Published : 13 May 2014 01:49 PM
Last Updated : 13 May 2014 01:49 PM

புற்றுநோய்: பயம் வேண்டாம்!

இந்தியா முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோயின் காரணமாக நிகழும் இறப்புகளும் ஏராளம். நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம். பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.

"குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையில் புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. சுற்றுச்சூழலின் பங்கு 60% இருக்கிறது" என்கிறார் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த வலி மற்றும் நோய் தணிப்பு ஆலோசகர் அசார் உசேன். புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.

எதனால் வருகிறது புற்றுநோய்?

"புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்" என்று சொல்லும் அசார் உசேன் உணவுப் பழக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பும் முக்கியமானது என்கிறார்.

"போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் நோய்களின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்.

வலுப்படுத்தும் உணவுகள்

சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. சில உணவு வகைகள் நோய்களின் பாதையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்த தெளிவு இருந்தால்தான், நோயற்ற வாழ்வு சாத்தியம். ரெட் மீட் எனப்படும் மட்டன், பீஃப் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் புற்றுநோயைத் தூண்டும் காரணிகள் அதிகம்.

மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். ஆண்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேண்டாமே மொறுமொறு

சிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாக்குக்கு நல்லதாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது அல்ல. அதனால் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும்.

அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதும் தவறு. ஒருமுறை சமைத்த பொருளை மீண்டும் அடுப்பில் ஏற்றுவது, நோய்க்கு நாமே அழைப்பு விடுப்பதற்குச் சமம்" என்கிறார் அசார் உசேன்.

வழக்கமாக, நோயின் தாக்கம் தீவிரமடைந்த பிறகே பலர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.

ஆரம்ப அறிகுறிகள்

1. உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும். சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி தோன்றினால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். காரணம் பெண்களை மார்பகப் புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும்தான் அதிகளவில் தாக்குகின்றன.

2. திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். சிலர் அதற்குத் தாங்களாகவே ஏதாவது காரணம் கற்பித்துக் கொள்வார்கள். இது தவறு. நன்றாகச் சாப்பிட்டும் உடல் எடை தொடர்ந்து குறைகிற மாதிரி இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறவேண்டும்.

3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.

3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.

4. காலைக் கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிக்கல்தான். சிலருக்குத் திடீரென வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். இது ஓரிரு நாட்களில் சரியாகாமல் தொடர்ந்தபடி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

"மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம். ஆனால் நோயைக் குணப்படுத்துவதைவிட, அது வராமல் தடுப்பது சிறந்தது. சரியான உணவுப்பழக்கம்தான் அதற்குக் கைகொடுக்கும்" என்று நம்பிக்கை தருகிறார் அசார் உசேன்.

புற்றுநோய் அதிகம் தாக்கும் உறுப்பு எது?

இந்தியாவில் 2012-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். 2008-2011 வரையில் திரட்டப்பட்ட தகவல்களின்படி இது தெரிய வந்துள்ளது.

தேசியப் புற்றுநோய் பதிவு திட்ட (National Cancer Registry Programme - NCRP) அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான காலத்துக்குத் தயாரித்த அறிக்கை, இந்தியாவில் காணப்படும் புற்றுநோய் வகைகள் குறித்தும் அவை அதிகமாக உள்ள பகுதிகள் குறித்தும் சில முக்கியக் குறிப்புகளைத் தெரிவிக்கிறது. இந்தியாவில் 2012-ல் 6,82,830 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 3,56,730,பெண்கள் 3,26,100. அதாவது வளர்ந்தவர்களில் ஒரு லட்சம் பேரில் 64.49 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். உலகம் முழுக்க 2012-ல் 82 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

வட கிழக்கு மாநிலங்கள்

முதல்முறையாக, வட கிழக்கு மாநிலங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தின் மேல்பகுதிகளில்தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வாய்க்குழி, வாயும் உணவுக்குழாயும் இணையுமிடம், தொண்டையின் கீழ்ப்புறம், குரல்வளையின் மேல் பகுதி ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அசாமிலும் மேகாலயத்திலும் உணவுக்குழாய் புற்றுநோய் சகஜம். சிக்கிம், மிசோரத்தில் வயிற்றுப் புற்றுநோய் அதிகம்.

பெண்களைப் பொருத்தவரை மார்பகப் புற்றுநோயும் கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். மணிப்பூர், மிசோரத்தில் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம். மேகாலயத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் அதிகம். தைராய்டு சுரப்பியிலும் மார்பகத்திலும் புற்றுநோய் ஏற்படுவது கேரளத்தின் கொல்லம், திருவனந்தபுரத்தில் அதிகம்.

வயது அடிப்படையில்

உலகம் முழுக்கப் புற்றுநோயைக் கணக்கிடவும் மதிப்பிடவும் வயதை அலகாகக்கொள்வது வழக்கம். அதை ஏ.ஏ.ஆர். (Age adjusted or Age standardized rate) என்பார்கள். மேகாலயம் (கிழக்கு காசி மலை மாவட்டம்), மிசோரம் (அய்ஜால் மாவட்டம்), அசாம் (காமரூபம் மாவட்டம்) ஆகியவற்றில் ஏ.ஏ.ஆர். அதிகம். இங்கெல்லாம் உணவுக்குழாய், உணவுக்குழாயும் வாயும் இணையும் பகுதி, குரல்வளை ஆகியவற்றில் புற்றுநோய் தாக்குதல் அதிகம்.

சிறுவயது புற்றுநோய்

முதல்முறையாக, சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்தும் தனிக் கவனம் செலுத்தித் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்படும் நோயாளிகளில் குழந்தைகள் கணிசமாக இருக்கின்றனர். சிறுவர்களில் கிழக்குக் காசி குன்றுகள் (0.8%) குறைவாக உள்ள இடமாகவும் டெல்லி (5.8%) அதிகமாக உள்ள இடமாகவும் இருக்கின்றன. சிறுமிகளில் கிழக்கு காசி குன்றுகளில் குறைவாகவும் (0.5%) ஆமதாபாத் ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் (3.4%) புற்றுநோய் காணப்படுகிறது. பெரியவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பைக் கணக்கிடும்போது லட்சத்தில் இத்தனை பேருக்கு என்று கணக்கிடுவது வழக்கம். சிறுவர், சிறுமியருக்குப் பத்து லட்சத்தில் இத்தனை பேருக்கு என்றுதான் கணக்கிடுவது வழக்கம். குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை.

- அனுபம் கடகம் © பிரண்ட்லைன், டாட்டா கார்டு, 2.5.14

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x