Published : 12 Dec 2019 10:20 AM
Last Updated : 12 Dec 2019 10:20 AM

தெய்வத்தின் குரல்: குரு பிரம்மா குரு விஷ்ணு

சாதாரணமாக எல்லா ஜனங்களுக்குமே தெய்வ சிந்தனை இருக்கத்தான் வேண்டும். மனுஷ ஜீவன் அந்தப் பெயருக்கு லாயக்காக இருக்க வேண்டுமானால் தனக்கு ஜீவ சக்தியைக் கொடுத்த சுவாமியைச் சிந்தித்து, அவன் அருள் வழிகாட்டுகிறபடிதான் ஜீவனம் நடத்த வேண்டும். இந்த (தெய்வ) சிந்தனை நாமே பண்ணுவதாக இருந்தால் நம்முடைய சித்தம் ஓடுகிற தாறுமாறான ஓட்டத்தில் உருப்படியாக ஒன்றும் தேறாது.

அது மாத்திரமில்லாமல் நமக்கு சுவாமியைப் பற்றி சொந்த அனுபவமாக என்ன தெரியும்?
நமக்குத் தெரியாதவரைப் பற்றி நாம் எண்ணத்தைச் சிந்திக்க முடியும்? இங்கே, அப்படித் தெரிந்து கொண்ட பெரியவர்கள் பாடிய ஸ்தோத்திரங்கள் - தமிழ் முதலான பிரதேச பாஷைகளில் இருக்கிற துதிகளுந்தான் - நமக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட ஓடி வருகின்றன.

பல காலமாக அவற்றை, சுவாமியை சொந்தத்தில், நேரில் தெரிந்து கொண்ட எத்தனையோ பேர் சொல்லிச் சொல்லி அவற்றுக்கு தெய்விக சக்தி கூடிக் கொண்டே வந்திருக்கும். அவற்றைச் சொல்வதே, அதாவது? 'ஸ்தோத்ர பாராயணம்', 'துதி ஓதுதல்' என்பதே நம்முடைய சித்தத்தை சுவாமியிடம் சேர்த்து வைக்கும்.

நம் தேசம் செய்த பாக்கியம், இம்மாதிரி துதிகள் ஒவ்வொரு தெய்வத்தையும் குறித்துக் கணக்கு வழக்கு இல்லாமலிருக்கின்றன. நம் தேசத்திலும் இந்தத் தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் பாக்கியம் இங்கே தோன்றிய நம் முன்னோர்கள் நம்முடைய தமிழ் பாஷையில் துதிகளை அப்படியே கொட்டி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் அவரவரும், தாங்களே படித்துப் பாராயணம் பண்ணலாம். குருமுகமாகக் கற்றுக் கொண்டுதான் பண்ணணும் என்று கண்டிப்பு இல்லை. அனுபவம் கண்ட குரு எடுத்து வைத்துப் பண்ணினால் அது ரொம்ப விசேஷந்தான். ஆனால் அப்படிக் கட்டாயமாக விதி இல்லை.

பிள்ளையாருக்கு வந்தனம்

முதலில் பிள்ளையார் பற்றி ஒரு சுலோகமாவது சொல்லிவிட்டு, அப்புறம் குரு பற்றிப் பொதுவாக உள்ள - அதாவது எந்த குருவுக்கும் 'அப்ளை' ஆகிற - ஒரு சுலோகத்தை நாம் எந்த மகானைக் குருவாக நினைக்கிறோமோ அவரை நினைத்துச் சொல்லிவிட்டு, அதற்கப்புறமே அந்த ஸ்தோத்திரம், அல்லது பிரதேச மொழித் துதியைச் சொல்வது நல்லது.
சுவாமி மஹாசக்தர், மஹாபெரியவர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகையால் அவரிடம் நாம் சின்னவராக நிற்பதில் விசேஷமில்லை.

அப்படி நிற்பதால் நமக்கு விசேஷமாக எளிமை, அடக்கம் உண்டாகி விடுகிறது. நம்மை மாதிரியே மனுஷ ரூபத்தில் வந்தும் பெரியவராக, தெய்வத்தன்மை நிரம்பியவராக ஆன ஒருத்தரிடம் பணிந்து நின்றால்தான் விசேஷம். வாழ்க்கை அந்த சம்பத்தைப் போல இன்பமும், நிறைவும் தருகிற ஒன்று கிடையாது. ஆகையினால் அதை ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொள்ளவேண்டும். அதற்கு குரு வந்தனம் தான் வழி.

ஒரு ஸ்தோத்திரத்தை நமக்கு குரு என்று ஒருவர் கற்றுக் கொடுத்துத்தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாவிட்டாலுங்கூட, நமக்கு இஷ்டமான ஒரு மகானை குருரூபமாக நினைத்து முதலில் இப்படி வழிபட்டால் ரொம்பவும் நல்லது. எந்த குருவுக்கும் பொருந்துவதாக இப்படி அநேக சுலோகங்கள், பாடல்கள் இருக்கின்றன. ரொம்பவும் பிரசித்தமாயிருப்பது, குருவையே சகல தேவதா ஸ்வரூபமாகக் காட்டிக் கொடுக்கிற சுலோகம் ஆகும்.

குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு,
குருர் தேவோ மஹேச்வர
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை  குரவே நம
தமிழில் திருமூலம் திருமந்திரத்தில் உள்ளது.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே

- என்று ரொம்பவும் அழகாக, மனம் உருகிச் சொல்கிற மாதிரிப் பாட்டு இருக்கிறது. இப்படி ஒன்றை பக்தியுடன் சொல்லிவிட்டு, ஸ்தோத்திர பாராயணமோ, துதி ஒதுதலோ நாமே ஆரம்பிக்கலாம்.

நமது மத சம்பிரதாயத்தில் குருவுக்குக் கொடுத்திருக்கிற முக்கியத்துவத்தைப் பார்க்கிறபோதும், அதோடு ஜனங்களின் தற்காலப் போக்கு ஒரு பெரியவர், பெருந்தலை என்றால் மரியாதை தராமல் இஷ்டப்படியே போவதாக இருக்கிறதே என்பதைப் பார்க்கிற போதும், ஜனங்களுக்கு எங்கேயெல்லாம் முடியுமோ, அங்கே ‘குரு வேண்டும், வேண்டும்' என்று நுழைக்கவேண்டும் போலிருக்கிறது.

சில உபாயங்கள்

காலத்தை உத்தேசித்துச் சில விஷயங்கள் சொல்கிறேன். அப்படித்தான் இப்போது குரு இருந்தே தீரணும் என்றில்லாமல், சில உபாயங்கள் இருப்பதாகச் சொன்னது. ஒன்று வேண்டுமானால் பண்ணலாம். 'ஆபத் - தர்மம்' என்று சாஸ்திரத்திலேயே ஒன்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஆபத்துக் காலத்தில் விதிகளைக் கொஞ்சம் இளக்கிப் பண்ணுவதுதான் ஆபத் - தர்மம்.

லோகத்தைக் கலி புருஷன் அப்படியே 'மெடீரியலிஸம்' என்கிற பேராபத்தில் தள்ளியிருக்கிற காலமாக இதைச் சொல்லலாம். நான் விட்டுக் கொடுத்த மாதிரி சொல்வதை ஆபத் - தர்மமாக எடுத்துக் கொள்ளலாம்...

இந்தக் கலிகாலத்துக்கென்றே ஏற்பட்ட மருந்து - தித்திப்பு மருந்து - நாம பாராயணமும், பஜனையும். இவற்றைத் தாங்களாகவே ஆரம்பித்துப் பண்ணலாம். ப்ரணவமும, ‘நம'வும் சேர்க்காமல், ‘சிவ, ராம, நாராயண கோவிந்த' முதலான, எந்த தெய்வத்தின் நாமத்தையும் ஒருத்தர் தானாகவே ஜபிக்கலாம். இங்கேயுங்கூட முதலில் குட்டியாக ஒரு தியானம் நல்லது . அந்த நாமாவைக் சொல்லி ஸ்வாமியைக்கண்டுகொண்ட ஒருத்தரை குருவாக தியானித்தால் அதுவே ஒரு பக்கம் விநயம், இன்னொரு பக்கம் டானிக்!

(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x