Published : 18 Jan 2020 12:16 PM
Last Updated : 18 Jan 2020 12:16 PM

நெற்பயிரில் குலை நோய்

சீதாராமன்

நெற் பயிரைத் தாக்கும் குலை நோயால் விளைச்சல் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நோய் தாக்க முக்கியமான காரணங்களுள் ஒன்று, அதிகப் பனிப்பொழிவு. பயிரின் அனைத்துப் பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருப்பது இந்த நோய்த் தாக்குதலைக் கண்டுபிடிக்கும் ஒரு வழிமுறை. அதுமட்டுமல்லாமல் இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப்புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிரத் தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும்.

இதுவே குலை நோய்த் தாக்குதல் எனத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது. இந்த நோய்த் தாக்குதலால் கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும். இந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொண்ட நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையப் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ், கொரடாச்சேரி வட்டார வேளாண்மை துணை அலுவலா் துரைராஜ் ஆகியோா், இந்த நோய்த் தடுப்பு முறைகள் பற்றி ஆலோசனைகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீதக் கரைசல் அதாவது ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாள்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொருத்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டா் புளித்த தயிரைக் கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரிக்கும்.

இந்த நோய்த் தாக்குதல் தீவிரமாக இருந்தால் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டயிள்யூ.பி -200 கிராம் அல்லது காா்டிபன்டிடசிம் 50 டயிள்யூ.பி -200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோா்பின் 25 எஸ்.சி. - 200 மிலி அல்லது ஐசோபுரத்தியோலேன் 40 ஈசி - 300 மிலி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x