Published : 21 Dec 2019 01:20 PM
Last Updated : 21 Dec 2019 01:20 PM

வீடு வாங்கப் போறீங்களா?

சீதாராமன்

நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியம் இருக்கும்; கனவு இருக்கும். நடுத்தர மக்கள் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரே கனவு, லட்சியம் எல்லாம் சொந்த வீடுதான்.

காலை நீட்டி ஆசுவாசும்கொள்ள நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.பாரதியின் ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ பாடலைச் சொந்த வீட்டுக்கும் ஒப்பிடலாம். இந்தச் சொந்த வீடு கனவு நிறைவேற முன்பணம் அவசியம். பெரும்பாலானவர்கள் வங்கிக் கடன் வாங்கிதான் சொந்த வீடு வாங்குவோம்.

ஆனால், வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றாலும், வீடு வாங்குபவரிடம் ஒரு அடிப்படைத் தொகைக் கண்டிப்பாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீதத் தொகை வீடு வாங்குபவரிடம் இருக்க வேண்டும். இதை ‘டவுன்பேமன்ட்’ என்று சொல்வார்கள். இந்தத் தொகை இருந்தால்தான், உங்களால் வீடையே வாங்க முடியும். ரூபாய் 30 லட்சத்தில் வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 6 முதல் 7 லட்சம் ரூபாயாவது நீங்கள் டவுன்பேமன்டாகச் செலுத்த வேண்டும்.

இந்தப் பணத்தை முதலில் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். இந்தத் தொகை இருந்தால்தான், மேற்கொண்டு பணத்தை வங்கியில் கடனாகப் பெற முடியும். உண்மை என்னவென்றால், பலரிடம் இந்த ‘டவுன்பேமன்ட்’ இருக்காது. வீட்டில் மனைவி நகையை விற்பது, பூர்விகச் சொத்தை விற்பது என மாற்று ஏற்பாடுகள் மூலமே இந்தத் தொகையைத் திரட்டுவார்கள். இந்த ‘டவுன்பேமன்ட்’ தொகையை இந்த முறையில் திரட்டாமல், உங்கள் சேமிப்பின் மூலமே திரட்ட முடியும். ஆனால், இதற்குச் சரியான திட்டமிடல் தேவை.

வீடு வாங்கலாம் என்று மனதுக்குள் யோசனை உதிக்கும்போதே, இத்தனை ஆண்டுகளுக்குள் வாங்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி முடிவெடுத்தால்தான் அதற்கேற்ப முதலீட்டை செய்யலாம். அந்தத் தொகையைக் கொண்டு நீங்கள் டவுன்பேமன்ட்டைச் சொந்தமாகக் கையில் வைத்துக்கொள்ளலாம்.

முதலில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? ஒரு வேளை நீங்கள், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வாங்க உத்தேசித்தால், சற்று மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம். வங்கி, தபால் நிலையச் சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம்.

முதலீடு என்றவுடன் இஷ்டத்துக்கு எதையும் செய்துவிட வேண்டாம். கொஞ்சம் கவனமும் இருக்க வேண்டும். உதாரணமாக மாதம் உங்களால் 10,000 ரூபாய் சேமிக்க முடியும் என்றால், அந்த முழுத் தொகையையும் முதலீடு செய்துவிட வேண்டாம். 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது தேவையில்லை. குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது எப்போதுமே சற்று ரிஸ்க்கானது என்று முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

ஏனென்றால், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்கள் எனும்போது, பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வங்கி, தபால்நிலையச் சேமிப்பு, கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடே போதும்.

இந்த விஷயத்தில் பலரும் செய்யும் ஒரு தவறு என்ன தெரியுமா? டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் மூலம் தொகையைத் திரட்டுவார்கள். இந்தச் கடன் வகைகளில் வட்டி அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தக் கடன் வகையில் பணத்தைத் திரட்டி கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பேரளவு கடனைத் திருப்பி அடைக்கப் போய்விடும். அதோடு வீட்டுக் கடனும் சேரும்போது, உங்களுடைய வாழ்வாதாரத்துக்கான ரிஸ்க் அதிகரித்துவிடும். பொதுவாக, ஒருவருடைய மாத வருவாயில் 40 சதவீதத்துக்கு மேல் கடன் வாங்குவது ஆரோக்கியமானது கிடையாது. வங்கிகளும் இதை அனுப்பதில்லை. ஒரு வேளை வாங்கினால், திடீரென வருமானம் பாதிக்கபடும்போது மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.

ஆனால், ‘டவுன்பேமன்ட்’ தொகையை பெற்றோர், உறவினர், நண்பர்கள் மூலம் வட்டி இல்லாமல் திரட்ட முடிந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எஃப். தொகையிலிருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம்.

இன்னொரு விஷயம். ‘டவுன்பேமன்ட்’ தொகையைச் சேமிப்பதற்கு முன்பு உங்களுக்கு வேறு கடன் இருந்தால், சற்று யோசிக்க வேண்டும். அந்தக் கடனை முதலில் அடைத்தபிறகே வீடு வாங்க சேமிப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x