Published : 18 Jun 2020 08:23 AM
Last Updated : 18 Jun 2020 08:23 AM

ஜென் துளிகள்: ஒரு கை ஓசை எப்படியிருக்கும்?

இச்சி என்ற ஜென் துறவி, ஹக்குனே ஏரிக்கு அருகில் அமைந்திருந்த புகழ்பெற்ற மடாலயத்தின் சமையலறையில் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். இளம்வயதில், கூட்டத்தில் அவரிடம் கேட்கப்பட்ட “ஒரு கை ஓசை எப்படியிருக்கும்?” என்ற ஜென் புதிருக்கு அவரால் பதிலளிக்க இயலவில்லை. அதனால், அவர் எப்போதும் தன்னை ஒரு தோல்வியடைந்த துறவியாகவே நினைத்துவந்தார். தோல்வியடைந்ததாகத் தோன்றக்கூடிய அவரின் ஐம்பத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கை முடிவுக்கு வரவிருந்தது. அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவரின் ஆன்மாவில் பெரும் அமைதி தவழ்ந்ததை உணர்ந்தார். ஞானத்தைத் தேடும் முயற்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது.

கடந்துசென்றுவிட்டிருந்தது. அவரின் இடுப்பு எலும்புகளின் கடகடப்பு இல்லை. அவருக்குப் பதில் தெரியாமல் அச்சுறுத்திக் கொண்டிருந்த புதிரும் கடக்கப் போகிறது. ஏனென்றால், அவர் தன் வாழ்வின் இறுதியில், மென்மையான இருள் நிறைந்த அறையின் தனிமையில் எந்தத் தேடலுக்கும் தேவையற்ற அமைதியைக் கண்டடைந்திருந்தார். அப்போது, கேள்விகள், பதில்களுக்கான தேவை எவையும் மிச்சமிருக்கவில்லை. ஏன், சுவாசிப்பதற்கான தேவைகூட எழவில்லை. இச்சி, இறுதியில் ஒரு கை தட்டும் ஓசையின் அமைதியை அப்போது கேட்டார்.

பிளாக் பெல்டின் உண்மையான பொருள்

ஒரு தற்காப்புக் கலை மாணவர், தன் ஆசிரியரின் முன்னர் தான் கடினமாக உழைத்து வாங்கவிருக்கும் கறுப்புப் பட்டையைப் பெறுவதற்காக மண்டியிட்டார். பல ஆண்டுகள் இடைவிடாத பயிற்சிக்குப் பிறகு, அந்த மாணவர் தன் படிப்பின் இறுதியை எட்டியிருந்தார். “இந்தப் பட்டையை உன்னிடம் அளிப்பதற்குமுன், நீ இன்னொரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்” என்றார் அந்த ஆசிரியர். இன்னொரு சுற்றுச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்த மாணவர், “நான் தயாராக இருக்கிறேன்”, என்றார்.

“இது ஒரு அடிப்படையான கேள்வி. அதற்கு நீ பதிலளிக்க வேண்டும். கறுப்புப் பட்டையின் உண்மையான பொருள் என்ன?” என்று கேட்டார் ஆசிரியர். “அது என் பயணத்தின் முடிவு. என் கடின உழைப்புக்குக் கிடைக்கும் சிறந்த தகுதியான வெகுமதி” என்று பதிலளித்தார் அந்த மாணவர். மாணவரின் பதிலில் திருப்தி இல்லை. “நீ இன்னும் கறுப்புப் பட்டையைப் பெறத் தகுதி பெறவில்லை. ஓராண்டுக்குப் பிறகு திரும்பி வா!” என்று மாணவரை அனுப்பிவிட்டார். ஓராண்டுக்குப்பிறகு, மீண்டும் ஆசிரியரின் முன் அந்த மாணவர் வந்து மண்டியிட்டார். ஆசிரியர் மீண்டும் அதே கேள்வியையே கேட்டார், “கறுப்புப் பட்டையின் உண்மையான பொருள் என்ன?”.

“நம் கலையின் தனித்துவமான சின்னம், மிக உயர்ந்த சாதனை” என்று பதிலளித்தார் அந்த மாணவர். மீண்டும் ஆசிரியர் வேறு பதில்களுக்காகக் காத்திருந்தார். இன்னும் திருப்தியடையாததால், “நீ இன்னும் கறுப்புப் பட்டையைப் பெறுவதற்குத் தகுதி பெறவில்லை. ஓராண்டுக்குப்பிறகு, திரும்பி வா” என்று அனுப்பிவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு, மீண்டும் வந்த மாணவர், ஆசிரியரின் முன்னர் மண்டியிட்டார். “கறுப்புப் பட்டையின் உண்மையான பொருள் என்ன?” என்று கேட்டார் ஆசிரியர். “கறுப்புப் பட்டை ஒரு தொடக்கத்தைக் குறிக்கிறது. அது ஒரு கலை, அது ஒரு பணி, எப்போதும் உயர்ந்த தரத்தைப் பின்பற்றும் முடிவற்ற பயணத்தின் தொடக்கம்” என்று பதிலளித்தார் மாணவர். “ஆமாம், இப்போது இந்தக் கறுப்புப் பட்டையைப் பெறுவதற்கு நீ தகுதியடைந்துவிட்டாய். உன் பணியைத் தொடங்கு” என்று அந்த மாணவரிடம் கறுப்புப் பட்டையை வழங்கினார் ஆசிரியர்.

- கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x