Published : 25 Feb 2020 08:34 AM
Last Updated : 25 Feb 2020 08:34 AM

திட்டமிட்டால் வெற்றி உறுதி

முகமது ஹுசைன்

நேரமில்லை என்று சொல்வதைப் பலர் பெருமையாக நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அது ஒரு குறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், காலம் யாருக்கும் எந்தச் சலுகையும் அளிப்பதில்லை.

“பிறகு நான் ஏன் நேரமின்மையால் படிக்க அவதிப்படுகிறேன்?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பது மட்டுமே, அதற்கான பதில். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது மிகவும் எளிது. நேரத்தைக் கைவசப்படுத்தி, தேர்வில் சாதிக்கும் எளிய வழிமுறைகள் சில:

நேர மேலாண்மை என்பது என்ன?

நம்முன் இருக்கும் செயல்களை அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒவ்வொரு செயலையும் முடிக்க ஆகும் நேரத்தைக் கணித்து, தகுந்த நேரத்தை அவற்றுக்கு ஒதுக்க வேண்டும். பின் அந்தச் செயல்களை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு செயலை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் சரியான முறையில் செய்து முடிப்பதுதான் நேர மேலாண்மை. இந்த நேர மேலாண்மை மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல்; தேர்வு எழுதுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்வின் லட்சியம்

உங்கள் வாழ்வின் லட்சியம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்று நினைப்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான், நமக்கும் படிப்பில் நாட்டமும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற உத்வேகமும் இருக்கும்.

படிக்கும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

படிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அடுக்கிவையுங்கள். பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றைப் படிக்கும் மேஜை மேல் பரத்தி வைக்காமல், அதற்கான பெட்டியில் அடுக்குங்கள். இவற்றின் மூலம் தேடுவதில் நேரம் விரயமாகாமல் தடுக்கலாம்.

திட்டமிட்டுப் படித்தல்

எந்தப் பாடம் முக்கியமானது, எதை முதலில் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு மதிப்பெண் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். பின், இந்தப் புரிதலின் அடிப்படையில் எப்படிப் படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அட்டவணை தயார்செய்யுங்கள்.

ஒவ்வொரு பாடத்துக்கும் அன்றாடம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் கடினமான பாடத்தை முதலில் படிக்கத் தொடங்குங்கள். அதிலிருந்து படிப்படியாக எளிதான பாடத்தைப் படிக்க நகருங்கள். ஏனென்றால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அது கடினமான பாடத்தை எளிதில் கிரகித்துக்கொள்ளும், தினசரி அன்று படித்ததை மீண்டும் வாசிப்பதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

நொறுக்குத் தீனி வேண்டாமே!

படிக்கும்போதே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பர்கர், பீட்சா, நொறுக்குத் தீனி போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிருங்கள். அது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தூக்கத்தையும் வரவழைக்கும். அதற்கு பதில் பழங்கள், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உங்களைக் களைப்படையாமல் பார்த்துக்கொள்ளும்.

அதேபோல், தேர்வு நாள் அன்று காலை உணவு மிகவும் முக்கியம். சத்தான, அதேநேரம் எளிதில் செரிக்கும் உணவைச் சாப்பிடுங்கள். பொங்கல், தயிர்ச் சோறு, தயிர் வடை போன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டுக்குப் பிறகு முடிந்தால் ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்களைச் சாப்பிடலாம்.

மேலும் காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அவை பதற்றத்தையும் பயத்தையும் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத பழக்கமாக இருந்தால், கொஞ்சமாக அவற்றைக் குடிக்கலாம். தேர்வுக்குச் செல்லும் முன் பழச்சாறு அருந்துவதால் சத்தும் சுறுசுறுப்பும் கிடைக்கும்.

கவனச் சிதறலைத் தவிர்த்தல்

நீங்கள் படிக்கும் அறையில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எதுவும் இல்லாமல் இருக்குபடி பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாகப் பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை இருக்கக் கூடாது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பதில் எந்தப் பயனுமில்லை. படிக்கும் நேரத்தில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

கைபேசியைத் தவிர்த்தல்

நண்பர்கள் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. நீங்கள் சிரத்தையுடன் படித்து நன்றாகத் தேர்வு எழுதிய பின்னும், அவர்கள் அங்கேயேதான் இருக்கப் போகிறார்கள். எனவே, படிக்கும் நேரத்தில் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குங்கள். நண்பர்களுடன் கைபேசியில் உரையாடுவது உங்கள் நேரத்தை வீணாக்கிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. பாடம் தொடர்பான தவிர்க்க முடியாத உதவிக்கு கைபேசியைப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் காற்றோட்டமும்

படிக்கும் அறை நல்ல காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் இருக்கட்டும். காற்றோட்டம் மூளையையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும். வெளிச்சம், கண்கள் எளிதில் களைப்படையாமல் பார்த்துக்கொள்ளும்.

இடை ஓய்வு

படிப்புக்கு இடையே ஓய்வுக்கு என்று தகுந்த நேரத்தை ஒதுக்குங்கள். எந்நேரமும் படித்துக்கொண்டிருந்தால் மூளை ஆற்றல் மங்கிவிடும். மேலும், மனதின் உள்வாங்கும்தன்மை குறையும். இதனால், படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஓய்வு என்பது தொலைக்காட்சி பார்ப்பதோ வீடியோ கேம்ஸ் விளையாடுவதோ அல்ல. ஏனென்றால், அவை மூளையை மேலும் களைப்படையச் செய்யும். சொல்லப்போனால், அதன் தாக்கம் நாம் படிக்கும்போதும் தொடரும். எனவே, முடிந்த அளவு அந்த நேரத்தில் நண்பர்களுடன் ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். இல்லையென்றால் காலாற நடந்துவிட்டுத் திரும்புங்கள்.

அரக்கப் பறக்கச் செல்ல வேண்டாம்

வீட்டிலிருந்து வழக்கமாகப் புறப்படும் நேரத்துக்கு முன்கூட்டியே தேர்வுக்கு புறப்பட்டுவிடுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், தனியாகவோ நெருங்கிய நண்பருடனோ காலாறச் சிறிது நடைபோடுங்கள். ஆனால், அப்போது தேர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாம்.

காலம் பொன் போன்றது

மாணவப் பருவத்தில் படிப்பதுதான் முக்கியக் கடமை. எனவே, படிப்பை எப்போதும் முதன்மை விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x