Published : 05 Sep 2015 01:10 PM
Last Updated : 05 Sep 2015 01:10 PM

சீக்கிரம் மரம் வளர்ப்பது எப்படி?

புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான். ஆனால் சிறிய மரக் கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள்தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கி விடுகிறது. ஆடு மாடுகள் மரக் கன்றுகளை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். ஆடு மாடு வராத இடமாயிருந்தால் காற்றில் வளைந்து ஒடிந்துவிடாமல் கம்புகளை நட்டு மரக்கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். இப்படிப் பல வேலைகள் உள்ளதாலேயே பலருக்கும் மரம் வளர்ப்பு மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்படுகிறது.

மரம் வெட்டி நடுதல்

இந்தக் கஷ்டம் எதுவும் இல்லாமல் விரைவில் மரம் வளர்க்கக் கூடிய எளிதான முறை மரத்தை வெட்டி நடுதல் ஆகும். வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றியும் பெரும்பாலும் வேப்பமரம் வளர்ப்பதையே அதிகம் விரும்புவார்கள். வேப்பமரம் குளுமையான காற்றைத் தருவதோடு மருத்துவ குணமும் உள்ளதால் எல்லோராலும் பெரிதும் விரும்பப் படுகிறது. வெட்டி வைத்தால் நன்கு வளரக்கூடிய மரங்களுள் வேப்பமரம் முதன்மையானது.

மரம் நடும் காலம்

வேப்பமரம் எல்லா காலங்களிலும் நன்கு வளரும் மரம் என்றாலும் வெட்டி மரம் நடுவதற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக் காலத்திற்கு முந்தைய மாதமாகும். அதாவது ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் வெட்டி நடுவது சிறந்ததாகும். ஏனெனில் வெட்டி நட்ட மரம் வேர் விட ஆரம்பிக்கும் போது செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழைக் காலம் தொடங்குவதால் இதமான சூழ்நிலை நிலவும். இந்தச் சூழல் மரம் நன்கு வளர உதவும்.

விவசாயப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் வேப்பமரங்கள் தானாய் அதிகம் வளரும் மரமாகும். இம்மரங்களில் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரையுள்ள மரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நேராக ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரங்களை உடனடியாக வெட்டி எடுக்காமல் முதலில் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

பின்னர் மரத்தைச் சுற்றி குழியைத் தோண்டி ஆணி வேர் தவிர மற்ற வேர்களை அரிவாளால் வெட்டி விட்ட பின் மண்ணைத் தள்ளி மூடி விட வேண்டும். ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ கழித்து மீண்டும் மண்ணைத் தோண்டி ஆணி வேரை வெட்டி எடுத்து மரத்தை உடனடியாக நட வேண்டும். ஏற்கெனவே வெட்டிவிட்ட இடங்களில் புதிய வேர்கள் வளர ஆரம்பித்திருக்கும். கிளைகளும் துளிர் விட்டிருக்கும். இதனால் மரங்கள் வைத்த உடனேயே முளைக்க ஆரம்பித்துவிடும்.

மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டியவை

மரம் நடும் இடத்தில் மூன்று அடி ஆழக் குழியை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தோண்டி வைத்திருக்க வேண்டும். மரம் நடும் நாளில் குழிக்குள் முதலில் மாட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களைப் போட வேண்டும். பின்னர் களிமண் அல்லது செம்மண் கொஞ்சம் போட்டு நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பின் மரத்தை நட்டு குழியை மண் போட்டு மூட வேண்டும். மூடிய மண்ணை நன்கு இறுக காலால் மிதித்து விட வேண்டும். மண்ணை நன்கு இறுக மிதிப்பதால் மரம் எந்த விதத்திலும் ஆடாது. இப்படி நடும் மரங்களில நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவீத மரங்கள் முளைத்துவிடும்.

மரத்தின் விலை

மிகப் பெரிய வேப்பமரத்தை வெட்டி நட்டால்கூட முளைக்கும். ஆனால் உறுதியாய்ச் சொல்ல முடியாது. இரண்டு முதல் ஐந்து வருட வயதுள்ள வேப்ப மரங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி நடும்போது அம்மரங்கள் பட்டுப் போகாமல் நிச்சயம் வளரும். தோட்டங்களில் மொத்தமாக மரங்களை வாங்க முடியும்.

வேப்பமரம் ஒன்று 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன. வீட்டு வேலை ஆரம்பிக்கும் போது மரத்தை வெட்டி நட்டால் வேலை முடிவதற்குள் மரங்கள் நிழல் தரும் அளவிற்கு வளர்ந்துவிடும். தண்டு தடிமனான மரங்களை நடுவதால் ஆடு மாடு கடிக்கவோ காற்றில் முறிந்து விழவோ வாய்ப்பே இல்லை.

கிராமங்களில் அதிகம் நடைமுறையில் உள்ள இம்முறையை நகரங்களிலும் பயன்படுத்தி உடனடிப் பலன் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x