Published : 15 Dec 2019 11:03 AM
Last Updated : 15 Dec 2019 11:03 AM

இனி எல்லாம் நலமே: மார்பில் கட்டி வந்தால் புற்றுநோயா?

அமுதா ஹரி

மார்பகங்கள் என்று சொன்னதுமே அதைக் கவர்ச்சிக்குரிய உறுப்பாகப் பார்ப்பதாகத்தான் பொதுப் பார்வை இருக்கிறது. ஆனால், மார்பகம் என்பது உடல்ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வுரீதியாகவும் மனோரீதியாகவும் பார்க்கப்பட வேண்டிய அங்கம்.
பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவில் மார்பகங்கள் இருப்பதில்லை. ஒரு பெண்ணுக்கேகூட இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு முக்கிய உறுப்பாக இருப்பதுதான் மார்பகத்தின் முக்கியத்துவம். தாய்ப்பால் சுரப்பதற்கும் மார்பகங்களின் அளவுக்கும் தொடர்பு இல்லை. தாய்ப்பால் சுரக்கும் தன்மை ஒரு பெண்ணின் ஹார்மோன் சுரப்பையும் ஆரோக்கியத்தையும் பொறுத்தே அமைகிறது. அதனால், தாய்ப்பால் கொடுப்பதையொட்டி மார்பகங்களின் அளவு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

சுய பரிசோதனை அவசியம்

புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் கருப்பைவாய்ப் புற்றுநோய் முதலிடத்திலும் மார்பகப் புற்றுநோய் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. 50 வயதைக் கடந்தவர்கள், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மார்பகத்துக்கான மமோகிராம் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. சிறு வயதிலிருந்தே மார்பகத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்றுகொண்டு, உள்ளங்கையை மார்பில் மெதுவாக அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதாவது கட்டி இருப்பதாக உணர்ந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மார்பகக் காம்புகளில் மாற்றம் தென்பட்டாலோ மார்பகத்தின் அமைப்பு, தோலின் தன்மையில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ மருத்துவரை அணுகவேண்டும். மார்பகப் பரிசோதனையை மாதத்துக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதால், ஏதாவது மாற்றம் தென்பட்டால் அதை உடனடியாக உணர முடியும்; தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல முடியும்.

மார்பகத்தில் கட்டி என்றாலே அது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம் எனக்கு ஒன்றும் வராது என்று அலட்சியப்படுத்துவதும் தவறு. கட்டியின் தன்மை குறித்து மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மார்பகத்தின் அமைப்பு பற்றித் தெரிந்துகொண்டால் கட்டிகள் குறித்து எளிதில் புரிந்துகொள்ளலாம். மார்பில் பால் சுரக்கும் சுரப்பிகள் (Glands) உள்ளன. பாலை முலைக் காம்புக்கு எடுத்துச் செல்லக்கூடிய duct என்று சொல்லக்கூடிய குழாய்கள் உள்ளன. நார்த்தசைகளும் (fibrous tissues) கொழுப்பும் இருக்கும். இவை எல்லாம் சேர்ந்ததுதான் மார்பகம்.

இருவகைக் கட்டிகள்

சிலருக்கு மார்பகத்தில் பார்க்கத் திட்டுத் திட்டாகவோ கட்டி போன்றோ இருக்கலாம். இவை நீர் நிரம்பிய பலூன் கட்டிகள். இவை குறித்துப் பயப்படத் தேவையில்லை. மாதவிடாய்ச் சுழற்சியையொட்டி இவற்றின் அளவு மாறுபடலாம். ஒருவேளை இந்தச் சுழற்சியையொட்டிய மாற்றத்துக்குப் பிறகும், கட்டியின் அளவு குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம். இந்த வகைக் கட்டிகள் புற்றுநோயாக மாறாது.

பைப்ரோ அடினோமோ என்கிற தசைநார்க்கட்டி இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இதை Mouse in the Breast என்றும் சொல்வார்கள். இந்தக் கட்டியை ஒரு பக்கம் விரலால் அழுத்திப் பிடித்தால் இன்னொரு பக்கம் ஓடிவிடும். இது நகரக்கூடிய கட்டி. சில நேரம் நகராமலும் இருக்கலாம்.

பரிசோதனை முறைகள்

மமோகிராம்: எக்ஸ்ரே கதிர்வீச்சு மூலம் வெவ்வேறு நிலையில் வைத்து மார்பகத்தைப் படம் எடுப்பார்கள். கட்டி இருந்தால் இதில் தெரிந்துவிடும்.

ஊசிமூலம் சோதித்தல்: கட்டி இருக்குமிடத்தில் ஒரு மெல்லிய ஊசியை நுழைத்து அந்த இடத்திலிருக்கும் திசுவை எடுத்துப் புற்றுநோய்ப் பரிசோதனைக்கு அனுப்பலாம். நீர் இருந்தால் அது நீர்க்கட்டி என்ற அளவில் போய்விடும். இந்த முறை பயன்படாத நேரத்தில் அடுத்தகட்டப் பரிசோதனை முறை Tru-Cut biopsy. இதில் பயன்படும் கருவியைக் கட்டியினுள் செலுத்தி அதன்மூலம் அங்கிருக்கும் திசுவை எடுப்பார்கள். வலியையும் பயத்தையும் இந்தப் பரிசோதனை முறை மட்டுப்படுத்தும்.
சிறு கட்டியாக இருந்தால் அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆனால், தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஓரளவுக்குப் பெரிய கட்டியாக இருக்கும்பட்சத்தில் அதை அகற்றி விடுவது நல்லது. அது புற்றுநோய்க் கட்டியாக இல்லையென்றாலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றால் அகற்றிவிடுவதுதான் நல்லது. ஏனென்றால், அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம். இதுபோன்ற கட்டிகளை நீக்க சிறிய அறுவை சிகிச்சை போதும். கண்ணுக்குத் தெரியாத அளவு திறந்து இந்தக் கட்டியை எடுத்துவிட்டு, பிளாஸ்டிக் சர்ஜரியில் அந்த இடத்தைச் சரிசெய்துவிடலாம். வெளித்தோற்றத்தில் எந்த மாறுபாடும் இருக்காது.

மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள்

மார்பகப் புற்றுநோய் என்பது பெரும்பாலும் பால் சுரக்கும் நாளங்களிலோ பாலைக் குழாய்களுக்குக் கொண்டுசேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளிலோ தோன்றும். சில அறிகுறிகள் மூலம் இதைக் கண்டறியலாம். மார்பகத்தில் கட்டி இருக்கலாம். மார்புக்காம்பு உள்நோக்கி இழுக்கப்பட்டிருக்கலாம். மார்புக்காம்பைச் சுற்றிச் சிவந்துவிடும். காம்பில் ரத்தக் கசிவு வரலாம். தொடர்ந்து மார்பகத்தைப் பரிசோதிப்பவர்கள், மார்பகத்தின் அளவில் மாறுபாடு இருப்பதை உணர முடியும். மார்பைச் சுற்றியோ அதன் அடிப்பகுதியிலேயோ சிவந்திருக்கும். தோலின் தன்மையில் மாற்றம் ஏற்படலாம். சிலருக்குத் தொடர்ச்சியாக வலிகூட இருக்கலாம். தோல் செதில்செதிலாகத் தோன்றலாம். இந்த அறிகுறிகளில் எது இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பரிசோதனை மூலம்தான் புற்றுநோய் உள்ளதா இல்லையா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள இயலும். புற்றுநோயில் நான்கு நிலைகள் உண்டு. முதல் நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை மட்டும் எடுப்பார்கள். அடுத்த கட்டங்கள் என்றால் கட்டியுடன் மார்பகத்தையும் அகற்றி விடுவார்கள். புற்றுநோயின் தீவிரத்தைப் பொறுத்துச் சிலநேரம் கட்டி, மார்பகம், அக்குளில் உள்ள நெறிக்கட்டிகள் என அனைத்தையும் அகற்றிவிடுவார்கள். கவனிக்காமல் விட்டால் புற்றுநோய் இரண்டு மார்பகங்களுக்கும் பரவிவிடும் அபாயமும் இருப்பதால் நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்

புற்றுநோய்க்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து கீமோதெரபி, ரேடியோதெரபி கொடுக்கலாம். சிலருக்கு கீமோதெரபி கொடுத்துவிட்டும் அறுவை சிகிச்சை செய்வார்கள். மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்வரை கீமோதெரபி இருக்கும். மூன்று அல்லது நான்காம் நிலை புற்றுநோயாக இருந்தால் ஆறு மாதங்களுக்கு மேல்கூட கீமோதெரபி சிகிச்சை இருக்கும். புற்றுநோய்க் கட்டியின் தன்மையைப் பொறுத்து ரேடியோதெரபிகூடத் தேவைப்படலாம். இந்த சிகிச்சைகள் முடிந்த பிறகு சிலருக்கு மாத்திரை வடிவிலான கீமோதெரபி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டி வரலாம்.

யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வரலாம்?

55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

சிலருக்குப் பரம்பரை காரணமாக வரலாம்.

மரபணுக்களின் மாற்றம் காரணமாக வரலாம்.

தொடக்கத்திலேயே ரொம்பத் தடிமனாக இருக்கக்கூடிய மார்பகம் இருந்தால் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே மார்பகத்தில் கட்டி வந்தவர்களும் மார்பகத்தில் வீக்கம் இருந்தவர்களும் புற்றுநோய் உள்ளதா என்பதைப் பார்த்துக்கொள்வது நல்லது.

ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி, தேவையில்லாத மருந்துகளைத் தவிர்ப்பது, செயலூக்கத்துடன் இருப்பது போன்றவை புற்றுநோய் வராமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும். தொடர்ச்சியான மார்பக சுயப் பரிசோதனை, 50 வயதுக்கு மேல் தொடர்ச்சியான மமோகிராம் பரிசோதனை போன்றவை பிரச்சினையை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவும்.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x