Published : 12 Mar 2020 11:59 AM
Last Updated : 12 Mar 2020 11:59 AM

திருச்சபையாளர் சாமுவேல் மோரிஸ்: அகாலத்தில் பறிக்கப்பட்ட மலர்

டேவிட் பொன்னுசாமி

ஆப்பிரிக்காவில் க்ரூ பழங்குடியினத்தில் பிறந்த சாமுவேல் காபூ மோரிஸ் ‘கருப்பு முத்து’ என்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் நினைவுகூரப்படுபவர். ஆப்பிரிக்காவில் ஐவரி கோஸ்ட் எனப்படும் இடத்திலுள்ள வனப்பகுதியில் 1873-ல் பழங்குடித் தலைவரின் மகனாகப் பிறந்தார்.

குழந்தைப் பருவத்திலேயே, அவரது இனத்தவர்கள், இன்னொரு பழங்குடி இனத்தவரால் வேட்டையாடப்பட்டு பணயமாகக் கொண்டு செல்லப்பட்டார். வென்ற பழங்குடியினத் தலைவன் சிறுவன் காபூவை கொடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கினான். ஒருநாள் கடுமையான சவுக்கடிகளுக்கு நடுவில் பிரகாசமான ஒளியொன்று காபூவின் மேல் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சிறுவன் காபூவின் கண்பார்வை பறிபோனது. இங்கிருந்து ஓடு என்ற குரல் கேட்டது. உடம்பு முழுவதும் ரத்தக் காயங்களோடு கிடந்த காபூவுக்கு எங்கிருந்து அத்தனை வலு வந்ததென்றே தெரியவில்லை. அவர் காட்டில் ஓடத் தொடங்கினார்.

இரவு முழுவதும் பார்வையில்லாமலேயே பயணித்து, மன்ரோவியா நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கு போர்ட் வெய்ன் கல்லூரியில் படித்தவரும் திருச்சபைப் பணியாளருமான நால்ஸ் அம்மையாரைச் சந்தித்தார். அப்போஸ்தலர் பாலின் வாழ்க்கையின் நடந்த நிகழ்வும் சாமுவேல் மோரிசுக்கு நடந்ததும் ஒன்றாக இருந்ததை உணர்ந்தார். 16 வயதில் அவருக்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. சீர்திருத்த கிறிஸ்தவ சபையின் உறுப்பினரானார். அப்போதிருந்து தான் அவர் சாமுவேல் மோரிஸ் என்று அழைக்கப்படலானார். உலகெங்குமிருந்து வரும் திருச்சபைப் பணியாளர்களுக்குக் கல்வியளிக்கும் அமைப்பான டெய்லர் பல்கலைக்கழகத்தை உருவாகுவதற்கான அடித்தளத்தை உருவாக்கியவர் இவர்.

அமெரிக்காவுக்குப் பயணம்

அடுத்த இரண்டு ஆண்டுகள் மன்ரோவியா நகரத்தில் வீடுகளுக்கு வண்ணமடிப்பவராகப் பணியாற்றினார். புனித ஆவியைப் பற்றி அறிந்துகொள்ளும் வேட்கை அவரிடத்தில் பெருகியது. லிஸ்ஸி மெக்நீல் என்பவர், அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய சாமுவேலைத் தூண்டினார். கையில் பணமின்றி, பயணிப்பதற்கு வழியுமின்றி மன்ரோவியாவிலிருந்து கால்நடையாக ராபர்ட் ஸ்போர்ட் துறைமுகம் இருக்கும் இடத்துக்கு தன் பயணத்தைத் தொடங்கினார். கடற்கரையில் அலைந்தும் தூங்கியும் நாட்களைக் கழித்தார்.

கப்பலில் பயணக் கட்டணத்துக்குப் பதிலாக கூலிவேலை செய்யலாமென்ற அடிப்படையில் தனது அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கினார். பயணத்தில் மாலுமிகளால் கடுமையான துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டார்.

சந்தோஷ துக்க நாடகம்

அமெரிக்காவில் நுழைந்தபோது ஸ்டீபன் மெரிட் அவரை கனிவுடன் வரவேற்றார். அப்போது மோசமான நிலையிலிருந்து டெய்லர் பல்கலைக்கழகத்தின் தலைவர் தாடியஸ் ரீட் இவருக்காக நம்பிக்கை நிதி என்ற ‘பெய்த் பண்ட்’-ஐ உருவாக்கி அவருக்கு வேதாகமக் கல்வியை அளிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். இதுதான் பின்னர் ‘சாமுவேல் நம்பிக்கை நிதி’ என்றழைக்கப்பட்டு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப விரும்பும் கருப்பின இளைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவியானது. இந்த நிதியின் மூலம்தான் வீழ்ச்சியில் இருந்த டெய்லர் பல்கலைக்கழகம் உயிர்த்து எழுந்தது. இன்றும் அப்பல்கலைக்கழக வளாகத்தில், சாமுவேல் மோரிஸ் நினைவகமாக உள்ள இடம் இதற்கு நற்சாட்சியாக உள்ளது.

பூமியின் அடித்தளம் இடப்படுவதற்கு முன்பாகவே கடவுள் மனிதர்களின் தலைவிதியையும் கடவுள் எழுதிவிடுகிறார். ஆப்பிரிக்கப் பழங்குடித் தலைவரின் வன்முறையிலிருந்து காப்பாற்றப்பட்டு நியூயார்க் வந்த சாமுவேல் மோரிஸ், டெய்லர் பல்கலைக்கழகத்தை உயிர்ப்பித்தார். அந்தப் பணி முடிந்தவுடனேயே கடவுள் தனது நேசத்துக்குரிய பிள்ளையை 21 வயதிலேயே அகாலத்தில் பறித்துக்கொண்டார். வாழ்க்கை என்ற தேவனின் கிருபை நிலவும் தோட்டத்தில் மகிழ்ச்சியும் துயரங்களும் ஒரு நாடகத்தைப் போல ஒன்றுகலந்தவை. சோதனைகள் வழியாக கடவுள் நமது ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துகிறார். அவரது காரியங்களை நமது வழியாகச் செய்து நித்தியத்துவத்துக்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x