Published : 28 Jan 2020 11:30 AM
Last Updated : 28 Jan 2020 11:30 AM

சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது! - ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர் டோனி ஜோசப் நேர்காணல்

சு. அருண் பிரசாத், ஆதி வள்ளியப்பன்

‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?' என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பல காலமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியான `எர்லி இந்தியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்ஸெஸ்டர்ஸ் அண்ட் வேர் வீ கேம் ஃப்ரம்’ (Early Indians: The Story of Our Ancestors and Where We Came From) நூல் இந்தக் கேள்விகள் பலவற்றுக்கு ஆதாரபூர்வப் பதில்களைத் தந்தது.

வாசகர் மத்தியில் வரலாற்று, அறிவியல் ஆர்வங்களைக் கிளர்த்திய இந்த நூலின் ஆசிரயர் டோனி ஜோசப், 30 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி வணிக இதழாளர்களுள் (Business journalist) ஒருவர் என்பது சுவாரசியமான முரண். இந்திய வரலாற்றுப் பின்னணியில் சர்ச்சைக்குரிய, நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் பல கேள்விகளுக்குத் தொல்லியல், மரபணுவியல் ஆதாரங்களின் அடிப்படையில் திட்டவட்டமான பதில்களை இந்த நூல் வழங்குகிறது.

டோனி ஜோசப்

அபுனைவு நூல்களுக்கான ‘டாடா லிட் லைவ்!’ விருது, ‘சக்தி பட் முதல் நூல்’ பரிசு, ‘அட்டா கலாட்டா' பரிசு என மூன்று விருதுகளை இந்தப் நூல் இதுவரை பெற்றிருக்கிறது. விற்பனையில் சாதனை படைத்த இந்தப் நூல் தற்போது எட்டாம் மறுஅச்சில் இருக்கிறது; தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவிருக்கிறது. டோனி ஜோசப் உடனான உரையாடலில் இருந்து:

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக இதழாளராகப் பணியாற்றிய நீங்கள் தொல்பழங்காலம், தொல்லியல் சார்ந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம் என்ன? அந்தத் துறை நோக்கி உங்களை ஈர்த்தது எது?

ஹரப்பா (சிந்துவெளி) நாகரிகத்தின் மேல் எப்போதுமே எனக்கு ஈர்ப்பு இருந்துவந்திருக்கிறது. எல்லோரையும் போல் பள்ளியில்தான் நானும் அதைப் பற்றி முதலில் படித்தேன். என்னுடைய கற்பனையில் ஆழமான தாக்கத்தை அது எப்போதும் செலுத்திவந்திருக்கிறது; நாளிதழ்களில் அதைப் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் தவறாமல் வாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தேன்.

ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்குமுன், எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தபோது, ‘ஹரப்பர்கள் யார்; அவர்கள் எங்கு மாயமானார்கள்; பொ.ஆ.மு. (கி.மு.) 1,900 வாக்கில் சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் நகரங்கள் உருவாவதற்கு இடையில் 1,500 ஆண்டு இடைவெளி ஏன் ஏற்பட்டது’ என்று எப்போதும் என்னைத் துரத்திக்கொண்டிருந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியில் இறங்கினேன்.

புத்தகத்தை எழுதத் தொடங்கியபோது, ஹரப்பர்களை மையப்படுத்தியதாக மட்டுமே அது இருந்தது. அது குறித்துச் சமீப காலத்தில் பல்வேறு புலங்களில் நிகழ்ந்திருக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் அதற்கான விடைகளை நெருக்கமாக அணுக முடியும்; குறிப்பிட்ட தொலைவுக்கு நெருங்கிச் செல்ல முடியும் என்று எனக்குத் தோன்றியது.

தோலவிரா, லோதல், ராகிகரி உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் தளங்களுக்குப் பயணித்தேன்; மதிப்பு வாய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், மொழியியலாளர்கள், கல்வெட்டிய லாளர்கள், சிந்துவெளி நாகரிகம் சார்ந்து ஆய்வுசெய்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர்கள் எனப் பல அறிஞர்களைத் தொடர்ந்து சந்தித்தேன். இந்த வேளையில்தான் ஹரப்பர்கள் யார் என்ற கேள்வியும் இந்தியாவின் முதல் உழவர்கள் யார் என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்று என்பதை உணர்ந்தேன்.

ஏனென்றால், தொல்லியல் ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள மெஹர்கர் (Mehrgarh) என்ற இடத்தில் 9,000 ஆண்டுகளுக்குமுன் வேளாண்மை தொடங்கி, வடமேற்கு இந்தியா முழுமைக்கும் வேகமாகப் பரவியதை அறியமுடிகிறது. கிராமங்கள் அப்போதுதான் உருவாகத் தொடங்கின. பிறகு சிந்துவெளி நகரங்கள் மேலெழுந்தன.

ஆக, சிந்துவெளி நாகரிகம் என்பது 9,000 ஆண்டுகளுக்குமுன் - அதாவது பொ.ஆ.மு. 7000 – ஏற்பட்ட வேளாண் புரட்சியின் இயல்பான தொடர்ச்சியே. அதனால்தான், ஹரப்பர்கள் யார் என்ற கேள்வியுடன் இந்தியாவின் முதல் உழவர்கள் யார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவின் முதல் உழவர்கள் யார் என்ற கேள்விக்கான விடையை, முதல் இந்தியர்கள் யார் என்று தெரியாமல் அறிய முடியாது.

தொடக்கத்தில் நான் நினைத் திருந்ததைவிட நூலின் எல்லை இப்படி விரிந்துகொண்டே சென்றது. நூலின் பாதித் தொலைவுவரை வந்துவிட்ட பிறகு, பல்வேறு புலங்களைச் சேர்ந்த தரவுகள், தகவல்கள் கடலெனச் சேர்ந்துவிட்டதால் இந்தப் நூலை எழுதி முடிக்க முடியாது என்றே எனக்குத் தோன்றியது. அப்போதுதான் உலகின் பெரும் மக்கள்தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் முற்றிலும் புதிய துறையான ‘மக்கள் தொகை மரபணுவியல்’ (Population genetics) குறித்து அறிந்தேன்; அது என்னை ஈர்த்தது.

மக்கள்தொகை மரபணுவியல் சார்ந்து வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்; உலகம் முழுவதும் உள்ள மக்கள்தொகை மரபணுவியலாளர்களைத் தொடர்பு கொண்டு, அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து விவாதித்தேன். தொடக்க கட்டத்தில் வெளியான சில ஆய்வு அறிக்கைகளின் முடிவுகள் முரணாக இருந்தன.

ஆனாலும், முன்பு வாழ்ந்த மக்கள்தொகையின் மரபணுக்களுடன் தற்போதுள்ள மக்கள்தொகையின் டி.என்.ஏ-வை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம், அவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய, தொடர்பே இல்லாத மக்கள்தொகைக் குழுக்கள் எவையெவை என்று கண்டறிய முடிந்தது. அந்தக் கண்டறிதல் புதிய ஒளி பாய்ச்சுவதாக இருந்தது.

அதேநேரம் டி.என்.ஏ. ஆய்வுகளை மட்டும் வைத்து, ‘யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள்’ என்பதைக் கண்டறிய முடியாது. அதனால், இடப்பெயர்வு சார்ந்த கேள்விகளுக்கு இந்த ஆய்வுகள் மூலம் பதில் கிடைக்கவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மக்களுடைய டி.என்.ஏ-வைப் படியெடுத்து (extract) பகுத்து ஆராயக்கூடிய முறை, சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டு பிடிக்கப்பட்டது. இது மக்கள்தொகை மரபணுவியல் ஆராய்ச்சியில் பெரும் பாய்ச்சலாகக் கருதப்பட்டது; நிலைமை முற்றிலும் மாறியது.

ஒரு தொல்லியல் தளத்தின் பல அடுக்குகளில் கிடைக்கும் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த டி.என்.ஏ-வைச் சேகரித்து ஆராயும்போது, ஒரு புதிய வம்சாவளி அங்கு இடம்பெயர்ந்து, காலப்போக்கில் அந்த இடத்தின் மக்கள்தொகையை மாற்றியமைத்த காலகட்டத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.

கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பண்டைய டி.என்.ஏ. மாதிரிகள் படியெடுக்கப்பட்டு ஆய்வுசெய்யப் பட்டிருக்கின்றன. இவற்றின் முடிவுகளை வைத்து யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள், அவற்றின்மூலம் உலகின் பெரிய மக்கள்தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்பன குறித்த துல்லியமான வரைபடத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.

மக்கள்தொகை மரபணுவியலில் நான் கவனம் செலுத்தத் தொடங்கிய காலத்துக்கு முன்பாகவே தொல்லியல், மொழியியல், கல்வெட்டியல், வரலாறு உள்ளிட்ட துறைகள் சார்ந்த பெரும்பாலான தரவுகளைச் சேகரித்து முடித்திருந்தேன். எனவே, மனிதர்களின் தொடக்க காலம் குறித்து பல்வேறு துறைகளில் கண்டறியப்பட்ட முடிவுகளுடன், மரபணுவியலின் புதிய கண்டறிதல்கள் எப்படிப் பொருந்துகின்றன என்பதை என்னால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. 65,000 ஆண்டுகளுக்குமுன் தொடங்கி வரலாற்றுக்கு முந்தைய காலம்வரை நிகழ்ந்த நான்கு பெரிய இடப்பெயர்வுகள், இன்றைய இந்திய மக்கள்தொகையை எப்படி நிர்ணயித்தன என்பதை என்னுடைய நூல் விவரிக்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள் இடப்பெயர்வுகள் நடந்தனவா? அவை எவ்வளவு தொலைவுக்கு நீண்டடிருந்தன?

வடமேற்கு இந்தியாவில் பரவிய வேளாண்மையே தன்னளவில் ஒரு உள் இடப்பெயர்வுதான். ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறத் தொடங்கும்போது, மக்கள் அந்த இடத்தில் தங்குகின்றனர்; அப்போது முன்பைவிட குறிப்பிட்ட பகுதியில் மக்கள்தொகை அதிகரிக்கத் தொடங்கும். இது மற்ற பகுதிகளுக்கு இடப்பெயர்வை நிகழ்த்தி, அந்த மக்கள்தொகைக்கு மறுவடிவம் கொடுப்பதில் சென்று முடிகிறது. ஆகவே, உள் இடப்பெயர்வு என்பது எப்போதும் பெரிய இடப்பெயர்வுகளின் ஒரு பகுதிதான்.

பொ.ஆ.மு. 1900 வாக்கில் தொடங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கும் உள் இடப்பெயர்வுகளுக்கும் தொடர்பு உண்டு. இன்றைக்கு வட இந்தியா, தென்னிந்தியா என்று அழைக்கப்படும் பகுதிகளுக்கு மக்கள் அப்போதுதான் நகர்ந்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தினர் புனிதங்களாகச் சுமந்துகொண்டிருந்த மொழி, பண்பாடு, நம்பிக்கை முறைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை இடம்பெயர்வின்போது சுமந்து சென்றார்கள்.

ஆகவேதான், இன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முற்றம் வைத்து வீடு கட்டுதல், மரங்களைப் புனிதமாகக் கருதுதல் போன்ற பண்பாட்டுச் சின்னங்களின் ஆதாரம், சிந்துவெளி நாகரித்தோடு ஒப்புமைப்படுத்திப் புரிந்துகொள்ளப்படுகிறது. இன்றைய இந்தியாவுடன் இணைந்திருக்கும் ஒரு பண்பாட்டுப் பசையாக ஹரப்பர்களையும் அவர்களுடைய நாகரிகத்தையும் கருதலாம். நாம் இன்றைக்குக் குழந்தைகளுக்குச் சொல்லும் பஞ்சதந்திரக் கதைகள், ஹரப்பர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லத் தொடங்கியவையாக இருக்கக்கூடும். சிந்துவெளியின் சின்னம் ஒன்றில் பானையில் கல்லைப் போடும் காக்கை ஒன்றின் சித்திரம் உள்ளது. தங்கள் மொழிகளையும் பண்பாட்டையும் அவர்கள் பரப்பினார்கள். `எர்லி இந்தியன்ஸ்' முன்வைத்திருப்பதைப் போல், அவர்கள் பூர்வ-திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்.

பொ.ஆ.மு. 2000 - 1500 காலகட்டத்தில் மத்திய ஆசியாவில் இருந்து வட இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களால் மொழி மாற்றம் ஏற்பட்டது. இந்தோ-ஐரோப்பிய மொழி அல்லது தொடக்க நிலை சம்ஸ்கிருதம் அல்லது பிராகிருதம் என்று கருதப்படும் மொழிகளை ஆரியர்கள் கொண்டுவந்தார்கள். அவர்களுடைய இடப்பெயர்வு ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவில் குறைவாக இருந்ததால், ஹரப்பர்களின் மொழி தென்னிந்தியாவில் செழித்தது. திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்டவை இன்றைக்கு இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களால் பேசப்படுகின்றன.

இந்தியாவில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ராகிகரியில் பண்டைய மரபணு சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட வசந்த் ஷிண்டே, நீரஜ் ராய் ஆகியோர் தங்கள் ஆய்வு முடிவுகளுக்கு முரணான தகவல்களைச் செய்தியாளர் சந்திப்பில் கூறியது சர்ச்சையானது. இதற்கு அரசியல் அழுத்தம், அரசியல் சார்பு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

2019-ல் வெளியான இரண்டு மரபணுவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒரே முடிவுகளை எட்டி ஒன்றுக்கு மற்றொன்று ஆதரவாகத் திகழ்கின்றன: ஒன்று, 65,000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி இந்தத் துணைக்கண்டத்துக்கு இடம்பெயர்ந்த முதல் இந்தியர்களும் ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர் குழுவுமே வடமேற்கு இந்தியாவில் வேளாண் புரட்சியைத் தொடங்கி, சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள் குழு என்பது; இரண்டு, மத்திய ஆசியப் புல்வெளிப் பகுதி எனப்படும் இன்றைய கஸகஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் (ஆரியர்கள்), இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் பொ.ஆ.மு. 2000 முதல் 1500-க்குள் கணிசமான அளவில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், சிந்துவெளி நாகரிகம் என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இந்தியாவுக்கு வருவதற்கு முந்தையது அல்லது ஆரியர்களுக்கும் முந்தையது.

ஆனால், பெரும்பாலான ஊடகங்களில் வெளியான செய்திகள் இதற்கு நேர்மாறாக இருந்தன: ஹரியாணாவின் ராகிகரியில் உள்ள சிந்துவெளித் தொல்லியல் தளத்தில் பெறப்பட்ட டி.என்.ஏ. மாதிரியில் ஆரிய வம்சாவளித் தொடர்பு இல்லை; ஆகவே, ஆரியர்கள் இடப்பெயர்ந்தவர்கள் அல்லர் என்று அந்தச் செய்திகள் கூறின. இது முற்றிலும் திரிக்கப்பட்ட, தவறான வரலாற்று விளக்கம்.

சிந்துவெளி டி.என்.ஏ-வில் ஆரிய வம்சாவளித் தொடர்பு இல்லை என்ற தகவல், ஆரியர்கள் சிந்துவெளி நாகரிகம் செழித்திருந்த காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கவோ, அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்திருக்கவோ இல்லை; அவர்கள் அதற்குப் பிற்பாடு வந்தவர்கள்தான் என்பதை வலுவான ஆதாரத்துடன் தெளிவுபடுத்துகிறது. அதேநேரம் இன்றைய இந்தியர்களின் டி.என்.ஏ.வில் ஆரிய வம்சாவளித் தொடர்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் வரலாறு, அறிவியல் இரண்டுக்கும் பரவலான வரவேற்பு இருந்ததில்லை. ஆனால், கடந்த ஆண்டு நிலைமை மாறியதாகத் தெரிகிறது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் தொல்பழங்காலம் அரசியல் விவாதமாக மையம் கொண்டிருப்பதற்கு, யார் பெரியவர் என்ற போட்டி மிகுந்த ஒரு களமாக அது இருப்பதுதான் காரணம். பல்வேறு தரப்புகள் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள வேறுபட்ட வரலாறுகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றன. தேசம் குறித்த நம்முடைய சிந்தனை என்பது முன்பு எப்போதையும்விட இன்றைக்குப் போட்டிமிகுந்த ஒன்றாக மாறியிருக்கிறது. அதனால்தான், தொல்பழங்காலம் குறித்த புரிதல் இந்தியாவில் இன்றைக்கும் ஒரு யுத்தகளத்தை ஒத்திருக்கிறது.

தேசம் குறித்த இரண்டு வெவ்வேறு கருத்தாக்கங்களுக்கு இடையிலான மோதலில், தொல்பழங்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். தேசம் குறித்த முதல் கருத்தாக்கம் சாதி, மதம், மொழி, இடம் என எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒவ்வொருவரையும் இந்தியன் என்ற ஒரே புள்ளியில் இணைத்து, காலனி ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட காலம் தொட்டுத் தொடர்ந்துவருகிறது.

இதற்கு மாறாக, கடந்த ஒரு நூற்றாண்டாகத் தேசம் குறித்து முன்வைக்கப்படும் இரண்டாம் கருத்தாக்கமோ, நம்முடைய தேசத்தைப் பெரும்பான்மை மதத்தின் அடிப்படையில் மட்டுமே வரையறுத்து, மற்ற சமூகங்களை அதிலிருந்து விலக்கிவைக்கிறது. தேசம் குறித்த முதல் கருத்தாக்கம் தாஜ் மகாலை தேசியச் சின்னமாகவும் காந்தியை தேசத் தந்தையாகவும் முன்னிறுத்தியது; அதேவேளை, இரண்டாம் கருத்தாக்கமோ தாஜ் மகாலை தேசிய அவமானமாகவும் காந்தியை வில்லனாகவும், அவரைப் படுகொலை செய்த கோட்சேவைக் கதாநாயகனாகவும் முன்னிறுத்துகிறது.

இந்த இரு கருத்தாக்கங்களுக்கும் இடையிலான மோதலில், தொல் பழங்காலம் ஓர் ஆடுகளமாக உள்ளது. ஏனென்றால், சிறுபான்மை மதங்களை விலக்கி வைக்கும் தரப்பினர், உலகிலுள்ள மற்ற மக்கள்தொகைக் குழுக்களைப் போலவே இந்தியர்களும் பல்வேறு இடப்பெயர்வுகளால் உருவானார்கள்தான் என்ற வரலாற்று-அறிவியல் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

சிந்துவெளிக்கும் திராவிட இன மக்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா?

திராவிடமும் ஆரியமும் இனங்கள் அல்ல என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; இரண்டுமே மொழிக் குடும்பங்கள். திராவிடர் என்ற சொல் திராவிட மொழிகளைப் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டுகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக்குழுவான இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆரியர் என்று தங்களுக்குப் பெயர் சூட்டிக்கொண்டார்கள்.

அதனால் இது இனம் சார்ந்த கேள்வியல்ல; மொழி சார்ந்ததே. அந்த வகையில், ஹரப்பர்கள் பேசியது இன்றைய திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் மூதாதை மொழி அல்லது பூர்வ-திராவிட மொழி. இது மரபணுவியல், மொழியியல், தொல்லியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து கிடைத்த வலுவான ஆதாரங்கள் மூலம் உறுதியாகிறது.

மிகச் சிறந்த அறிஞரும் கல்வெட்டியலாளருமான மறைந்த ஐராவதம் மகாதேவன், வெகுகாலத்துக்கு முன்பே தன் உள்ளுணர்வால் இதைத் தெரிந்துகொண்டிருந்தார்: சிந்துவெளி மரபுகள் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பொதுவாக இருக்கும் அதேநேரம், அதன் மொழி வளம் இன்றைக்குத் தென்னிந்தியாவிடம்தான் உள்ளது.

தொடர்புக்கு:
arunprasath.s@hindutamil.co.in
valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x