Published : 28 Nov 2019 11:17 AM
Last Updated : 28 Nov 2019 11:17 AM

மஹா அமிர்தம்: வெள்ளரிப்பழ முக்தி

மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்றில்லாமல், ஞானியை விட்டே மாயை விலகுகிறது என்ற இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லியிருக்கிறது. ‘பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபடணும்’ என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் பிரார்த்திக்கும் மகா மிருத்யுஞ்சய மந்திரம் அது. உர்வாருகம் என்றால் வெள்ளரிப் பழம்.

வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன். அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்றப் பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற்போல் விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை; கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது.

அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான்; உயரத்தில் ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழமுடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! கொடி பாட்டுக்கு படர்ந்துகொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற காரியத்தைக் கூடப் பண்ணுவதில்லை!

இதே போலத்தான் – ஞானி சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது, அது ஒரு விருக்ஷம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும், தான்பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே காரியம் பண்ணினாலும் உள்ளே அசலமாக, சலனமேயில்லாமல்தான் இருப்பான். சம்சாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரு லோகத்திற்குப் போவது என்ற காரியம் அவனுக்கில்லை.

த்வைதிகள் தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோக்ஷத்திற்கு போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும் போதே ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோக்ஷம் என்பது. ‘விடுபட்ட’ என்றாலும் இவன் ஒன்றும் விடுபடும் கார்யம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் ஸாக்ஷாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான்.

அப்போது பந்தம், ஸம்ஸார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும். த்வைதம் நகர்ந்து ஓடிப்போய்விடும். வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பதுபோல இவனும் லோகத்தில் முந்தி எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன் முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனத்தின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முந்தி இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும்! இதுதான் வெள்ளரிப்பழ முக்தி!

ஜீவன் முக்தி விதேக முக்தி

லோகத்தில் ஒருத்தன் இருக்கிற மாதிரித் தோன்றும் போதே ஞானம் வந்து மாயை விலகி, தனி மனசின் வேலை அடங்கிப் போய் ஆத்மானுபவத்திலிருந்து கொண்டிருப்பதுதான் ஜீவன் முக்தி. லோக மாயை இவனிடமிருந்து அப்போது கத்தரித்துப் போய்விடுவதைத்தான் வெள்ளரிக்கொடி பழத்திலிருந்து கத்தரித்துக்கொண்டு ஓடுவதற்கு உவமித்தது. இப்படி லோக மாயை போனாலும் அந்த ஜீவன் முக்தனுக்கு சரீரம் இருக்கிறது. அவனுக்கு சரீர உணர்வு இல்லாவிட்டாலும் நாம் பார்ப்பதற்கு சரீரம் என்று ஒன்று தெரியத்தானே செய்கிறது?

பிற்பாடு ஒருநாள் – அவனுடைய ப்ராரப்தம் முழுசாகத் தீர்ந்து போகும் நாள் வரும்போது அவனுடைய சரீரம் மரணமடைகிறது. அதுதான் விதேக முக்தி. ஞானியான அப்புறமும் அவனுக்கு இருந்த ப்ராரப்த கர்மா இப்போது அடியோடு இல்லாமல் வெடித்துவிட்டது.

ஜோதியோடு ஜோதி

மந்திரத்தில் முக்தி தரும் திரயம்பகேச்வரனை சுகந்தமுள்ளவன் என்றும் புஷ்டியை விருத்தி செய்கிறவனென்றும் சொல்லியிருக்கிறது. வெள்ளரிப்பழம் ஜீரணித்துப் போகாமல் நல்ல புஷ்டியுடனும், துர்கந்தமெடுக்காமல் சுகந்தமாகவும் இருந்துகொண்டே பட்டென்று வெடித்து, இல்லாமல் போய்விடுவது போல மேலே சொன்ன ஞானிகளின் சரீரத்துக்கும் ஏற்படுவதாகச் சொல்லலாம்.

வெள்ளரி விஷயத்தில் அது வெடிப்பதால் சத்தம் எழும்பும். இந்த மகான்கள் விஷயத்தில் சத்தமாகச் சொல்லாமல், ஜோதியோடு ஜோதி கலந்தது என்று சொல்கிறார்கள். அதாவது ஒலிக்குப் பதில் ஒளியைச் சொல்கிறார்கள். ஞானத்தில் போய்தான் என்றில்லாமல் உசந்த பக்தியிலேயே போய் நந்தனார், மீராபாய் போன்றவர்களும் இப்படித்தான் உடம்பைச் சவமாக விட்டுப் போகாமலே, அப்படியே சரீரம் மறைந்து அகண்டாகாரமானதாக இருக்கிறது. இதையும் வெள்ளரிப்பழ முக்தியாக உவமிக்கலாம்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x