Last Updated : 26 Jan, 2020 10:07 AM

 

Published : 26 Jan 2020 10:07 AM
Last Updated : 26 Jan 2020 10:07 AM

வட்டத்துக்கு வெளியே: சுவாசத்துக்காக ஒரு பாட்டு

காத்த வர விடு
மூச்ச விட விடு
கோட்ட தொட விடு
சடுகுடு சடுகுடு…

- துரித இசையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒலிக்கும் இந்த ராப் பாடலின் பின்னணியில் துள்ளல் இசையைத் தாண்டிய ஒரு சோகம் நம்மை அழுத்துகிறது. அதுதான் காற்று மாசு.

வடசென்னையில் இருக்கும் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாட்டு வீரர்களும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் அவலத்தை நம் கண்களுக்கும் காதுகளுக்கும் தருகிறது இந்த விழிப்புணர்வுப் பாடல்.

இந்தியா முழுவதும் வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு 60 வயதில் வந்த நோய்கள் எல்லாம் இன்றைய தலைமுறையினரின் இருபது வயதிலேயே எட்டிப் பார்க்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், நீர் நிலைகளில் கலக்கும் கழிவு போன்றவற்றால் காற்று மாசு தலைநகர் டெல்லி போன்று பல நகரங்களிலும் அதிகரித்துவருகிறது. சென்னையில் மணலி, எண்ணூர் போன்ற இடங்களில் காற்று மாசின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகம்.

கடந்த ஆண்டு ‘காற்றுப் பரிசோதனைக் கண்காணிப்பு நிலையம்’ எடுத்த ஆய்வில் ஒரு நாளில் 60 சதவீத நேரம் மணலியைச் சேர்ந்த மக்கள் தரமற்ற காற்றையே சுவாசிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையிலும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ‘காத்த வர விடு’ எனும் ராப் பாணி பாடலை எண்ணூர் கழிவேலி பாதுகாப்பு பிரச்சாரக் குழு, எக்ஸ்டின்சன் ரெபெலியன் சென்னை, ஃபிரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ‘சென்னை காலநிலை மாற்ற நடவடிக்கைக் கூட்டமைப்பு’ அண்மையில் வெளிட்டது.

திறனைக் குறைக்கும் மாசு

வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் விஷக் காற்றை வெளிப்படுத்தும் புகைக் கூண்டுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மைதானங்களில் விளையாடும் கபடி, கால்பந்து, சிலம்பம், குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் பல மடங்கு குறைந்திருப்பதை விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இந்தப் பின்னணியில் ‘காத்த வர விடு’ என்ற பாடலை எழுதி, ‘கொடைக்கானல் வோண்ட்’ பாடலைப் பாடிய சோபியா அஷ்ரப்புடன் இணைந்து பாடியுள்ளார் லோகன். ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்க, ஆப்ரோ இந்தப் பாடலுக்கான இசையை வழங்கியிருக்கிறார். பாடலின் காணொலியில் கபடி வீரர்களே இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தம். சென்னை மாநகராட்சிக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் கருத்துகளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் இந்தப் பாடலின் நோக்கம்.

வடசென்னையிலிருந்துதான் கபடி, கால்பந்தாட்டம், சிலம்பம், குத்துச்சண்டை வீரர்கள் அதிகமாக உருவாகின்றனர். ஆனால், அங்கேதான் அதிக அளவில் காற்று மாசை ஏற்படுத்தும் ஏழு நிலக்கரி அனல் மின் நிலையங்கள், மாநிலத்திலேயே மிகப் பெரிய குப்பை மேடு, தென்னிந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.

பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=qDwU0jSKmDc

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x