Published : 25 Jan 2020 11:21 AM
Last Updated : 25 Jan 2020 11:21 AM

அச்சுறுத்தும் புது வைரஸ்

முகமது ஹுசைன்

சீனாவில் 450 பேரைத் தாக்கி, அதில் 20 பேரைக் காவு வாங்கியுள்ளது ஒரு வைரஸ். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அந்தப் புது வகை வைரஸின் தாக்குதலைக் கட்டுக்குள் கொண்டுவர, சீன நாட்டின் அதிகாரி களும் மருத்துவர்களும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

2019 கரோனா வைரஸ் தாக்குதலின் பிறப்பிடம் எனக் கருதப்படும், சீனாவின் உஹான் நகருக்குள் நுழையவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சீன அதிகாரிகள் கடந்த புதன் அன்று அறிவித்தனர். ரயில், விமானம், பேருந்து, ஃபெர்ரி என அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் அந்த நகரில் ரத்து செய்யப் பட்டுள்ளன.

அந்தக் கொடிய வைரஸின் தாக்குதலுக்குள்ளான முதல் நோயாளி அமெரிக்காவில் கண்டறியப்பட்டதாகக் கடந்த செவ்வாய் அன்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியாட்டில் நகரைச் சேர்ந்த, 30 வயதுக்கு உட்பட்ட அந்த மனிதர் சமீபத்தில் உஹான் நகருக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், எல்லா விமான நிலையங்களும் உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. சீனாவிலிருந்துவரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப் படுவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், விலங்குகளிடமிருந்தே பரவும் என அறியப்பட்ட அந்த வைரஸ், மனிதர்களின் மூலமாகவும் பரவுவதாக சீன அறிவியலாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

மர்மக் காய்ச்சலின் வரலாறு

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுக்க வரலாற்றில் தொற்றுநோய்களும் மர்மக் காய்ச்சல்களும் மனித இனத்தைக் கொத்து கொத்தாகக் காவு வாங்கி உள்ளன. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முன்னே ஏகப்பட்ட மக்கள் அந்நோய்களுக்குப் பலியாயினர் என்று வரலாறு சொல்கிறது. 1918 -ம் ஆண்டில் மர்மக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடிப் பேர் பலியாயினர். அந்தப் பாதிப்புகளின் வடுக்கள் மனித இனத்தின் மீது நீங்காத தழும்புகளாகியுள்ளன.

போலியோ, சின்னம்மை இன்னும் பல நோய்களை முற்றிலும் அழிக்க அறுபது ஆண்டுகள் ஆயின. பல மர்மக் காய்ச்சல்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் இன்றும் போராடுகின்றன. வருங்காலத்திலும் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலால் உலகம் முழுவதும் மூன்று கோடிப் பேர் ஆறு மாதத்துக்குள் பலியாவார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரலாற்று அனுபவங்களின்படி புதிய வைரஸ் நோய்கள் உருவாகி உலகம் முழுவதும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் மக்களைக் காவு வாங்கும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன.

கரோனா வைரஸ் என்பது என்ன?

கரோனா என்பது மிகப் பெரிய வைரஸ் குடும்பம். சீனாவை 2002-ல் தாக்கிய சார்ஸ் நோயும் கரோனா வைரஸ் மூலம்தான் ஏற்பட்டது. இந்த வைரஸ் குடும்பத்தில் இதுவரை மொத்தம் 6 வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தற்போது சீனாவைத் தாக்கிவரும், இந்தப் புதிய வைரஸ், கரோனா வைரஸ் குடும்பத்தின் 7-ம் வைரஸ்.

இந்த வைரஸ் எப்படி உருவானது?

சீனாவின் உஹான் பகுதியில் இருக்கும் மீன் சந்தையில் இது உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆயினும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முறையான பராமரிப் பின்மையைக் காரணம் காட்டி, அந்த மீன் சந்தைக்கு சீன நாட்டின் சுகாதாரத் துறை சமீபத்தில் சீல் வைத்துள்ளது.

என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

ஒருவர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளாரா என்பதை நம்மால் முதலில் இனங்காண முடியாது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு, சளி, உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி உள்ளிட்டவை ஏற்படும். முதலில், லேசான காய்ச்சலில்தான் இந்தத் தாக்குதல் தொடங்கும். முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால், இறுதியில் மரணமே மிஞ்சும்.

உலக நாடுகள் ஏன் பதறுகின்றன?

மிகவும் வலிமையான இந்த கரோனோ வைரஸ், மனிதர்களை மிக எளிதாகத் தாக்கும் ஆற்றல் படைத்தது. இதனால், மோசமான பாதிப்புகள் விரைவாக ஏற்படும் சாத்தியம் அதிகம். கரோனா வைரஸ் தாக்கிய ஒரே வாரத்தில் 20 பேர் சீனாவில் பலியாகி இருப்பது இதற்குச் சான்று. அது மட்டுமல்லாமல்; விலங்குகளின் வழி மட்டுமே பரவிய இந்த வைரஸ் தற்போது மனிதர்களின் வழியாகவும் பிற மனிதர்களுக்குப் பரவும் வல்லமையைப் பெற்றுள்ளது.

சார்ஸ், பன்றிக் காய்ச்சல், எபோலா ஆகிய நோய்கள் தாக்கியபோது, உலக அளவிலான நெருக்கடி நிலையை உலக சுகாதார நிறுவனம் எப்படி அறிவித்ததோ, அதே போன்று தற்போது கரோனா வைரஸ் தாக்குதலுக்கும் அறிவிக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. முறையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படாவிட்டால், விரைவில் இது உலகம் முழுவதும் பரவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பயோ தாக்குதலா?

2002-ல் சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் சார்ஸ் ஏற்பட்டது. அதன் காரணமாக, 774 பேர் இறந்தனர், 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதனால், சீனாவின் வளர்ச்சி 10 ஆண்டுகள் தள்ளிப்போனது. அதே போல், 2012-ல் மத்திய கிழக்கு நாடுகளில், மெர்ஸ் எனப்படும் Middle East respiratory syndrome பரவியது. அது 900 பேரைக் காவு வாங்கியது. அந்த நாடுகளின் பொருளாதாரமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. அன்று மக்களிடையே ‘பயோ வார்’ குறித்த அச்சம் எழுந்தது. சீனாவில் தற்போது பரவிவரும் இந்த கரோனா வைரஸ் தாக்குதல் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களின் சதியால் ஏற்பட்டதா என்ற சந்தேகங்கள் இன்றும் எழுப்பப்படுகின்றன. தங்கள் நாட்டின் மீது பயோ தாக்குதல் நடத்தப்படுகிறதா என்றும் சீன நாட்டு வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். போட்டியும் பொறாமையும் சுயநலமும் தலைவிரித்தாடும் இந்த யுகத்தில் எதையும் உறுதியாக மறுப்ப தற்கு இல்லை என்பதே நிதர்சனம்.

மக்கள்தொகையே காரணமா?

சீனாவை இந்த கரோனா வைரஸ் தாக்குவதற்கு மக்கள் தொகையே காரணம் என்று கருதப்படுகிறது. அங்கு நிலவும் சுகாதாரக் குறைபாட்டால்தான், கரோனா வைரஸ் ஏற்கெனவே அந்த நாட்டைத் தாக்கியுள்ளது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, புதிய எதிர்ப்பாற்றலுடனும் அதிக வீரியத்துடனும் அங்கே கரோனா வைரஸ் உருவாகி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் முன்பு உருவான அதே இடத்தில் மீண்டும் உருவாகும் தன்மைகொண்டது.

டெங்கு, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை இந்தியாவில் குறிப்பிட்ட இடங்களில் ஆண்டுதோறும் தாக்குவதற்குக் காரணமும் இதுவே. சீனாவின் மக்கள்தொகையும் சுகாதாரக் குறைபாடும் கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்றவை. இந்த நிலையில், இந்த கரோனா வைரஸ், இந்தியாவுக்குள் பரவினால், அதன் பாதிப்புகள் பன்மடங்கு வீரியத்துடன் இருக்கும்.

நம்பிக்கை அளிக்கும் அறிவியலாளர்கள்

இன்று, சீனப் புத்தாண்டு தினம். வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் அந்தப் பண்டிகைக்காக, உலகெங்கும் இருந்து, லட்சக்கணக்கானோர் சீனாவுக்கு வந்துசெல்கிறார்கள். இதனால், இந்த கரோனா வைரஸ் உலகெங்கும் விரைந்து பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தப் புதிய கரோனா வைரஸின் டி.என்.ஏ தொடர் கண்ணியைக் கண்டறிந்து விட்டதாக சீன அறிவியலாளர்கள் அறிவித்து உள்ளனர். ஆகவே, கரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையும் தடுப்பூசியும் விரைவில் கண்டறியப் பட வாய்ப்புள்ளது என்பதே நம்பிக்கை அளிக்கும் செய்தி.

கட்டுரையாளர், தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x