Published : 28 Mar 2020 08:39 AM
Last Updated : 28 Mar 2020 08:39 AM

கரோனா: புரிந்துகொள்ள வேண்டிய சொற்கள்

முகமது ஹுசைன்

கரோனாவைக் குறித்த சரியான புரிதலே, வதந்திகளைக் கட்டுப் படுத்து வதற்கும் அச்சத்தை அகற்று வதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் நோயை எதிர்கொள்வதற்கும் ஒரே வழி. கரோனா குறித்த புதிய சொற்களுக்கான சரியான விளக்கத்தை அறிவது, நோயின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

உலகளாவிய தொற்றுநோய் (Pandemic)

இந்த வகைப்பாடு ஒரு தொற்று நோய்ப் பாதிப்பின் அளவைக் குறிக்கிறது. அந்தத் தொற்றுநோயின் அளவு, ஒரு சமூகத்தில் வழக்கமான அளவுக்குள் ஆண்டுதோறும் இருந்தால், அது ‘வட்டார நோய்’ (endemic). எப்போதாவது இந்தத் தொற்றுநோயின் அளவு, வரையறுக்கப்பட்ட அளவைக் கடந்து திடீரென்று அதிகரிக்கும்போது அது கொள்ளை நோய் (epidemic).

கொள்ளைநோய் என்பது திடீர் அதிகரிப்பைக் குறிக்கும். இந்த அதிகரிப்பு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் பரவுவது, திடீர் தீவிரத்தொற்று (outbreak). இந்தக் கொள்ளை நோயானது, பல நாடுகளிலோ கண்டங்களிலோ பரவி, ஏராளமானோரை பாதிக்கும்போது, அது உலகளாவிய தொற்றுநோய் அல்லது உலகளாவியப் பெருந்தொற்று (Pandemic) எனப்படுகிறது. கோவிட்-19-ஐ ஓர் உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

நோய்க்குறியற்ற (Asymptomatic carriers) கடத்துநர்கள்

வைரஸ்-பாக்டீரியா போன்ற கிருமிகள், பாதிக்கப் பட்டவர், சுற்றுச்சூழல் ஆகிய மூன்றுக்கும் இடையிலான தொடர்பால் ஏற்படும் தொற்றுச் சங்கிலியின் மூலமே, ஒரு தொற்றுநோய் பரவுகிறது. வைரஸை கொண்ட மனிதர்களும் வைரஸைக் கடத்தும் மனிதர்களும், இந்தத் தொற்று நோயின் பாதிப்புகளைக் வெளிக்காட்டலாம் அல்லது வெளிக்காட்டாமலேகூட இருக்கலாம். நோய்க் குறியற்ற (Asymptomatic carriers) கடத்துநர்கள் என்பவர்கள், நோயால் பாதிக்கப்பட்ட பின்னரும், நோயின் எந்த அறிகுறியுமற்று ஆரோக்கியமாக இருப்பதுபோல் தோன்றுவார்கள்.

நோய் அடைகாலக் கடத்துநர்கள் (Incubatory carriers)

# நோயின் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே, அதாவது வைரஸ்கள் உடலில் பெருகுவதற்குமுன் நோய்க்குறிகள் வெளித்தெரியாது. அப்போது வைரஸைக் கடத்தும் திறன் கொண்டவர்கள் நோய் அடைகாலக் கடத்துநர்கள்.

நோய்மீளும் காலக் கடத்துநர்கள் (Convalescent carriers)

# தொற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பின்னரும், நோயைப் பரப்பும் திறன் கொண்டவர்களே ‘நோய்மீளும் காலக் கடத்துநர்கள்’.

# மேற்கண்டவர்கள் நோய்க்கிருமியால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணராததால், நோயைப் பரப்புகின்றனர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் இருப்பதில்லை.

தொற்றுப் பெருங்கடத்துநர் (Super spreader)

# ஒரே வேளையில் அதிக நபர்களுக்கு நோயைக் கடத்தும் வாய்ப்பு கொண்டவர். அதிக நபர்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர். இவருக்கு நோய்க்கிருமி பரவிவிட்டால், அது அடுக்கேற்ற முறையில் வேகமாகப் பரவிவிடும். இவர்களைப் போன்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு சமூக விலகல் தேவைப்படுகிறது.

சமூக நோய்ப் பரவல் (Community transmission)

ஒரு நோய்த்தொற்று யாரிடமிருந்து தொற்றியது என்பதை அடையாளம் காண முடியாதபடி, ஒரு சமூகத்துக்குள் தொற்றுநோய் பரவியிருந்தால், அது சமூக நோய்ப்பரவல் (Community transmission). இதன் தொடர்ச்சியாக தொற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால், அதுதான் நிலை (நோய் நிலை - 3). அந்த நிலை, இந்தியா இதுவரை பார்த்திராத ஒன்றாக அமையும்.

சமூக எதிர்ப்பாற்றல் அல்லது சமூக நோய்ப்பாதுகாப்பு (Herd immunity)

மக்கள்தொகையில், கணிசமான பகுதி யினருக்கு வைரஸை அழிக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால், எஞ்சியுள்ள மக்களும் மறைமுகமாக இந்த ‘சமூக எதிர்ப்பாற்றல்’ மூலம் பாதுகாக்கப்படுவார்கள். இந்த நிலை ஏற்படுவதற்கு, ஏராளமானோர் முதலில் இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகி, எதிர் அணுக் களைத் (ஆன்டிபாடிகளை) தம்முள் உருவாக்க வேண்டும். இதுவே இயற்கையான நோய்ப் பாதுகாப்புச் செயல்முறை. அதாவது, அதிக எண்ணிக்கையிலான மக்கள் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களாக இருந்தால், அந்தத் தொற்றுநோய் அவர்கள் வாழும் சமூகத்தில் பரவாது.

ஆனால் கோவிட்-19, கரோனா வைரஸின் புதிய துணையினம். அதைப் பற்றி நமக்குப் போதுமான அளவு தெரியாது. அதற்கு எதிராகச் செயலாற்றும் நோய் எதிர்ப்பாற்றல் நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது என்பது உறுதியாகத் தெரியாது. இறப்பு விகிதம் அதிகம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், சமூக எதிர்ப்பாற்றல் பற்றிப் பேசுவது சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்.

சமூக விலகல் (Social Distancing)

ஒரு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிர்க்கவும் முடிந்தவரை வீட்டிலேயே தங்கி, பொது இடங்கள், போக்குவரத்து, கூட்டம் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் சமூகத் தொடர்பைக் குறைந்தபட்சமாக வைத்திருப்பதே சமூக விலகல் (Social Distancing). இது தனிமைக் கண்காணிப்பு (Quarantine), தனிமைப்படுத்துதல் (Isolation) ஆகியவை இவற்றிலிருந்து வேறுபட்டவை.

தனிமைக் கண்காணிப்பு (Quarantine)
தனிமைப்படுத்துதல் (isolation)

நோய் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் ஒருவருக்கு ஏற்படும் நிலையில், தனிமைக் கண்காணிப்பு அவருக்குத் தேவைப்படும். அதேநேரம் நோயின் பாதிப்புக்கு உள்ளான, அதிக ஆபத்துள்ள நபர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத நபர்களுக்கு இந்தத் தனிமை அவசியம். இந்த நிலையில், அவர்கள் ஒரு தனியறையில் வைக்கப்படுவார்கள். ஒரு சிலர் மட்டுமே, போதுமான பாதுகாப்புக் கவசங்களை அணிந்தபடி, அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியான மனிதர்கள், மருத்துவமனையின் தனிமைப்படுத்துதல் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். அந்த அறையின் காற்று வடிப்பான் (Air filter), தளம், சுவர் உள்ளிட்டவை கடுமையான கட்டுப்பாடுகளின்படி வடிவமைக்கப் பட்டிருக்கும். ஒருவர், தன்னை சுய-நோய்த்தொற்றுத் தனிமைக்கு (Self-isolation) உட்படுத்தினால், 14 நாட்களுக்கு அவர் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து அவர் விலகியிருக்க வேண்டும்.

வரைபட வளைவை நேராக்குதல்

ஒரு புவியியல் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையையும், அந்தப் பகுதியில் பாதிப்பு நீடித்துவரும் நாட்களும் ஒரு வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும். அப்போது, நோய் பரவல் வீதத்தின் ஏற்ற இறக்கமும், உச்சத்தை அடைந்த நாளையும் கொண்ட ஒரு தலைகீழ் V வளைவு கிடைக்கும். அந்த வளைவு எந்த அளவுக்குச் செங்குத்தாக உயர்கிறதோ, அந்த அளவுக்கு நோயின் பரவும் வேகம் தீவிரமடையும். அந்த வளைவின் சரிவு எந்த அளவு வேகமாக இறங்குகிறதோ, அந்த அளவுக்கு நோய் எதிர்பாற்றல் எல்லோருக்கும் கிடைக்கும். நமது பொது சுகாதார அமைப்பு, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே கையாளக்கூடிய நிலையில் உள்ளது.

மருத்துவமனைப் படுக்கைகள், அத்தியாவாசியப் பொருட்கள் தீரும் நிலையை நோக்கி விரைகின்றன. எந்த நோயாளிக்குக் கூடுதல் கவனம் செலுத்திக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயத்துக்கு மருத்துவர்கள் தள்ளப்படும் நிலையும் ஏற்படும்.
‘வளைவை நேராக்குதல்’ என்றால், தினசரி எத்தனை நபர்களுக்கு சிகிச்சையளிக்க முடியுமோ, அதற்குள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக்கொண்டு வருவது. இது மருத்துவ ஊழியர்கள் மீதான பணி அழுத்தத்தைக் குறைக்கும். இதற்காக, மக்கள் தடைகளைக் கடைப்பிடிக்க வேண்டிவரும். குறிப்பாக சமூக விலகல்.

உணர்வுப்பூர்வ விலகல் (Emotional distancing)

சமூகத்திலிருந்து விலகியிருப்பதால் (Social Distancing) ஏற்படும் தேவையற்ற பக்கவிளைவே உணர்வுப் பூர்வ விலகல் (Emotional distancing). நீண்ட காலத்துக்கு சமூகத்திலிருந்து விலக்கியிருப்பது எளிதல்ல. தனியாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் சமமானவையல்ல. அரசின் தினசரி அறிவிப்புகள் அச்சமூட்டும் அளவுக்கு இருந்தால், அவற்றிலிருந்து மனத்தை விலக்கிவைக்கும் பயிற்சியை சிறிது நேரம் மேற்கொள்ளலாம். அந்த இடைவெளி ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கும், மன அமைதியைக் கொடுக்கும், எண்ணங்களைச் சமநிலைப்படுத்த உதவும்.

நன்றி: The Hindu MetroPlus
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x