Published : 06 Mar 2020 08:36 AM
Last Updated : 06 Mar 2020 08:36 AM

திரைப் பார்வை: தெய்வ வியாபாரியின் கதை - டிரான்ஸ் (மலையாளம்)

ஜெயகுமார்

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்வர் ரஷித் இயக்கியி ருக்கும் படம், வெற்றி இயக்குநர் அமல் நீரத் ஒளிப்பதிவு, ஃப்கத் பாசில்-நஸ்ரியா தம்பதி இணைந் திருக்கும் படம் என அறிவித்த நாள் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘டிரான்ஸ்’.

இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி, இந்தப் படம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம்வரை நீள்கிறது. ட்ரான்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் ‘மெய்மறதி நிலை’ எனலாம். இந்தப் படத்தின் பொருளும் அதுதான். மெய் மறக்கவைக்கும் பரம்பொருளின் பெயரால் நடக்கும் கூத்துகளைச் சொல்ல முயன்றிருக்கும் படம். அதாவது தெய்வத்தின் பெயரால் நடக்கும் வியாபாரம்.

நஸ்ரியா, செளபீன் ஷகீர், நாத் பாசி, விநாயகன், கெளதம் வாசுதேவன், செம்பன் வினோத், திலீஷ் போத்தன் எனப் பலர் இந்தப் படத்தில் இருந்தாலும் ஃபகத் என்னும் கலைஞனே படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார். இதற்கு அடுத்தபடியாக திலீஷ் போத்தனின் பங்களிப்பு பலம் சேர்க்கிறது. அன்வர் ரஷீத், அமல் நீரத், ரசூல் பூக்குட்டி எனச் சிறந்த கலைஞர்களின் கூட்டணி, படத்தைத் தொழில்நுட்பரீதியில் நேர்த்தியாக்கியிருக்கிறது.

தெய்வத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தைச் சொல்ல, மனநிலை சிதைந்த குடும்பத்தின் வாரிசை நாயகனாகக் கொண்டுள்ளது திரைக்கதை. அவனது குடும்ப உறுப்பினர்கள் இந்தச் சிதைவால் மரித்தும் போகிறார்கள். அவன், தன்னம்பிக்கை அளிக்கும் வியாபாரத்தைப் பகுதி நேரமாகச் செய்துவருபவன்.

தன்னம்பிக்கை அளிக்கும் வியாபாரத்துக்கும் மதபோதனை வியாபாரத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் படம் சித்தரிக்கிறது. மத நிறுவனங்களுக்குப் பின்னால் இயங்கும் கார்ப்பரேட் முகங்களைத் திரை விலக்கிக் காட்டுகிறது. ‘ரியாலிட்டி ஷோக்கள்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கட்டுக்கோப்பான திட்டத்துடன் நடத்தப்படுவதைப் போல், மத போதனை வகுப்புகளின் அற்புதங்களும் அப்படியே இந்தப் படத்தில் நடக்கின்றன.

படத்தின் நாயகனான ஃபாசிலின் மனச் சிதைவைத் துண்டு துண்டு காட்சிகள் மூலம் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். சீலிங் ஃபேன், வண்ண மீன்கள், மாத்திரைகள் என அந்தக் காட்சிகள் திரும்பத் திரும்ப மாண்டேஜாக வருகின்றன; அவை, அந்த மனத்தின் கசகசப்பைப் பார்வையாளர்களையும் உணரவைகின்றன. இதேபோல் சிதைவுற்ற லட்சபோலட்சம் மனங்களையும் ஒருசேரக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். படத்தில் உள்ள இந்த மதபோதனைக் காட்சிகளும் ஃபகத்தின் பிரசங்கமும் பார்வையாளர்களையும் மனப் பிறழ்வுக்கு உள்ளாக்கக் கூடியவையாக இருக்கின்றன.

கன்னியாகுமரியில் நடக்கும் முதல் பகுதியில் ஃபகத்தின் அன்றாடம் தெளிவாகச் சித்தரிக்கப்படவில்லை. மக்களை வசீகரிக்க மதபோதகர் சொல்லும் திருப்பம் மிக்க கதைகள், பல நூறு முறை கேட்ட முல்லா கதைகள்போல் இருக்கின்றன. மத நிறுவனங்கள், அதற்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் எனச் சுவாரசியம் அளிக்கும் விவரிப்பு, அதைத் தாண்டிச் செல்லவில்லை; படம் திணறியிருக்கிறது.

நஸ்ரியாவின் எஸ்தர் கதாபாத்திரம் துருத்தல். ஆனால், அவருக்கெனப் பின்னணிக் காட்சிகளும் இருக்கின்றன. அது தனிப் படம். மத போதகரின் வளர்ச்சி ‘அருணாசலம்’ போல் வேகவேகமாக நடக்கிறது. பின்னணிப் பாடல் இல்லை என்பது மட்டும்தான் குறை. படம் உருவாக்கும் கதாபாத்திரங்களின் தன்மையைப் படமே பல இடங்களில் மீறியிருக்கிறது. ஃபகத் மனப்பிறழ்வைச் சித்தரிப்பதிலேயே படம் பல இடங்களில் குழம்பிவிடுகிறது. படத்தின் முடிவு யதார்த்தத்துக்குச் சிறிதும் முகம் கொடுக்கவில்லை. படத்தில் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ள மனப் பிறழ்வுக்கு இந்தத் திரைக்கதையும் ஆளாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x