Published : 02 Apr 2020 08:53 AM
Last Updated : 02 Apr 2020 08:53 AM

ஜென் துளிகள்: கொட்டுவது தேளின் இயல்பு

தொகுப்பு: கனி

இரண்டு துறவிகள் தங்கள் உணவுக் கிண்ணங்களை ஆற்றில் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவர்கள் இருவருமே பார்த்தனர். ஒரு துறவி, உடனடியாக அந்தத் தேளை எடுத்துக் கரையில் விட்டார். அவர் எடுத்துக் கரையில் விடும்போது, தேள் அவரைக் கொட்டிவிட்டது.

அவர் கைகளை உதறிக்கொண்டு மீண்டும் தன் உணவுக் கிண்ணத்தைக் கழுவும் பணியில் ஈடுபட்டார். அப்போது மீண்டும் தேள் ஆற்றில் விழுந்துவிட்டது. மீண்டும் தேளைக் காப்பாற்றியபோது, துறவியை மீண்டும் தேள் கொட்டிவிட்டது. இன்னொரு துறவி, “நண்பரே, தேளின் இயல்பு கொட்டுவதுதான் என்று தெரிந்தும் நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் தேளைக் காப்பாற்றுகிறீர்கள்? என்று கேட்டார். “ஏனென்றால், காப்பாற்றுவது என் இயல்பு,” என்று பதிலளித்தார் அந்தத் துறவி.

நீங்களே செய்தி கிடையாது

“இந்த விஷயத்தை உங்கள் கண்ணிமைகளுக்குள் பச்சைகுத்திக் கொள்ளுங்கள்: நீங்கள் வெறும் செய்தி கொண்டு வருபவர்தான், நீங்களே செய்தி கிடையாது. நீங்களும் மற்றவர்களைப் போலதாம்’, என்ற ஆலோசனையை ஜென் குரு ஒருவர் தன்னிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஆசிரியர்களிடம் கூறினார்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டனர் பயிற்சி ஆசிரியர்கள்.

“‘உதவி எதுவும் கிடைக்காவிட்டால் எதிரிகளால் முற்றுகையிடப்படுவதற்குத் தயாராக இருந்த ஒரு நகரத்தின் கதையிலிருந்து தொடங்குகிறேன். நிலைமை மோசமாக இருந்தபோது, தூதர் ஒருவர் எதிரிகளின் பக்கம் சென்று, ஷோகன் படை காலையில் தாக்கி, படையெடுத்து வந்திருப்பவர்களைத் தோற்கடிக்கும் என்ற செய்தியைத் தெரிவித்தார். அந்நகரத்து மக்கள் அந்தத் தூதரைச் சாகச வீரரைப் போல நடத்தினர்.

சொல்லியபடியே வந்த ஷோகன் படை வெளியேறியவுடன், அந்தத் தூதரை அந்நகரத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் அம்மக்கள். தூதர் நல்ல மனிதராக இருந்தாலும், விரைவில் தான் ஒரு தகுதியற்ற தலைவர் என்பதை நிரூபித்தார். அவர் புகழ் குறைந்து தலைவர் பதிவியிலிருந்து விலக வேண்டியிருந்தது’. “இந்தக் கதையின் பாடம் இதுதான்: புத்தர் அளித்த அரிய பரிசான செய்தியை எப்போதும் செய்தி கொண்டு வருபவருடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.

நீங்கள் வெறும் செய்தியாளர்கள்தாம். உங்கள் ஞானம் நிறைந்த பேருரைகளால் பார்வையாளர்களை ஈர்க்கும்போதும், உங்கள் மாணவர்கள் தங்கள் மனங்களைச் சீராக வார்த்தற்காகப் பாராட்டும்போது, நீங்கள் ஒரு சிறப்பானவராக நடத்தப்படும் போது சரி, நீங்கள் எப்போதும் உங்கள் கண்ணிமைகளுக்குள் பச்சைகுத்தி வைத்திருக்கும் விஷயத்தை நினைவு கூருங்கள்: நீங்கள் செய்திகொண்டு வருபவர்தான். செய்தி அல்ல. நீங்களும் மற்றவர்களைப் போலதாம்” என்றார் ஜென் குரு.

ஒரு முயலைக் கூடப் பிடிக்க முடியாது

தற்காப்புக்கலை மாணவர் ஒருவர் தன் ஆசிரியரிடம், “தற்காப்புக் கலையில் என் அறிவை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதனால், உங்களிடம் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் நான் வேறோர் ஆசிரியடமும் வேறொரு தற்காப்புக்கலைப் பாணியைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனது இந்த யோசனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது,” என்று அந்த மாணவருக்குப் பதிலளித்தார் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x