Published : 23 Mar 2020 08:51 AM
Last Updated : 23 Mar 2020 08:51 AM

வரி சேமிப்புக்கான நேரம் இது

ப்பு நிதி ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு வார காலமே உள்ளது. முதலில் உங்கள் வருமானத்துக்கு எந்த அளவுக்கு வரி வருகிறது என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் முதலீடுகளை திட்டமிட வேண்டும். முதலில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான சேமிப்புக்கு பிரிவு 80 சி-ன்கீழ் விலக்கு பெறமுடியும். இதற்கு உங்களது பிஎஃப் பிடித்த அளவில் உங்களது பங்களிப்பு தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும். அதேபோல வீட்டுக் கடன் மீதான சுலப தவணையில் வட்டி நீங்கலான தொகை, குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் (2 பேருக்குமட்டும்) உள்ளிட்டவற்றில் செலுத்தப் படும் தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

இவை தவிர வருமான வரி சேமிப்புக்கு பல வழிகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கான டேர்ம்- டெபாசிட் (காப்பீடுடன் கூடியது) உள்ளிட்டவற்றுக்கு விலக்கு உண்டு. உங்களது நீண்டகால அல்லது குறுகியகால முதலீட்டு இலக்குகளைத் தீர்மானித்து இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

சிறுசேமிப்பு திட்டங்கள்

வருமான வரி 80-சி பிரிவில் விலக்கு அளிக்கப்படும் தொகை அளவுக்கு, உங்கள் முதலீடுகள் இல்லாதபட்சத்தில் வரி சேமிப்பு திட்டங்களை வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் தொடரலாம். ஐந்து ஆண்டுகால வரையான இவற்றுக்கு வரி விலக்கு உண்டு.

வரி சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் தற்போது 6.25 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன. தபால் அலுவலக சேமிப்புகளுக்கு 7.7 சதவீத அளவுக்குவட்டி தரப்படுகின்றது. இந்த முதலீடுகளுக்கு வரி விலக்கு தரப்படும் அதேசமயம், பெறப்படும் வட்டித் தொகை வரி விதிப்புக்குட்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெறப்படும் வட்டித் தொகைக்கும் வரி விதிக்கப்படக்கூடாது என்று கருதினால், தேசிய சேமிப்பு பத்திரத்தில்(என்எஸ்சி) முதலீடு செய்யலாம்.இதற்கு 7.9 சதவீத கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது. வட்டியை இத்திட்டத்திலேயே மறு முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம்.

மூத்த குடிமக்களைப் பொறுத்தமட்டில் இரட்டை ஆதாயம் உண்டு. வங்கி சேமிப்புகளில் அவர்கள் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்வரை வட்டித் தொகையை வருமானமாகப் பெறலாம். அது ஒருவகையில் ஆதாயம்என்றாலும், வங்கிகளும் தபால் அலுவலகங்களும் மூத்த குடிமக்களுக்கு அரை சதவீத அளவுக்கு கூடுதலாகவட்டி அளிக்கின்றன. தங்களது வரிச்சுமையைக் குறைத்துக்கொள்ள, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புதிட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ் தபால்அலுவலகங்களில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு ஐந்து ஆண்டுகளில் முதிர்வடையக்கூடியது. இத்திட்டத்துக்கு 8.6 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. காலாண்டு அடிப்படையில் வட்டி அளிக்கப்படுகிறது.

ஓய்வுக்கால திட்டமிடல்

வரி சேமிப்பு தவிர, சில முதலீடுகள் ஓய்வுக்காலத்தில் உங்களுக்கு கணிசமான தொகை சேர்வதற்கு வழிவகுக்கும். ஆனால் இத்தகைய முதலீடுகள் நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளாகும். இபிஎஃப் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் 80-சி பிரிவில் விலக்கு பெறலாம்.

இதுதவிர, தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் (என்பிஎஸ்) முதலீடு செய்யலாம். என்பிஎஸ்-1 திட்டத்தில் முதலீடு செய்வதால், 80 சிசிடி பிரி வில் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். இது 80-சி பிரிவில் கிடைப்பதைவிட கூடுதல் ஆதாயமாகும். உங்களது வட்டி எதிர்பார்ப்பை பொறுத்து, நீங்கள் உங்கள் முதலீட்டில் எவ்வளவு தொகை கடன் பங்குகள் மற்றும் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்பதை தீர்மானிக்கலாம்.

குறைந்தகால பிபிஎஃப் திட்டத்தை விரும்பினால் 15 ஆண்டுகளை தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டின்இறுதியிலும் இதற்கான வட்டி அறிவிக்கப்படும். 2020-ம் நிதி ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிபிஎஃப் நிதியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது 7.9 சதவீத வட்டியாக உள்ளது. என்பிஎஸ் திட்ட முதலீட்டு லாபமான சந்தை அபாயங்களுக்குஉட்பட்டதாகும்.

இபிஎஃப் முதலீட்டில் உங்களது பங்களிப்பு அதிகரித்திருந்தாலும் அதற்கு கிடைக்கும் வட்டி மற்றும் மொத்த தொகைக்கும் வரி விலக்கு உண்டு. அதேசமயம், என்பிஎஸ் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் பெறப்படும் ஆதாயத்தில் 60 சதவீதம் வரை வரி விலக்கின்றி பெற்றுக் கொள்ளலாம். எஞ்சிய 40 சதவீத தொகையை ஆண்டுதோறும் பெறலாம்.

சிறிது ரிஸ்க் எடுத்தாலும் அதிக வட்டி தேவை என்போருக்கு, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டம் (இஎல்எஸ்எஸ்) மிகவும் ஏற்றதாகும். இதில் வரி சேமிப்பும் உண்டு.

காப்பீடு

நீங்கள் போதிய அளவு காப்பீடு செய்யாமலிருந்தால், முதலில் காப்பீட்டில் முதலீடு செய்யுங்கள். ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியத்துக்கு (மொத்தக் காப்பீடு பிரீமியம் அளவைக் காட்டிலும் 10 மடங்கு இருக்க வேண்டும்.) 80-சி பிரிவின்கீழ் வரி விலக்கு கிடைக்கும். எனவே உங்களது ஆண்டு ஊதியத்தில் 10 மடங்கு அளவுக்கு காப்பீடு செய்யுங்கள். அல்லது டேர்ம்பிளான் திட்டத்தில் வழக்கமான யுலிப் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு செய்வது அவசியம். இதன் மூலம் அவசரகால மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடிவதோடு வருமான வரியையும் சேமிக்கலாம். 80-டி பிரிவில் அதிகபட்சம் 25 ஆயிரம்(மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை) மருத்துவக் காப்பீட்டு திட்டங் களுக்கு விலக்கு பெறமுடியும்.

மேலும், தற்போது வருமான வரி விதிப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப வரிச் சலுகைகிடைக்குமா என்பதை ஆராய்ந்து, ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வது மிகவும் சிறந்ததாக இருக்கும். ஏற்கெனவே உள்ள வரி திட்டத்தில் தொடர்வதா அல்லது புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதால் பயன் உண்டா என்பதை கலந்து ஆலோசித்த பின்னர் முடிவெடுப்பது மிகவும் சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x