Published : 02 Jun 2020 09:27 AM
Last Updated : 02 Jun 2020 09:27 AM

கரோனா வாழ்க்கை: விளையாட்டு இனி என்னவாகும்?

டி.பிரசன்ன பாலாஜி

கரோனா வைரஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் இல்லா உலகம் எப்போது ஏற்படும் என்ற கேள்விக்கு இப்போதைக்கு யாரிடமும் பதில் இல்லை. சில மாதங்கள் ஆகலாம், இன்னும் சில ஆண்டுகள்கூட ஆகலாம் என்பதே யதார்த்தம். அதேவேளையில், கரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல் இந்த உலகம் இருக்காது என்பது மட்டும் நிதர்சனம்.

கரோனா வைரஸின் தாக்கத்தால் இன்று அனைத்து துறைகளும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இதிலிருந்து ஒவ்வொரு துறையும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், விளையாட்டுத் துறை மீள சற்று கூடுதல் கவனம் தேவை. கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களுக்கு எந்தச் சர்வதேச போட்டிகளும் நடைபெறாது என்ற நிலை உருவாகியுள்ளது.

மற்ற துறைகளில் ஒருவருக்கொருவர் இடையே சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது சாத்தியம். ஆனால், கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது சவாலானது. கிரிக்கெட்டில் பந்தைப் பளபளப்பாக்க எச்சிலை தொட்டு துடைக்க தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல கிரிக்கெட்டில் விக்கெட்டை கைப்பற்றும்போதும், கால்பந்தில் கோல் அடிக்கும்போதும் வீரர்கள் உற்சாக மிகுதியில் கட்டித் தழுவிக் கொண்டாடுவது வழக்கம். இனி அதற்கும் கட்டுப்பாடுகள் வரலாம். விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்களை அனுமதிப்பதில் பெரும் சிக்கல்கள் எழலாம்.

தேசிய அளவிலான போட்டிகள் என்றால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுடனும், சர்வதேச போட்டி என்றால் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடனும் சேர்ந்து விளையாடுவதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவுசெய்தாலும், அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை, விளையாட்டுத் துறையில் நிறைய மாற்றங்கள், கட்டுப்பாடுகள், புதுமைகள் வரப்போகின்றன.

கரோனாவுடன் சேர்ந்து இதையும் நாம் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x