Published : 19 Dec 2019 11:39 AM
Last Updated : 19 Dec 2019 11:39 AM

முல்லா கதைகள்: தெரியுமா, தெரியாதா?

ஒரு நாள், கிராமத்தினர் முல்லாவிடம் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்தனர். வரையறைக்கே உட்படாத ஒரு விசித்திரமான புனிதர் என்று முல்லா தன்னைக் காட்டிக் கொண்டதுதான் அதற்குக் காரணம். கிராமத்தினர் அனைவரும் முல்லாவைத் தேடிச்சென்று, மசூதியில் உரை நிகழ்த்த வரவேண்டுமென்று பணிவோடு ஒரு கோரிக்கையை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை முல்லா உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

உரை நிகழ்த்த வேண்டிய நாள் வந்தது. முல்லா மேடையில் ஏறி பேசத் தொடங்கினார்: ‘அன்புக்குரியவர்களே! நான் உங்களிடம் என்னச் சொல்லப்போகிறேன் என்று தெரியுமா?’

‘இல்லை, எங்களுக்குத் தெரியாது,’ என்று கூட்டத்தினர் கத்தினர்.

‘அது உங்களுக்குத் தெரியாத வரை, என்னால் எதையும் சொல்ல முடியாது. என் உரையை தொடங்கக்கூட முடியாத அளவுக்கு நீங்கள் அனைவரும் அறியாமையில் இருக்கிறீர்கள்’ என்று சொன்னார் அவர்.

இப்படிப்பட்ட அறியாமையில் உள்ள மக்களுடன் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் மேடையில் இருந்து கீழிறங்கிய முல்லா, வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

சங்கடத்துடன், கிராமத்து மக்கள் முல்லாவின் வீட்டுக்குச் சென்றனர். வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் உரை நிகழ்த்த வருமாறு முல்லாவுக்கு அழைப்புவிடுத்தனர். முல்லா தன் உரையை மீண்டும் அதே கேள்வியுடன் தொடங்கினார்.

இந்த முறை கூட்டத்தினர் அனைவரும் ஒரே குரலில்: ‘ஆம், எங்களுக்குத் தெரியும்,’ என்று பதிலளித்தனர். ‘அப்படியென்றால், உங்கள் நேரத்தை நான் வீணடிக்க தேவையில்லை. நீங்கள் அனைவரும் போகலாம்’ என்று சொன்ன முல்லா வீடு திரும்பினார்.

மூன்றாம் வெள்ளிக்கிழமை எப்படியாவது முல்லாவைப் பேச வைத்துவிட வேண்டுமென்று திட்டமிட்ட கிராமத்தினர், தங்கள் முயற்சியில் வெற்றியும் பெற்றனர். முல்லா எப்போதும்போல் அதே கேள்வியுடன் தன் உரையைத் தொடங்கினார்:

முல்லா கேட்கும் வழக்கமான கேள்விக்கு, கூட்டத்தினர் தயாராக இருந்தனர்.

‘எங்களில் சிலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது’ என்று அவர்கள் பதிலளித்தனர்.

‘அற்புதம். அப்படியென்றால், தெரிந்தவர்கள் அதைத் தெரியாதவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லிய முல்லா வீடு திரும்பிவிட்டார்.

- யாழினி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x