Published : 16 Mar 2020 09:50 AM
Last Updated : 16 Mar 2020 09:50 AM

கூடுதல் ஆதாயம் தரும் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் 

சுரேஷ்குமார், இயக்குநர்,
ராம் அட்வைஸரி பிரைவேட் லிமிடெட்.

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (debt mutual funds) பெரும்பாலும் மற்ற ஃபண்ட் முதலீடுகளைக் காட்டிலும் சற்று கூடுதலான ஆதாயம் கிடைக்கும். இத்தகைய நிதிய திட்டங்களில் திரட்டப்படும் முதலீடுகளுக்கு மற்ற முதலீட்டுத் திட்டங்களுக்கு தரப்படும் வட்டியைக் காட்டிலும் கூடுதலாக தரப்படும். அதற்குக் காரணம் இந்த முதலீடுகளில் திரட்டப்படும் நிதியங்கள் பெரும்பாலும் ‘ஏஏ’ மற்றும் ‘ஏ’ தரச்சான்று பெற்ற திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என்பதால்தான்.

இத்தகைய முதலீடானது அதிக ரிஸ்க்கானது. இதனாலேயே இந்த முதலீட்டு திட்டங்களுக்கு அதிக வட்டி தரப்படுகிறது. இத்தகைய முதலீட்டு திட்டங்களில் திரட்டப்படும் நிதித் தொகையில் 65 சதவீதம் வரை ‘ஏஏ’ சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இதனாலேயே இவை கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

இவற்றில் திரட்டப்படும் நிதிகள் மற்ற பாதுகாப்பான நிதி திட்டங்கள் குறிப்பாக ‘ஏஏஏ’ சான்று பெற்ற திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதில்லை. ஏனெனில் இவற்றின் மூலமான ஆதாயம் குறைவு.

அதிகபட்சம் 9 சதவீதம் வரை...

இத்தகைய முதலீட்டு திட்டங்கள் ரிஸ்க்கான திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால் இதில் முதலீடு செய்யப்படும் கடன் பத்திரங்களுக்கு அதிக வட்டி அளிக்கப்படுகிறது. இதனாலேயே இத்தகைய முதலீட்டு திட்டங்களால் அதிக வட்டி அளிக்க முடிகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு மற்ற முதலீட்டு திட்டங்களை விட அதிக வட்டி அளிக்க முடிகிறது. உதாரணத்துக்கு ‘ஏஏஏ’ சான்று பெற்ற நிதிய திட்டங்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். அதிகபட்சம் 7 சதவீதம் வரை அளிக்கப்படும். ஆனால், கிரெடிட் ரிஸ்க் முதலீடுகளுக்கு அதிகபட்சம் 9 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது.

ஆனால் இத்தகைய நிதிய திட்டங்கள் தற்போது

தான் அதிக அளவில் வெளியாகின்றன. இத்தகைய கிரெடிட் ரிஸ்க் கடன் பத்திரங்களை முன்னணி நிறுவனங்களே வெளியிட்டு நிதி திரட்டுகின்றன. 2018-ம் ஆண்டு செப்டம்பர் முதலான கால கட்டத்தில் சில நிறுவனங்கள் இத்தகைய பத்திரங்களுக்கு உரிய வட்டியை அளிக்கத் தவறிவிட்டன. இதனால் ஒருசில முதலீட்டாளருக்கு வரவேண்டிய வட்டி மட்டும் பாதிக்கப்படவில்லை, சிலரது முதலீடும் பாதிப்புக்குள்ளானது. இதனாலேயே முதலீட்டுச் சந்தை பாதிப்புக்குள்ளானது.

கவனம் வேண்டும்

கடந்த ஓராண்டு காலமாகவே இந்த நிதிய திட்டங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த முதலீட்டு திட்டங்கள் அனைத்துமே கணிக்க முடியாதவையாக உள்ளன. கடன் பத்திரங்கள் அளிக்கும் வட்டி குறித்து நிதி நிபுணர்களின் அணுகுமுறை வேறுவிதமானது.

அதாவது ஒரே காலகட்டத்தில் முதிர்வடையும் இரண்டு வெவ்வேறு வகையான கடன் பத்திரங்கள்; அதேசமயம் அவை இரண்டின் தரச் சான்றும் வெவ்வேறானவை. அத்தகைய சூழலில் முதலீட்டாளரின் ஆலோசனையானது குறைந்த தரச்சான்று உள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்யச் சொல்வதாகத்தான் இருக்கும். அதாவது முதலீட்டாளருக்கு அதிக ஆதாயம் கிடைப்பதுதான் பிரதானமாயிருக்கும் என்கின்றனர்.

அத்தகைய சூழலில் பிற புறச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. முதலீட்டு நிறுவனங்களின் செயல்பாடு, ரிஸ்க் கன்ட்ரோல் மீது நிறுவனத்தின் அணுகுமுறையை கவனத்தில் கொள்ள வேண்டும். நிதிய திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதில்திரட்டப்படும் முதலீடுகள் எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நிதிய நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் முதலீட்டு திட்டங்களை ஆராய்ந்து அறிவது அவசியம்.

அதிக ஆதாயம்

அதிக ஆதாயத்துக்காக கிரெடிட் ரிஸ்க் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால், முதலில் திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நிதிய திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதை எவ்விதம் செயல்படுத்துகின்றன என்பதை அறிய வேண்டும். பொதுவாக கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் திட்டமானது ஒட்டுமொத்தமாக உங்கள் கடன் சார் திட்ட முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதை உரிய வகையில் தேர்வு செய்வதன் மூலமே உங்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x