Published : 08 Feb 2020 09:17 AM
Last Updated : 08 Feb 2020 09:17 AM

மருத்துவம் தெளிவோம்! - 21: செயற்கைக் கருத்தரிப்பு! ஏன், எதற்கு, எப்படி?

டாக்டர் கு. கணேசன்

இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், இதயநோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற தொற்றா நோய்க் கூட்டத்தில் தம்பதிகளுக்குக் ‘குழந்தைப் பேறு இல்லை’ என்னும் குறையும் தற்போது இணைந்துள்ளது. கால் நூற்றாண்டுக்கு முன்புவரை பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தற்போது சிறுநகரங்களிலும் ஆலவிருட்சமாக முளைத்து வருவதே இதற்குச் சாட்சி!

‘செயற்கைக் கருத்தரிப்பு’ என்றால் என்ன?

திருமணமான தம்பதியருக்கு இயற்கை வழியில் குழந்தை பிறக்க வழி இல்லாதபோது, அவர்களுக்குச் செயற்கை வழியில் குழந்தை பிறக்கச் செய்யும் மருத்துவ முறைக்குச் ‘செயற்கைக் கருத்தரிப்பு’ (IVF/ART) என்று பெயர். இந்த முறையில் பிறக்கும் குழந்தையைப் பேச்சு வழக்கில் ‘சோதனைக் குழாய்க் குழந்தை’ என்று சொல்கின்றனர்.

முதன் முதலில் 1978-ல் இங்கிலாந்தில் லூயி பிரவுன் என்னும் குழந்தை இந்த வழியில் பிறந்த பிறகுதான் கருத்தரிக்க இயலாத தம்பதிகளுக்கு ஒரு மாற்றுமுறையாக ‘சோதனைக் குழாய்க் குழந்தை’யை ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டது.

‘சோதனைக் குழாய்க் குழந்தை’ முறை என்பது என்ன?

‘சோதனைக் குழாய்க் குழந்தை’ என்பது பெயர்தானே தவிர, நடைமுறையில் சோதனைக் குழாயில் குழந்தையை உருவாக்குவதில்லை. மாறாக, ‘ஐ.வி.எஃப். டிஷ்’ என்னும் தட்டில்தான் இது மேற்கொள்ளப்படுகிறது. இதில் பெண்ணின் கருமுட்டைகளும் ஆணின் விந்தணுக்களும் கலக்கப்படு கின்றன.

இப்படி இணைந்தவை கருவாக உருவானதும் அதை எடுத்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்திவிடுகின்றனர். அங்கு கரு தங்கி, சிசுவாக வளர்கிறது. சுகப்பிரசவத்திலோ, சிசேரியன் பிரசவத்திலோ குழந்தையாக இந்த மண்ணுக்கு வருகிறது.

இதை எப்படி மேற்கொள்கின்றனர்?

முதல் கட்டமாகச் சில மருந்துகள் மூலம் பெண்ணின் சூலகத்தில் (Ovary) அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகளை உற்பத்தி செய்கின்றனர். அவை முதிர்ச்சி அடைந்ததும் மற்றோர் ஊசி மருந்தின் மூலம் அவை வெடித்து வெளியில் வரச் செய்கின்றனர். பிறகு அவற்றை ஒரு நுண்ணிய ஊசிக்குழலில் எடுத்து, ‘ஐ.வி.எஃப். டிஷ்’ஷில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஆணின் விந்தணுக்களோடு கலக்கின்றனர். சுமார் 18 மணி நேரத்துக்குப் பிறகு அதைச் சோதிக்கின்றனர். கருத்தரிப்பு நடந்திருந்தால், 3-ம் நாளில் அந்தக் கரு 8 செல் நிலைக்கு வந்து சேரும். அப்போது அதை ஊசிக்குழலில் எடுத்துப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துகின்றனர். சிலருக்கு 5-ம் நாளிலும் இப்படிச் செலுத்தப்படுவதுண்டு.

பொதுவாக, தட்டிலுள்ள கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒரு தரமான விந்தணுவுடன் ஒரு கருமுட்டை இணைந்து கருவாக உருவாகும். ஆகவே, கருத்தரிக்காமல் மீதமிருக்கும் கருமுட்டைகளை உறைநிலையில் சேமித்துவைத்து, தேவைப்பட்டால் அடுத்த முறை கருத்தரிக்கப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. கருவைக் கருப்பையில் செலுத்திவிட்டதோடு இந்தச் ‘செயற்கைக் கருத்தரிப்பு’ முறை முடிந்துபோவதில்லை. கரு அந்த இடத்தில் தங்க மாத்திரைகளோ, ஊசிகளோ பயன்படுத்த வேண்டி வரும்.

கரு உருவானதை எப்படி உறுதி செய்கின்றனர்?

பெண்ணுக்கு மாதவிலக்கு நின்றுபோன 2-லிருந்து 5-ம் நாளில் ரத்தத்தில் பீட்டா ஹெச்சிஜி (Serum Beta hCG) அளவு பரிசோதிக்கப்படும். கரு உருவாகியிருந்தால் இதன் அளவு அதிகரிக்கும். 15-ம் நாளில் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்த்தும் கரு உருவானதை உறுதி செய்வார்கள். 6-ம் வாரத்தில் கருவாக இருக்கும் குழந்தைக்கு இதயத்துடிப்பு உள்ளதையும் உறுதி செய்த பிறகுதான் ‘செயற்கைக் கருத்தரிப்பு’முறை வெற்றிபெற்றுள்ளது என்னும் முடிவுக்கு வருவார்கள்.

‘சோதனைக் குழாய்க் குழந்தை’ முறை யாருக்கு உதவும்?

கருப்பை இணைப்புக் குழாயில் (Fallopian tube) அடைப்புள்ள பெண்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. சூலகத்தில் கட்டி, நீர்க்கட்டி, வெளியேறிய கருப்பை உள் சவ்வு (Endometriosis) போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள், கருத்தரிப்பு ஆகாமல் இருப்பதற்குக் காரணம் தெரியாத தம்பதிகள் ஆகியோருக்கும் ‘சோதனைக் குழாய்க் குழந்தை’ முறை உதவுகிறது.

‘கிஃப்ட்’ (GIFT) செயற்கைக் கருத்தரிப்பு முறை என்றால் என்ன? யாருக்கு இது அவசியம்?

இதில் கருமுட்டையையும் விந்தணுக்களையும் ஒன்றாகச் சேர்த்து நேரடியாகவே கருப்பை இணைப்புக் குழாய்களில் லேப்ராஸ் கோப்பி மூலம் செலுத்துகின்றனர். அங்கே கரு உருவாகிறது. பிறகு இயற்கையாகவே அது நகர்ந்து கருப்பைக்கு வந்து வளர்கிறது. இதில் ZIFT, PST, TET என மேலும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

இந்த சிகிச்சைக்கு இரண்டு கருக்குழாய்களில் ஏதாவது ஒன்று நன்றாக இருக்க வேண்டும். கருத்தரிக்க இயலாமைக்குக் காரணம் தெரியாத தம்பதிகளுக்கும், கருப்பை வாயில் விந்தணுக்களுக்கு எதிர்ப்புத் தன்மை இருக்கும் தம்பதிகளுக்கும் இந்த சிகிச்சை முறை உதவும்.

‘இக்ஸி’ (ICSI) செயற்கைக் கருத்தரிப்பு முறை என்றால் என்ன?

‘இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சன்’ (Intracytoplasmic sperm injection - ICSI) என்னும் ஆங்கிலப் பெயர் விரிவாக் கத்தின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் ‘இக்ஸி’. மருத்துவர்கள் இதை ‘ஓரணு ஒரு கருமுட்டை செயற்கைச் சேர்க்கை’ என்று கூறுகின்றனர்.

மற்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகளிலிருந்து ‘இக்ஸி’ முறை எவ்வாறு வேறுபடுகிறது?

ஒரு இடுக்கியில் முதிர்ச்சியடைந்த ஒரு கருமுட்டையை எடுத்துக்கொண்டு, நுண் ஊசியில் ஒரு விந்தணுவை எடுத்து அந்த கருமுட்டைக்குள் 30 நொடிகளுக்குள் செலுத்துகின்றனர். அதனுள் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்களைக் குறிப்பிட்ட அளவுக்குக் கலந்து செலுத்துகின்றனர். அதை இன்குபேட்டரில் பாதுகாக் கின்றனர். 3 நாள்கள் கழித்து 8 செல் கருவை எடுத்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துகின்றனர்.

‘இக்ஸி’ யாருக்குப் பயன்படும்?

தம்பதிகளுக்குக் குழந்தை யில்லாத குறை ஏற்படுவதற்கு பெரும்பாலும் விந்தணுக் குறைபாடுதான் முதன்மைக் காரணமாக இருக்கும். தவிர, தரமான விந்தணு இல்லாதவர்களும், அசையா அணுக்கள்/மாறுபட்ட அணுக்கள் உள்ளவர்களும் தற்போது அதிகம். விரைகளில் உருவாகும் விந்தணுக்கள் விந்தணுக்கிடங்குக்கு (Epididymis) வர இயலாதவர்கள், விந்தணுக்களே இல்லாதவர்கள், விரைப் புற்றுநோய் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கும் ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது ‘இக்ஸி’ முறை.

‘கருவணு தானம்’ என்றால் என்ன?

கருமுட்டையையும் விந்துவையும் வெவ்வேறு நபர்களிடமிருந்து தானமாகப் பெற்று, மேற்சொன்ன வழிகளில் செயற்கையாக இணையவைத்துக் கருத்தரிக்க உதவுவதை ‘கருவணு தானம்’ முறை (Gamete donation) என்கிறோம். ஆணுக்கு விந்தணு பிரச்சினை, பெண்ணுக்குக் கருமுட்டைப் பிரச்சினை தீர்க்க முடியாத வகையில் இருந்தால், இந்த முறையில் கருவணுக்களைப் பெற்று சிகிச்சை கொடுக்கின்றனர்.

‘வாடகைத் தாய் முறை’ என்பது என்ன?

பெண்ணின் கருமுட்டையையும் கணவரின் விந்தணுவையும் செயற்கை முறையில் இணைய வைத்து வந்த கருவை வேறொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளர்க்கின்றனர். இவ்வாறு குழந்தைப் பேறு பெறுவதை ‘வாடகைத் தாய் முறை’ (Surrogacy) என்கிறோம். பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு ஆரோக்கியமாக இல்லை என்றால், கருப்பையில் கட்டி, புற்றுநோய், அதிக ரத்தப்போக்கு போன்ற காரணங்களால் கருப்பை அகற்றப்படுமானால் இது கைகொடுக்கிறது.

யார் யார் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?

‘வாடகைத் தாய் சட்டப்படி’ திருமணமாகிக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பெற்றுத் தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருப்பவர், திருமணமாகிக் குழந்தை பெற்றவராகவும் 25–35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஒருமுறை மட்டுமே வாடகைத் தாய் முறையில் அவர் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தை தேவைப்படும் தம்பதியரில் பெண்ணுக்கு வயது 23–50-க்குள்ளும் ஆணுக்கு வயது 26–55-க்குள்ளும் இருக்க வேண்டும். வெளிநாட்டினர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற முடியாது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x