Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

என் பாதையில்: அன்பு செய் மனமே

எங்கள் வீட்டில் இருக்கும் ‘குட்டி’, நாட்டுநாய் வகையைச் சேர்ந்தது. நான் கல்லூரி விடுதியில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்ததுமே என் மேலே தாவிக் குதித்துத் தன் அன்பை வெளிக்காட்டுவதை. நானும் அதைக் கொஞ்சிவிட்டுத்தான் வீட்டுக்குள் நுழைவேன். அன்று நல்ல பசி. குட்டியின் அன்பை மதிக்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன்.

சற்று நேரம் சத்தமிட்டுப் பார்த்துவிட்டு அமைதியாகப் படுத்துவிட்டான். சிறிது நேரம் கழித்து நான் வெளியே வந்து பார்த்தபோது குட்டியின் கண்களில் கண்ணீர்தான் வரவில்லை. மற்றபடி அழுததைப்போல இருந்தது அதன் முகம். அதில் அவ்வளவு ஏமாற்றம். அன்று மாலைவரை சோகமாகவே இருந்தது. குழந்தையைச் சமாதானப் படுத்துவதுபோல் கொஞ்சி, கெஞ்சி அதை வழிக்குக் கொண்டுவந்தேன்.

குட்டியின் இந்த ஏமாற்ற உணர்வையும் அதைத் தொடர்ந்து அதனுடைய அடத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. அன்று என் மனத்தில் தோன்றிய நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாம் பழகும் ஒவ்வோர் உயிரினமும் உணர்வுகளைக் கொண்டவையே என்பதை அன்றுதான் உணர்ந்தேன். இப்போதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம்.

ஆனால், பொருட்களைவிட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை குட்டி எனக்கு உணர்த்திவிட்டது. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடிய பாரதியின் வரிகள் அர்த்தம்கூடித் தெரிந்தன. அனைத்து உயிரையும் சக உயிராக மதிக்கப் பழகினால் வன்முறையும் வெறுப்பும் மடிந்துவிடாதா?

- ஜெ. சரண்யா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x