Published : 22 Jan 2020 12:50 PM
Last Updated : 22 Jan 2020 12:50 PM

படமும் செய்தியும்: மிகப் பெரிய பூ!

ஸ்நேகா

உலகின் மிகப் பெரிய பூக்களில் ஒன்று டைட்டன் ஆரம் (Titan arum). இது நீண்ட காலம் வகைத் தாவரம். இந்தோனேஷியாவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது.

* செடிதான் என்றாலும் மரம்போல் 20 அடி உயரத்துக்கு வளரும். 3 கிளைகளுடன் ஏராளமான இலைகளுடன் 15 அடி அகலத்துக்குக் குடைபோல் நிற்கும்.

* இந்த இலைகள் சூரியனிலிருந்து ஆற்றலைப் பெற்று, தண்டுப் பகுதியில் சேமித்து வைக்கும். இது பூப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தரும்.

* 12 முதல் 18 மாதங்களில் இலைகள் மடிந்துவிடும். செடி செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும்.

* மணியைக் கவிழ்த்து வைத்ததுபோல் பாளைத் தண்டு இருக்கும். இது சுமார் 100 கிலோ எடைவரை இருக்கும். செடி செயலற்ற காலகட்டத்தில் தண்டிலிருந்து மொட்டு உருவாகிறது. மொட்டு வளர்ச்சியின் வேகம் அபரிமிதமாக இருக்கும்.

* முழுமையாகப் பூ மலரும்போது, மடலின் மஞ்சரியிலிருந்து வெப்பம் வெளியேறும். அதிலிருந்து அழுகிய விலங்குகளின் சடலம்போல் துர்நாற்றம் வெளிவரும். இதனால்தான் இந்தப் பூவை, ‘பிண மலர்’ என்று அழைக்கிறார்கள். துர்நாற்றத்தின் மூலம் பூச்சிகள், வண்டுகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துகிறது, இந்தச் செடி.

* பூ ஒரே நாளில் வாடிவிடும். பாளைத் தண்டிலிருந்து பெர்ரி போன்ற தோற்றமுடைய கனிகள் உருவாகும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என நிறமாற்றம் அடையும். கனியில் உள்ள விதைகள் இருவாச்சி போன்ற பறவைகள் மூலம் பரவி, மீண்டும் புதியச் செடிகள் முளைக்கும்.

* 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை செடியிலிருந்து பூ உருவாகிறது. ஒரு செடி 4 முதல் 6 பூக்களைக் கொடுத்துவிட்டு, மடிந்துவிடுகிறது.

* செடி பூக்காத காலகட்டத்தில் கிளைகள், இலைகள் அற்ற மரம்போல் காணப்படும். பூப்பதற்கான ஆற்றலைப் பெற்ற பிறகே, பூக்கும்.

* 1878-ம் ஆண்டு தாவரவியலாளர் ஒடோர்டொ பெக்காரி மூலம் சுமத்ரா தீவில் இந்த மலர் கண்டறியப்பட்டது. மழைக்காடுகள் அழிக்கப்படுவதால் டைட்டன் ஆரமும் அழியும் ஆபத்தான சூழலில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x