Published : 13 Apr 2020 09:59 AM
Last Updated : 13 Apr 2020 09:59 AM

ரிஷபம் - தமிழ்ப் புத்தாண்டு சார்வரி வருடப் பலன்கள் 14.04.2020 முதல் 13.04.2021 வரை

ரிஷப ராசி வாசகர்களே!

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள் நீங்கள். புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து சக்திவாய்ந்த நிலைக்கு முன்னேறுவீர்கள். பேச்சிலிருந்த முணுமுணுப்பு, சலிப்பு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். இனி, குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்ன சின்னக் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வாரிசு உண்டாகும். அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கூடி வரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். வீட்டில் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவிதக் கவலை, சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். புதியவர் யாரையும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச முடியாத நிலை வந்து போகும். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

1.09.2020 முதல் கேது ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். சிறு சிறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியது வரும். மனைவி வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் லேசாகத் தலைசுற்றல், கனவுத்தொல்லை, அவ்வப்போது முன்கோபம் வந்துபோகும். வீடு, வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்சினை தீரும்.

14.04.2020 முதல் 25.12.2020 வரை சனிபகவான் அஷ்டமத்துச் சனியாக இருப்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். உரிமைக்காக நீதிமன்றங்கள் செல்ல நேரிடும். ஆனால், 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை 9- ம் வீட்டுக்குச் சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வீண் அலைச்சல், பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்கும் நீங்கள், நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். லேசாகத் தலைவலி, உடல் சோர்வு வந்து நீங்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்டகாலமாகப் போகாமல் இருந்த குலதெய்வக்கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

17.11.2020 முதல் 12.12.2020 வரை உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும். டி.வி., ஃப்ரிட்ஜ் பழுதாகும். விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில உத்திகளைக் கையாள்வீர்கள். ஆனி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது ஊழியர்களையும் பணியில் அமர்த்துவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பங்குதாரர்களுடன் பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் ஆனி, ஆவணி மாதங்களில் உண்டு. அவ்வப்போது வேலைச்சுமை, படபடப்பு என வந்தாலும் கலகலப்பான சம்பவங்களும் உண்டு. உயரதிகாரியுடன் நெருக்கமாக இருந்தாலும் சக ஊழியர்களால் தொந்தரவு உண்டு.

இந்த சார்வரி ஆண்டு அடுத்தடுத்து வேலைச் சுமையால் ஆரோக்கியத்தைக் குறைத்தாலும், அவ்வபோது வெற்றியையும், வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாணவரதராஜரைச் சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x