Published : 26 Nov 2019 10:05 AM
Last Updated : 26 Nov 2019 10:05 AM

சேதி தெரியுமா? - தேசிய குடிமக்கள் பதிவேடு

நவ. 20: அசாமில் நடைமுறைபடுத்தப் பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) முறை, நாடு முழுவதும் நடை முறைபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட்டப் பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளின் ஆண்டறிக்கை

நவ. 20: மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ‘இந்தியாவின் சாலை விபத்துகள் 2018’ அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, 2018-ல் சாலை விபத்துகளால் 1,51,417 இறப்புகள் நடைபெற்றிருக்கின்றன.

சாலைகளின் நிலை, மனிதத் தவறுகள், வாகனம் நிறுத்தப்பட்ட விதம் ஆகியவை இவற்றுக்குக் காரணங்கள். அதிகமான சாலை விபத்துகள் தமிழ்நாட்டிலும், சாலை விபத்து மரணங்கள் உத்தர பிரதேசத்திலும் பதிவாகியுள்ளன.

இணையதளங்கள் முடக்கம்

நவ.20: 2019-ல் இணையதளங் களின் முடக்கம் 442 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. 2016-ல் 633 இணையதளங்களை முடக்கிய அரசு, 2019-ல் 3,433 இணையதளங்களை முடக்கியுள் ளது. நாட்டின் இறையாண்மை, தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இணையதளங்கள் முடக்கப்பட்டுள் ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறமைக்கான தரவரிசைப் பட்டியல்

நவ. 20: 2019 உலகளாவிய திறமைக்கான தரவரிசைப் பட்டியலை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.எம்.டி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டைவிட ஆறு இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 59-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 63 உலக நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

சி.பி.ஐ.: 1000 இடங்கள் நிரப்பப் படவில்லை

நவ. 21: மத்திய புலனாய்வுப் பிரிவில் (சி.பி.ஐ.) 1,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ.-யின் அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக் கையான 5,532 பணியிடங்களில் 1,029 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தமிழகத் தலைமைத் தகவல் ஆணையர்

நவ. 21: தமிழ்நாட்டின் புதியத் தலைமைத் தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் பதவியேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இலங்கையின் புதிய பிரதமர்

நவ. 21: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச பதவியேற்றார். அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததால், ரணில் விக்ரமசிங்க தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு, பொதுத் தேர்தல்வரை மஹிந்த ராஜபக்ச பிரதமராக நீடிப்பார்.

160 சி.பி.ஐ. வழக்குகள்

நவ. 21: கடந்த நான்கு ஆண்டு களில், மூத்த அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக 160 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய் துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. இணைச் செயலர்களுக்கு எதிராக 54 வழக்குகள், பொதுத்துறை வங்கிகள், நிறு வனங்களில் பணியாற்றும் குழு நிலை சார்ந்த அதிகாரிகளுக்கு எதிராக 50 வழக்குகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக 56 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

முதல்வரானார் தேவந்திர ஃபட்னவிஸ்

நவ. 23: மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க வின் தேவந்திர ஃபட்னவிஸ் முதல்வராகப் பதவியேற்றுகொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவி யேற்றுகொண்டார். மகாராஷ்டிரத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x