச் சூழலில் இனியும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருக்க முடியாது. தவிரவும்,விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் விவசாயிகள் நிலத்தடி நீரை தேவைக்கதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் அபாயத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், விவசாயம் என்பது லாபகராமானத் தொழில் இல்லை.

உணவு உற்பத்தி நாடு தன்னிறைவை எட்டியிருந்தாலும், விவசாயிகளின் வாழ்க்கை நிலை இன்னும் மேம்படவில்லை. தொடர்ந்து கடனாளிகளாகவே இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால் அது அவர்களை இன்னும் கடனாளியாக மாற்றும். மட்டுமல்லாமல் விவசாயத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளும் என்று மறுதரப்புக் கூறுகிறது. சில வரலாற்றுப் பின்புலத்தோடு இந்தப் பிரச்சினையை அணுகும்போது தெளிவான முடிவை எட்ட முடியும்.

ஆரம்பத்தில் ஏரி, ஆறு, குளம், கால்வாய் போன்றவற்றையும்விட மிக பிரதானமான நீர்பாசனமாக இருந்தது கிணறுதான். 1960-களில், பசுமைப்புரட்சி ஏற்பட்ட சமயத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. எனவே நீர்பாசனத்தை அதிகரிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. கிராமப்புறங்களில் மின்மயாக்கலை தீவிரப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக வேளாண்மை நல்ல வளர்ச்சி கண்டது. அதாவது, நாடு உணவு இறக்குமதியிலிருந்து உணவு ஏற்றுமதிக்கு மாறியது. அடுத்த இருபது ஆண்டில் நிலைமை மாறியது. 1980-களில் வேளாண்மை தேக்கம் கண்டது.

தொடர் பயன்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கியது. மின்சாரக் கட்டணம் செலுத்தமுடியாமல் விவசாயிகள் திணறினர். இந்தக் காலகட்டத்தில்தான் விவசாயிகளின் தொடர்போரட்டத்துக்குப் பிறகு விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதேகாலகட்டத்தில்தான் ஆழ்துளையிடும் தொழில்நுட்பங்கள் அறிமுகமாக, நீர்த் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன.

அது மிதமிஞ்சிய நிலத்தடி நீர் பயன்பாடுக்கு வழிவகுத்தது. மறுபுறம் திட்டமிடப்படாத தொழில்துறை, நகர்ப்புற வளர்ச்சி என நாடு மாற்றமடைய நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்தது. விளைவாக ஆரம்பத்தில் 200 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைத்துவந்த நிலையில் 1200 அடிக்கும் கீழே சென்றது. இலவச மின்சாரத்தால்தான் விவசாயிகள் நிலத்தடி நீரை விரையமாக்குகிறார்கள். எனவே நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவேனும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது பேசத்தொடங்கியுள்ளார்கள்.

நிலத்தடி நீரின் மிதமிஞ்சிய பயன்பாட்டினால் நிலத்தடி நீர்வளம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பது உண்மையே. அதன்பயன்பாட்டில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டியது காலத்தின் தேவையே. அதை எப்படி மீட்டெடுக்க வேண்டும்,யாருடைய நலன்களை முன்னிருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். இலட்சக்கணக்கான ஏரி, குளம், குட்டைகள், ஓடைகள் மற்றும் நதிகள் ஆகியவற்றைத் தூர்வாரி சூழலியல் சீர்கேடுகளிலிருந்து மீட்டமைப்பதன் மூலமும், நகர்மயமாதலை ஒழுங்குபடுத்தி சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் மூலமும் நிலத்தடி நீர்வளத்தை செறிவூட்ட முடியும். அதற்கான திட்டங்களை வகுக்கும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும்.

அதை விடுத்துவிட்டு, நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்குவது சரியல்ல. தொழில் நிறுவனங்கள்போல் அல்ல விவசாயம். விவசாயத்தைத் தொழிலாக அணுக முடியாது. விவசாயிகள் இன்னும் பொருளாதார நெருக்கடியில்தான் உள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்திலிருந்துதான் இப்பிரச்னையை அணுக வேண்டும். மின்வாரியம் அல்லது தனியார் மின்னுற்பத்தியாளர்கள் நலன்களிலிருந்து அல்ல. தற்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் பெரும்பான்மை விவசாயிகள் விவாசயத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். பெரும் நிறுவனங்கள் விவசாய நிலங்களைக் கைப்பற்றத் தொடங்கும். அதற்குத் தான் மத்திய அரசு வழிவகுக்கிறாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x