Published : 08 Aug 2015 02:59 PM
Last Updated : 08 Aug 2015 02:59 PM

மோர் எனும் அமிர்தம்

(சிரோ தாரை கடந்த வாரத் தொடர்ச்சி)

சிரோ தாரை செய்யும் முறைகள்

இந்தச் சிகிச்சைக்கு நோயாளியைக் கிழக்கு முகமாகக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். நோயாளியினுடைய நெற்றியின் புருவ மத்தியில் கவனத்தைச் செலுத்த வேண்டும். மூச்சு எவ்வாறு போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். தலைக்கும் உடம்புக்கும் எண்ணெய் தேய்க்க வேண்டும். காதைப் பஞ்சால் அடைக்க வேண்டும். கண்களை நன்றாகப் பஞ்சை வைத்துக் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் தலையில் சேர்க்கிற எண்ணெய் கண்ணில் விழுந்து, புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோயாளி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

இளம் சூடாக இருக்கும் மருந்தைத் தாரைப் பாத்திரத்தில் விட வேண்டும். இளஞ்சூடு எப்போதும் சீராக இருக்க வேண்டும். இதைப் புருவ மத்தியில் விழச்செய்து தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்ட வேண்டும். இவ்வாறு நாற்பது நிமிடங்கள் செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கைகள்

எண்ணெய் சூடு ஆறினால், மீண்டும் சூடாக்கி சேர்க்க வேண்டும். இத்துடன் உடலுக்கு வேண்டிய துணி, மருந்து போன்றவை தயாராக இருக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் போன்றவை உள்ள நாட்களில் இந்தச் சிகிச்சையைச் செய்யக் கூடாது. இருபது நிமிடங்கள் முதல் ஒன்றரை மணிவரையும், இருபத்தியொன்று நாட்கள்வரை இந்தச் சிகிச்சையைச் செய்யலாம். தாரை செய்த பிறகு ஓய்வெடுக்க வேண்டும். வெந்நீரில் குளிக்க வேண்டும். நீர் இளக்கம் ஏற்படாமல் இருக்க ராஸ்னாதி (சிற்றரத்தை) பொடியைத் தலையில் தடவ வேண்டும். கந்தர்வஹஸ்தாதி கஷாயத்தைக் கொடுக்கலாம்.

உடல் வறண்ட நிலை உள்ளவர்களுக்கு, ஒன்றரை மணி நேரம் தாரை செய்யலாம். பித்தம் அதிகரித்த நிலையிலும் ஒன்றரை மணி நேரம் தாரை செய்வார்கள். எண்ணெய் பசை கொண்ட பருத்த உடலைக் கொண்டவர்களுக்கு 45 நிமிடங்கள்வரை தாரை செய்வார்கள்.

பாலினால் தாரை செய்யும்போது பாலை தினமும் மாற்ற வேண்டும். காய்ச்சிய பால் ஆறிய பிறகு தாரை செய்யலாம். தண்ணீர்விட்டான் கிழங்கைக் கொண்டும், பாலைக் கொண்டும் தாரை செய்யும்போது, மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற எரிச்சல் போன்றவை குறையும். பாலில் தசமூலத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தாரை செய்கிறபோது உடலில் வலி மாறும். இதைப் போலக் கண்ணிலும் பாலை வைத்தும் நெய்யை வைத்தும் தாரை செய்யலாம்.

எண்ணெய் வைத்துத் தாரை செய்யும் நிலைகள்:

l மன அழுத்தத்தால் வரும் தலைவலி.

l சூர்யாவர்த்தம் எனும் ஒற்றைத் தலைவலி (Migraine headache)

l ஞாபக மறதி (Dementia Complex)

l தூக்கமின்மை

l மனப் பதற்றம்

l மனச் சிதைவு நோய்

l மூளை வளர்ச்சிக் குறைவு

l முகவாதம்

l முக எரிச்சல்

l கழுத்துத் தேய்மானம்

l பார்வைக் குறைவு

l காதில் முழக்கம் கேட்டல்

l தலைமுடி உதிர்தல்

l சுகச் சிகிச்சை

முக்கியமான எண்ணெய்கள்

l க்ஷீரபலா எண்ணெய் - மனதுக்கு உற்சாகமளிக்கும். அறிவுச் செயல்பாட்டைச் சீர்படுத்தும். நரம்பு நோய்களுக்குச் சிறந்தது.

l தான்வந்தரம் எண்ணெய் - அடி ஏற்பட்ட நிலைக்கு நல்லது.

l பலாகுடூச்சியாதி தைலம் - தலையில் ஏற்படும் தோல் நோய்களுக்குச் சிறந்தது.

l சந்தனாதித் தைலம் - பித்தத்தைத் தணிக்கும், உறக்கத்தைத் தரும், குளிர்ச்சியானது.

l பலாஹடாதி எண்ணெய் - ஹடம் என்றால் நெல்லிக்காய். மன அழுத்தத்தைக் குறைக்கும்.

l மதுயஷ்டியாதி எண்ணெய் - ரத்த நாளங்களில் வரும் வாதத்தைத் தவிர்க்கும்.

மேலும் சில

கொன்னைப்பட்டை கஷாயத்தால் தாரை செய்யலாம். வாதம், கபம் சேர்ந்து வருகிற தோல் நோய்களுக்கு ஏலாதி எண்ணெய் சேர்க்கலாம். கழுத்துத் தேய்மானத்துக்குக் கார்பா ஸாஸ்தியாதி எண்ணெய் எனும் பருத்தி கொட்டை எண்ணெய் சிறந்தது.

வாத, பித்தக் கபங்களைத் தணிப்ப தில் தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட தைலமும் மதுயஷ்டியாதி தைலமும் சிறந்தவை. நீரிழிவு நோயால் வரும் கால் மரத்துப்போகும் தன்மைக்குப் பிண்யாகத் தைலம் சிறந்தது. முடி வளர்வதற்கும், பொடுகை மாற்றுவதற்கும் செம்பருத்தித் தைலம், தாரண தைலம், அருகம்புல் தைலம், ஊமத்தை இலைச்சாறு தைலம் போன்றவை சிறந்தவை. கரிசலாங்கண்ணி தைலம், கேசரஞ்சினி தைலம், நீலி பிருங்காதித் தைலம் போன்றவை கூந்தலை வளர்ப்பவை. புண்களை ஆற்றுவதற்குப் பஞ்சகல்பகத் தைலம், முறிவெண்ணெய் தைலம் போன்றவை சிறந்தவை.

தக்ர தாரை

இதில் கொன்னைப்பட்டை, நெல்லிக் காய், கோரைக்கிழங்கு ஆகியவற்றால் பக்குவப்படுத்தப்பட்ட மோர் நெற்றியில் ஊற்றப்படும். இது 45 நிமிடங்களுக்கு, ஏழு முதல் 21 நாட்களுக்குச் செய்யப்படும் சிகிச்சை. இது ஒருவகை தோல் நோய், மன நோய், ஒற்றைத் தலைவலி போன்றவற்றுக்கு நல்லது.

எந்த நோய்களுக்கு மோர் தாரை?

l நீரிழிவு நோயால் கால் எரிதல்

l பித்தத் தலைவலி

l கிரஹணி (Irritable Bowel Syndrome)

l வயிற்றில் தீராத புண்

l தோல் செதில் நோய்

l காணாப்படை (Psoriasis)

l மன அழுத்தம்

l சைனஸ்

l தூக்கமின்மை

மோர் மருந்து

ஆயுர்வேதத்தில் மோருக்கு முக்கியத்துவம் உண்டு. ஆயுர்வேதத்தில் மோர் அமிர்தமாகவே கருதப்படுகிறது. வாத, கப நோய்களுக்கு மோர் சிறந்தது. வயிற்றில் ஏற்படுகிற கிரஹணி நோய்களுக்கும் நல்லது. கிருமிகளைக் குறைக்கும் தன்மை மோருக்கு உண்டு. மூல நோய், வயிற்று நோய், உதர நோய், கிராணி (கிரஹணி) நோய், தோல் நோய் போன்றவற்றுக்கு மோர் அமிர்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயிரைக் கடைந்து மோரை எடுப்பார்கள். பாலைக் காய்ச்சுகிறபோது சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சிய பிறகு உருவாகும் மோர் மருத்துவக் குணம் கொண்டதாக மாறுகிறது. கொன்னைப்பட்டை, மாவிலங்கத்தைக் கொண்டும் மோர் தயாரிக்கலாம். நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, குறுந்தட்டிவேர், சந்தனம் போன்ற பல மருந்துகளைச் சேர்த்து மருத்துவரீதியாகவும் மோர் தயாரிக்கலாம்.

மோர் கல்பனை

ஒன்றரை லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு, அதில் நான்கு மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் 100 கிராம் கோரைக் கிழங்கை ஒரு துணியில் கிழிபோலக் கட்டிப்போட வேண்டும். பின்பு இது ஒன்றரை லிட்டர் அளவாகக் குறையும்வரை வற்ற வைக்க வேண்டும். பின்பு இதை வடிகட்டி, உறை ஊற்ற வேண்டும். மறுநாள் காலை புளித்த மோர் கிடைக்கும். இதனுடன் 500 மி.லி. நெல்லிக்காய் கஷாயத்தைச் சேர்த்து வெண்ணெயை மாற்ற வேண்டும். இவ்வாறு மருத்துவ மோர் தயாரிக்கப்படுகிறது.

நெல்லிக்காய் கஷாயம்

200 கிராம் நெல்லிக்காயில் எட்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து, இரண்டு லிட்டராக வற்ற வைக்க வேண்டும். ஒன்றரை லிட்டர் நெல்லிக்காய் கஷா யத்தை மோருடன் சேர்க்க வேண்டும். பின்பு 500 மி.லி. தலை கழுவுவதற்காகத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல மிளகு, புளி போன்றவற்றிலும் மோர் தயாரிக்கலாம்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x