Published : 27 Jun 2020 08:51 AM
Last Updated : 27 Jun 2020 08:51 AM

கரோனா வைரஸ் தடுப்பு: முதல் வெற்றி

இ.ஹேமபிரபா

கரோனா வைரஸ் தொற்றை வருமுன் காப்பது – தடுப்பு மருந்து, வந்தபின் காப்பது – சிகிச்சை மருந்து. ஆய்வாளர்கள் தற்போது இரண்டு அம்சங்களிலும் சரிசமமான கவனத்தைச் செலுத்திவருகிறார்கள். பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்தோ, அல்லது மருந்துகளின் கலவையோ நோயைத் தடுக்கிறதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னொரு புதிய திசையும் இருக்கிறது. நோயைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படலாம், நோய் வந்தபின் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படலாம் என்று இரட்டைச் செயல்பாடு கொண்ட ஓர் அம்சம். அதன் பெயர் – ‘ஒற்றைப் படியாக்க எதிரணுக்கள்’ (Monoclonal Antibodies).

நோய் எதிரணுக்கள்

நமக்கு நாவல் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்றால், கரோனா வைரஸின் மேற்பரப்பில் உள்ள ஈட்டிமுனைப் புரதம் நம் உடலில் குறிப்பிட்ட செல்களுடன் இணைந்து வைரஸ் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நம் உடலுக்குள் வந்துள்ள கரோனா வைரஸ், நமக்கு எதிரி என்று நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உணர்ந்துகொண்டதும், அதை அழிக்க நம் உடலில் நோய் எதிரணுக்கள் (Antibodies)உற்பத்தியாகும். வைரஸின் ஈட்டிமுனைப் புரதம்தான், நம் உடல் செல்களுடன் முதலில் வினை புரியும். அதேபோல், நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தால் உருவாக்கப்படும் எதிரணுக்களும் ஈட்டிமுனைப் புரதத்தின் செயல்பாடுகளைத்தான் முதலில் முடக்கும்.

நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் கோடிக்கணக்கான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட எதிரணுக்களை தன்னிடத்தே வைத்திருக்கும். கரோனா வைரஸ் என்றில்லை, வேறு எந்தக் கிருமி உள்ளே நுழைந்தாலும், அதற்கேற்ற எதிரணுவை நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உற்பத்திசெய்யும். எவ்வளவு விரைவாக நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் சரியான எதிரணுவைக் கண்டறிந்து உற்பத்திசெய்கிறது என்பதைப் பொறுத்தே, நோய்க் கிருமி வெல்வதோ அல்லது நம் உடல் வெல்வதோ அமைகிறது.

நாவல் கரோனா வைரஸுக்கு நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் வைரஸையும், அதன் ஈட்டிமுனைப் புரதத்தையும் நினைவில் வைத்திருக்கும். அதனால் தொற்று ஏற்பட்டவுடன், உடனடியாக சரியான எதிரணு எது என்பதை உணர்ந்து தயாரிக்கும். ஆனால், இன்னும் நாவல் கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் சரியான எதிரணு எது என்பதைத் தேடிக் கண்டறிந்து, அதன் பின்னரே உற்பத்திசெய்யத் தொடங்கும். இந்தக் கால இடைவெளிக்குள் நோய்த் தொற்று தீவிரமடைந்தால், வைரஸ் வென்றுவிடும்.

பிளாஸ்மா சிகிச்சையும் ஒற்றைப்படியாக்க எதிரணுக்களும்

நோய்த் தொற்றிலிருந்து ஒருவர் மீள்கிறார் என்றால், அவருடைய உடலில் எதிரணுக்கள் உற்பத்தியாகி இருக்கும். இந்த எதிரணுக்கள் நம் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் மிதந்துகொண்டிருக்கும். கரோனாவை அழிக்கும் எதிரணுக்கள் கொண்ட இந்த பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுத்து, நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்குக் கொடுத்து, சிகிச்சை அளிக்கும் முறைதான் ‘பிளாஸ்மா சிகிச்சை’ (Plasma therapy) எனப்படுகிறது. இதை நோக்கியே ஆய்வுகள் நகர்ந்து கொண்டிருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

ரத்த பிளாஸ்மாவில் கரோனாவை அழிக்கும் எதிரணுக்கள் மட்டும் இருக்காது. பலவகை எதிரணுக்கள், வேறு பல புரதங்கள், நொதிகள் போன்றவையும் இருக்கும். அதனால், பிளாஸ்மாவை உடலில் செலுத்தியதும், நோயாளியின் உடலில் உள்ள நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் இவற்றில் எது சரியான எதிரணு என்று தேடி எடுத்துத்தான் செயல்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு ஏற்றும் அளவுக்குப் பிளாஸ்மா கிடைப்பதும் கடினம்.

இதற்கு பதிலாக, பிளாஸ்மாவில் உள்ள கரோனா வைரஸை எதிர்க்கும் சரியான ‘ஒரு எதிரணு’வை மட்டும் தனியே ‘பிரித்தெடுத்து’, அந்த எதிரணுக்களை அதிகளவில் ‘படியெடுத்து’ (Cloning) தயாரிக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்படி ஒரு குறிப்பிட்ட எதிரணுவை மட்டும் படியாக்கம்செய்வதால் நமக்குக் கிடைக்கும் உயிரணுக்கள்தான், ‘ஒற்றைப்படியாக்க எதிரணுக்கள்’ (Monoclonal Antibodies) எனப்படும்.

ஒற்றைப்படியாக்க எதிரணுக்களைத் தயாரித்தல்

நம் உடலில் ஏற்கெனவே எதிரணுக்கள் இருந்தாலும், கிருமி உள்ளே நுழையும்போது தான் கிருமிக்கேற்ற எதிரணுக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். எதிரணுக்களைப் படியாக்கம் (Cloning) செய்ய வேண்டும், அதாவது தயாரிக்க வேண்டுமென்றால் கிருமி உள்ளே செல்ல வேண்டுமே என்று நினைக்கலாம்.

ஆனால், அப்படித் தேவையில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல கரோனா வைரஸின் ஈட்டிமுனைப் புரதம் மட்டுமே போதும். இந்த புரதத்தைத்தான் எதிரணுக்களும் முதலில் அடையாளம் கண்டுகொள்ளும். ஆக, வைரஸின் இந்த புரதத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து, அதை எலி போன்ற விலங்குகளின் உடலில் செலுத்தப்படும். எலியின் உடலின் அதற்கேற்ற எதிரணுக்கள் உண்டாகும். பின்பு, அதன் பிளாஸ்மாவில் இருந்து எதிரணுக்கள் மட்டும் பிரித்தெடுக்கப்படும்.

இந்த எதிரணுக்கள் விதைநெல் போன்றது. போதிய விதைநெல் கிடத்தவுடன், சரியான நிலத்தில் விதைத்தால்தானே நமக்கு உணவளிக் கும் அளவுக்கு நெல் கிடைக்கும்? அதைப்போல், எலியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த எதிரணுக்களை, ஆய்வுக்கூடத்தில் இருக்கும் ஒரு வட்டிலில் (Plate) எதிரணுக் களை பெருக்கும் திறன் கொண்ட மற்ற செல்களுடன் இதை இணைப்பார்கள். இப்போது, அதிகளவிலான எதிரணுக்கள் கிடைத்துவிடும். பின்பு அவற்றை மட்டும் தனியே பிரித்தெடுத்தால், ‘ஒற்றைப்படியாக்க எதிரணுக்கள்’ தயார். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும், குறிப்பிட்ட எதிரணுவை மட்டும் தனியே பிரித்தெடுப்பது மிக மிகக் கடினமானது.

இப்படித் தயாரிக்கப்படும் எதிரணுக்களை கரோனா தொற்றுள்ள ஒருவரின் உடலில் செலுத்தினால், அந்த எதிரணுக்கள் வைரஸை செயலிழக்கச் செய்யும். இந்த ஒற்றைப்படியாக்க எதிரணுக்கள் நம் உடலில் எத்தனை நாள் இருக்கும் என்பதற்கு, காலவரையறை இருக்கிறது. சில நாட்கள், சில மாதங்கள் என்று. கரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் தொற்று ஏற்படும் முன்னரேகூட இந்த ஒற்றைப்படியாக்க எதிரணுக்களை தற்காப்புக்காக செலுத்தலாம். எதிரணுக்களின் ஆயுட்காலம் இருக்கும்வரை, கரோனா வைரஸ் உள்ளே நுழைந்ததும் இந்த எதிரணுக்கள் செயல்படத் தொடங்கிவிடும். அதனால், இது தடுப்பு மருந்தாகவும், சிகிச்சை மருந்தாகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஸ்ரேலின் பங்கு

நாவல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் ரத்த பிளாஸ்மாவில் இருந்து, நாவல் கரோனா வைரஸுக்கான எதிரணுவை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து, ஒற்றைப்படியாக்க எதிரணுக்களை இஸ்ரேலிய உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் (Israel Institute for Biological Research) தயாரித்திருக்கிறது. மே மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் வெளியிட்ட செய்தியின்படி, இந்த எதிரணுக்கள் கரோனா வைரஸை முழுவதுமாக செயலிழக்கச் செய்கின்றன.

சில நாடுகள் சார்ஸ் வைரஸை செயலிழக்கச்செய்யும் எதிரணுக்களை நாவல் கரோனா வைரஸுக்குப் பயன்படுத்த முடியுமா என்ற பரிசோதனையில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில் இஸ்ரேல் ஆய்வாளர்கள் நாவல் கரோனா வைரஸூக்கே எதிரணுக்களைத் தயாரித்ததால் சிறப்பு கவனம் பெற்றனர். இன்னும் விலங்குகளிடமும், மனிதர்களிடமும் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது என்றாலும், இந்த எதிரணுக்கள் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற எண்ணத்தில் அதிகளவில் இந்த எதிரணுக்களை உற்பத்தி செய்யும் வழிகளை இஸ்ரேலிய அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.

வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டி ருக்கின்றனவா?

ஒற்றைப்படியாக்க எதிரணுக்கள் பொதுவாக இரண்டு வகையில் செயல்படுகின்றன. நோய்க் கிருமியின் பரப்பில் ஒட்டிக்கொண்டு அவற்றின் நோய் ஏற்படுத்தும் திறனை அழிப்பவை ஒரு வகை. எடுத்துக்காட்டாக, கரோனா வைரஸின் ஈட்டிமுனைப் புரதத்தில் இந்த எதிரணுக்கள் ஒட்டிக்கொண்டால், வைரஸால் நம் உடலில் உள்ள செல்களுடன் இணைந்து பெருக முடியாது. அதனால், வைரஸ் செயலிழக்கும். மற்றொரு வகை, கிருமியின் ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்துக்கு, ‘இதோ நான் உட்கார்ந்திருக்கிறேனே இந்த கிருமி ரொம்ப மோசம், இதை அழித்துவிடு’ என்று சமிக்ஞை கொடுக்கும்.

இத்தகைய வேறுபட்ட செயல்பாடுகள் இருப்பதால் ஒற்றைப்படியாக்க எதிரணுக்கள் ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் சிகிச்சையில் பெரும் உதவியாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் முடக்கு வாதம், ஆஸ்துமா என்று ஏற்கெனவே பல நோய்களை இவை குணப்படுத்திவருகின்றன. இன்னும் பல நோய்களுக்கும் இதே முறையில் சிகிச்சை அளிப்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சிக்கல்கள்

இந்த நடைமுறையில் உள்ள முக்கியப் பிரச்சினை, இதன் விலை. ஏற்கெனவே சொன்னது போல் ஒற்றைப்படியாக்க எதிரணுக்களின் தயாரிப்புப் பணியில் நிறைய நடைமுறைகள் இருப்பதால், இதன் விலை மற்ற சிகிச்சை முறைகளைவிட அதிகமாக இருக்கிறது. பெருஉற்பத்தி செய்தால் மட்டுமே எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால், கரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த ஒற்றைப்படியாக்க எதிரணுக்கள் அவசியமாக இருக்கின்றன. குறிப்பாக நோய்த் தாக்கத்தால் எளிதில் பாதிக்கப்படுவோரைக் காப்பாற்ற உதவும். கரோனாவுக்கு எதிரான போரில் சுயநலமில்லாத நடவடிக்கையாக இது அமையும் என்று ஆய்வகங்கள் அறிவித்திருப்பது, நம்பிக்கை தரும் விஷயமாக இருக்கிறது.

இ.ஹேமபிரபா,

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x