Published : 13 Feb 2020 11:53 AM
Last Updated : 13 Feb 2020 11:53 AM

கலீஃபாக்கள் சரிதம் 03: சகோதரத்துவத்தை முன்னிறுத்திய இறைத்தூதர்

எஸ்ஆர். நஃப்பீஸ் கான்

அடக்குமுறை அதிகமானதும், இஸ்லாமியர்கள் மதினாவுக்குச் சிறு சிறு குழுக்களாகக் குடிபெயரத் தொடங்கினர். அப்போது பொ.ஆ. (கி.பி.) 622.

இறைத்தூதர் முஹம்மது நபிகளுக்கு, குரைஷ் இனத்தவர்கள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருக்கும் செய்தியை அல்லா அவரிடம் தெரிவித்தார். அபூபக்ர், வழிகாட்டி ஒருவரின் துணையுடன் மக்காவிலிருந்து இறைத்தூதர் வெளியேறினார். அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு நேர்வழிப் பாதையில் செல்லாமல் சுற்றுவழிப் பாதையில் பயணம் செய்தனர்.

நேர்வழிப்பாதையில் சென்றால், குரைஷ் இனத்தவரின் பிடியில் சிக்கிக்கொள்வோம் என்பதால் சுற்றுவழியில் பயணம் செய்தனர். தார் குகையில் மூன்று நாட்கள் அவர்கள் மூவரும் தங்கியிருந்தனர். அவர்களுக்கு நாள்தோறும் அபூபக்ரின் மகள் அஸ்மா இரவில் யாருக்குத் தெரியாமல் உணவை எடுத்துச்சென்று கொடுத்துவந்தார்.

குரைஷ் இனத்தாருக்கு இந்தச் செய்தி தெரிந்தவுடன், அவர்கள் கொந்தளிப்படைந்தனர். இறைத்தூதரை மக்காவுக்கு அழைத்துவருபவர்களுக்கு நூறு ஓட்டகங்கள் வழங்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர். இறைத்தூதரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மக்காவின் ஒரு குழுவினர் தொடர்ந்து இறைத்தூதரைப் பின்தொடர்ந்துவந்தனர்.

ஆனால், மலையில் ஏறத் தொடங்கியதும் அவர்களால் இறைத்தூதர் சென்ற இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மலை உச்சிக்குச் செல்லத் திட்டமிட்டனர். செல்லும் வழியில், இறைத்தூதரும் அபூபக்ரும் தங்கியிருந்த குகையைக் கடந்துசென்றனர்.

குகையின் வாயிலில் பெரிய சிலந்தி வலைப்பின்னப்பட்டிருந்தது. அந்தச் சிலந்தி வலையைப் பார்த்தவுடன், ‘ஒருவேளை, இந்தக் குகைக்குள் இறைத்தூதர் சென்றிருந்தால், இந்தச் சிலந்தி வலை இப்படி முழுமையாக இருக்காது’ என்று அந்தக் குழுவினர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

மஸ்ஜித்துன் நபவி

மதினாவின் கூபா நகரத்தை இறைதூதரும் அபூபக்ரும் அடைந்தனர். அந்த இடத்தில் அவர்கள் இருவரும் மசூதி ஒன்றை நிர்மானித்தனர். அவர்கள் இருவரும் மதினாவை அடைந்தவுடன், பெரும் வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த நகரத்தில், முதலில் ஒரு மசூதியைக் கட்ட வேண்டும் என்று இறைத்தூதர் நினைத்தார். மசூதிக் கட்டப்படுவதற்கான நிலத்தை அபூபக்ர் வாங்கினார். இருவருமே இந்த மசூதி கட்டப்படும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இப்போது அந்த மசூதிதான் ‘மஸ்ஜித்துன் நபவி’ என்று அழைக்கப்படுகிறது.

சகோதரத்துவம்

புதிதாக மதினாவுக்குக் குடிபெயர்ந்திருக்கும் மக்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கு உதவுவதற்காக ஏற்கெனவே அந்நகரத்தில் குடியிருந்தவர்களை நியமித்தார். இறைத்தூதரின் இந்தச் செய்கை சகோதரத்துவத்தை முன்னிறுத்துவதாக அமைந்தது.

எல்லா முக்கியமான விஷயங்களிலும் அபூபக்ரின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் இறைத்தூதர். சந்திப்புக் கூட்டங்களின்போது, அபூபக்ர் எப்போதும் இறைத்தூதரின் வலதுபுறம் அமர்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

சில காலம் மதினாவில் கழிந்தது. அபூபக்ர் தன் மகள் ஆயிஷாவை இறைத்தூதருக்கு மணமுடித்துக்கொடுத்தார். இந்தத் திருமணம் அபூபக்ர், இறைத்தூதருக்கான நட்பை மேலும் வலிமையாக்கியது.

தபூக் பயணம்

பொ.ஆ. 630-ல், சிரிய எல்லையில் உள்ள தபூக் நகரப் பயணத்தை மேற்கொள்வதற்காக இஸ்லாமியர்கள் தாராளமாகப் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் இறைத்தூதர். உதுமான், பத்தாயிரம் ஓட்டகங்களையும், உமர் தன் பாதி சொத்துகளையும் இந்தப் பயணத்தை வெற்றிபெற வைப்பதற்காகப் பங்களித்தனர்.

அபூபக்ர், தன் பங்களிப்பை வழங்க வந்தபோது, இறைத்தூதர், “உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு சொத்து மீதமிருக்கிறது,” என்று கேட்டர். அதற்கு அபூபக்ர், “என்னிடம் இருக்கும் அனைத்தையும் எடுத்துவந்துள்ளேன். எனக்கும், என் குடும்பத்தாருக்கு துணையாக அல்லாவும் அவருடைய தூதரும் இருக்கிறார்கள்,” என்று சொன்னார் அபூபக்ர்.

- தொடரும்
தமிழில்: கனி
(நன்றி: குட்வர்ட் பதிப்பகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x