Published : 06 Nov 2019 12:28 PM
Last Updated : 06 Nov 2019 12:28 PM

டிங்குவிடம் கேளுங்கள்: லென்ஸ் வட்டமாக இருக்கும்போது படம் செவ்வகமாகத் தெரிவது ஏன்?

கேமராக்களில் வட்டமாக இருக்கும் லென்ஸில் படம் மட்டும் செவ்வகமாகத் தெரிவது ஏன், டிங்கு?

- ஐஸ்வர்யா, 5-ம் வகுப்பு, எஸ்.என்.எம். இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, வடசேரி, நாகர்கோவில்.

சுவாரசியமான கேள்வி. கேமராவில் உள்ள லென்ஸ் காட்சியை நேரடியாக உருவாக்குவதில்லை. அது கேமராவில் உள்ள வேறு ஒரு பகுதியுடன் இணைந்து காட்சியை உருவாக்குகிறது. பழைய கேமராவில் ஃபிலிமோடு சேர்ந்தும் புதிய டிஜிட்டல் கேமராவில் சென்சாருடன் சேர்ந்தும் காட்சியை உருவாக்குகின்றன.

நீங்கள் ஒரு பொருளையோ இடத்தையோ படம் எடுக்கும்போது, அந்தப் பொருளின் ஒளி கேமராவின் லென்ஸுக்குள் நுழைகிறது. லென்ஸ் இந்த ஒளியை வளைத்து, குவித்து ஃபிலிம் அல்லது சென்சாருக்கு அனுப்பி வைக்கிறது. அங்கே வட்டத்தைத் தாண்டி ஒளி பரவுகிறது. படம் செவ்வகமாகவோ சதுரமாகவோ பதிவாகிறது.

கேமராவின் லென்ஸ் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருந்தாலும்கூட படம் செவ்வகமாகத்தான் வரும். லென்ஸ் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பது இதில் ஒரு பொருட்டே இல்லை. ஆரம்பக் காலத்தில் வட்ட வடிவ லென்ஸுகள் பயன்படுத்தப்பட்டதால், அந்த வடிவத்திலேயே லென்ஸ்கள் உருவாகிவிட்டன, ஐஸ்வர்யா. நம் கண்களும் இப்படித்தான் காட்சியைப் பிரதிபலிக்கின்றன.

செந்தட்டிச் செடி நம் உடலில் பட்டவுடன் அரிப்பு ஏற்படுவது ஏன், டிங்கு?

–சுகிர் கிறிஸ்டோபர், 7-ம் வகுப்பு, ஆதர்ஷ் வித்யா கேந்திரா, வெட்டூரணிமடம், நாகர்கோவில்.

தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கே செந்தட்டிச் செடி (Stinging Nettle) இப்படி வேதிப்பொருளை வெளியேற்றுகிறது. செந்தட்டிச் செடியின் இலைகளில் மிக மென்மையான முடிகள் காணப்படுகின்றன. தனக்கு ஆபத்து ஏற்படும்போது இந்த முடிகள் மூலமாக வேதிப்பொருளை வெளியேற்றுகிறது செந்தட்டிச் செடி. இதனால் ஆபத்திலிருந்து தப்பித்துவிடுகிறது. ரோஜாவுக்கு முள்போல் செந்தட்டிக்கு இந்த வேதிப்பொருள் இயற்கை கொடுத்த தகவமைப்பு, சுகிர் கிறிஸ்டோபர்.

ககன்யான் திட்டம் என்றால் என்ன, டிங்கு?

- ச.ப. கவிஷ், 6-ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சென்னை.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் தான் இந்த ‘ககன்யான் விண்கலம்’. 3 பேர் செல்லும் வகையில் இது வடிவமைக்கப் பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 மூன்று மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறது. 7 நாட்கள் சுற்றுப் பாதையில் இருந்துவிட்டு, பூமிக்குத் திரும்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, கவிஷ்.

இடி உண்டாகும் போது கடகடவென்று உருளும் சத்தம் கேட்பது ஏன், டிங்கு?

- ச. சச்சுதன், 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

வான் மண்டலத்தில் ஏற்படும் காற்றோட்டத்தால் மேகங்கள் ஒன்றுடன் மற்றொன்று நெருங்கவோ விலகவோ செய்கின்றன. அந்த நேரத்தில் மின்னல் ஏற்படும் மேகக் கூட்டத்திலிருந்து இடி ஓசை எழுந்து, அருகில் உள்ள மேகக் கூட்டத்தின் மீது மோதும். அப்போது இடி ஓசை எதிரொலிக்கிறது. இந்த எதிரொலி மீண்டும் இடி உருவான மேகக் கூட்டத்துக்குச் செல்லும். அப்போது மீண்டும் எதிரொலிக்கும். இவ்வாறு தொடர் எதிரொலிப்பு நிகழ்வதால் இடி ஓசை நமக்கு கடகடவென்று கேட்கிறது, சச்சுதன்.

பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11, 12 என இரு தேதிகளைக் குறிப்பிடுகிறார்களே எது சரி, டிங்கு?

- தீபக் ராஜா, 7-ம் வகுப்பு, சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை.

பாரதியார் செப்டம்பர் 12 அன்று அதிகாலை 1.30 மணிக்கு மறைந்தார். அதனால் செப்டம்பர் 12 என்பதே சரியானது. சிலர் செப்டம்பர் 11 இரவு மறைந்ததாக நினைத்து, அந்தத் தேதியைக் குறிப்பிட்டார்கள். இப்போது இரு தேதிகளும் அவரது நினைவு நாட்களாக நினைவுகூரப்படுகின்றன,
தீபக் ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x