Published : 25 Jan 2020 01:42 PM
Last Updated : 25 Jan 2020 01:42 PM

விதை முதல் விளைச்சல் வரை 18: சுற்றுச்சூழல் பேண ஒருங்கிணைந்த பண்ணையம்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

கடந்த வாரம் சுற்றுச்சூழலைப் பேண பண்ணைக் கழிவை உரமாக்கிப் பின்னர் பண்ணையிலேயே சாகுபடிக்கு உரமாகப் பயன் படுத்துவது குறித்துப் பார்த்தோம். தற்போது, ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பல்வேறு வேளாண்மை தொழில்களை மேற்கொள்வது குறித்துப் பார்ப்போம்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் நோக்கம் அந்தப் பண்ணையில் சாகுபடிக்குத் தேவையான இயற்கை உரங்களைக் கால்நடை வளர்ப்பதன் மூலம் பெறுதல், பயிர் வளர்ப்பிலிருந்து பெறப்படும் கழிவை (தட்டைகள், வைக்கோல்) கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல் என ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகவும் வருடம் முழுவதும் பண்ணையில் வருமானம் ஈட்டும் விதமாகப் பல்வேறு வேளாண் தொழில்களை மேற்கொள்ளுதலும் ஆகும்.

பயிர் சாகுபடியுடன் அதே நிலத்தில் ஒருபுறம் கால்நடைக்குத் தேவையான புல் தீவனம் அல்லது மரவகைப் பயிர் வளர்த்தல், மாடு, ஆடு, கோழி, பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன் வளர்த்தல், தேனீ வளா்ப்பு, அஸோலா என்ற ஒருவகைப் பாசி வளா்ப்பு, வாரந்தோறும் வருமானம் தரும் வகையில் மலர்ப்பயிர் வளர்த்தல், மண்புழு உரம், காளான் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, பறவை வளர்ப்பு ஆகிய பல வழிமுறைகளில் ஆண்டு முழுவதும் பண்ணையிலிருந்து வருமானம் பெறுதலே இதன் நோக்கம்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பயிர் சாகுபடி செய்யும் நில அமைப்பு, நீர் ஆதாரங்கள் இருப்பு, விவசாயிகளின் விருப்பம், உபரி வருமானம் ஆகிய அம்சங்களின் அடிப்படையிலேயே அமையும்.

மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்

பருவ மழையை நம்பி சாகுபடி செய்யும் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் மிகவும் கைகொடுக்கும். வருடத்தில் நான்கு மாதம் மட்டுமே மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழையின் மூலம் மட்டுமே மானாவாரியாகப் பயன்பெறும் நிலங்களில் இப்பண்ணையத்தின் தேவை அதிகம்.

பெரும்பாலும், இவ்வகை மானாவாரி நிலங்களில் சிறுதானியப் பயிர்களும் கூடவே ஊடுபயிராகப் பயறு வகைப் பயிர் சாகுபடி செய்வதும் ஓரிரு இடங்களில் மழையை நம்பி முதல் மழையின் அடிப்படையில் நெற்பயிர் நேரடி விதைப்பு முறையில் மேற்கொள்வதையும் பார்க்கலாம்.

இவ்வாறு ஒரு பயிர் சாகுபடியை மட்டும் நம்பி மானாவாரி சாகுபடியை மேற்கொள்வது கடினமான ஒன்று. இவ்வகை நிலங்களில் இக்கூட்டுப் பண்ணையம், நல்ல பலனைத் தரும். இவ்வகையில் பசு மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில் ஆண்டு முழுவதும் வருமானத்தைத் தருவதாகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் பண்ணையின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவையாகவும் உள்ளன.

மானாவாரி நிலங்களில் பல்வேறு வகைப் பயிர்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். மானாவாரிப் பயிர் சாகுபடியுடன் கூடவே கால்நடைகளுடன் வேளாண்மைக்காடு வளா்ப்பு அல்லது பயிர் சாகுபடி, ஆடு வளர்ப்பு, உடன் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள், காடு வளர்ப்பு ஆகியவற்றையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளலாம். சில கூட்டுப் பண்ணைய மாதிரிகள் இதுபோல் அந்தந்தப் பகுதிகளுக்குத் தக்கவாறு பயிர் சாகுபடியுடன் இணைந்த வேளாண் முறைகளையும் வேளாண் சார்ந்த உபதொழிலையும் மேற்கொள்ளலாம்.

வேளாண்மைத் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தைத் தேர்ந்தெடுத்து அவ்வட்டாரத்தில் ஒரு கிராமத்தில் நூறு ஹெக்டேர் பரப்பளவில் தொகுப்புத்திட்டமாக இக்கூட்டுப்பண்ணையத் திட்டம் மாதிரிக்கூட்டுப்பண்ணையத் திட்டமாகச் செயல்படுத்தப் பட்டுவருகிறது.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x