Published : 02 Nov 2019 10:59 AM
Last Updated : 02 Nov 2019 10:59 AM

சங்கு என்ற பாலாடை

டாக்டர் ஸ்ரீராம்

பால், தண்ணீர், மூலிகைச் சாறு போன்றவற்றைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு விதவிதமான வண்ணமய ஞெகிழிக் குப்பிகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. பன்னெடுங்காலமாக மக்களிடையே புழக்கத்தி லிருந்த பாலாடை என்ற சங்கு, இன்று அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் நிலையில் உள்ளது.
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான பிள்ளைத்தமிழில் குறிப்பிடப்படும் பாலாடை என்ற சங்கு, பால் சங்கால் செய்யப்பட்டது (இதன் விலங்கியல் பெயர் Turbinella Pyrum var acuta). தற்போது வெள்ளி, தங்கம், அலுமினியம் என்ற உலோகங்களிலும் இது செய்யப்படுகிறது. இருப்பினும், பால் சங்கால் செய்யப்பட்ட பாலாடை என்ற சங்கையே மிகச் சிறந்ததாகச் சித்த மருத்துவம் கருதுகிறது.

பாலாடை என்ற சங்கின் பயன்

வளரும் நாடுகளில், 2.5 கிலோ எடைக்குக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளை (1,500-2,500 கிராம்) Low Birth Weight infants என்பார்கள். இந்தக் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையை Growth retardation என்பார்கள். இதனால், இந்தக் குழந்தைகளுக்குத் தொற்று நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு, இறப்பு ஏற்படக்கூடச் சாத்தியமுண்டு.

# எடை குறைந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் உள்ள சிரமம்
# தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாமை (immature sucking)
# உறிஞ்சிக் குடித்த பாலை விழுங்க முடியாமை
# தாய்ப்பாலைக் குடித்தாலும் அதிக நேரம் குடித்தல் ( 20-30 நிமிடங்களுக்கு மேலாகத் தாய்ப்பாலைக் குடித்தல்)
# தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காததால் தினமும் 10 கிராமுக்குக் கீழ் எடை கூடுதல்;
# சுவாச எண்ணிக்கை குறைதல்
பால் புட்டியிலும் இந்தக் குழந்தைகளுக்கு இதே சிரமம் இருப்பதால், விழுங்க முடியாத சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கல்கள் நீங்கி எடை குறைந்த குழந்தைகளைக் காப்பாற்ற உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உபகரணம்தான் ‘பாலாடை என்ற சங்கு.’ தமிழினத்தின் அரிய அறிவியல் கண்டுபிடிப்பு.

பாலாடை மூலம் பால் வழங்கும் விதம்

# தாய்ப்பாலைத் தனியாக எடுத்து எடை குறைந்த குழந்தைகளுக்குப் பாலாடை வழியாகப் புகட்ட வேண்டும்.
# பாலாடை மூலம் பால் வழங்கும் முன் குழந்தை விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
# பாலாடையின் நீண்ட காம்பு பகுதி குழந்தையின் வாயினுள் இருக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சிந்துவது தடுக்கப்படும்.
# குழந்தைகளுக்குப் போதும் என்ற நிலையில் அதன் உதடுகளை மூடிக்கொள்ளும். அதன்பின் வழங்கக் கூடாது.
# தாய்ப்பாலை வழங்கிய பின் பாலாடையைச் சுத்தமான வெந்நீரில் கழுவிப் பாதுகாப்பான இடத்தில் வைத்தல் நல்லது.

அறிவியல் கொடை

தமிழர்களின் பாலாடை, எடை குறைந்த குழந்தைகள் உயிர் வாழ வைக்கும் பெரும்பணியைச் செய்வதால்தான் என்னவோ, உலக சுகாதார நிறுவனம், குழந்தை மருத்துவ நூல்கள், மருத்துவர்கள் ஆகியோர் இதற்கு ‘Paladai’ என்று தமிழ் சொல்லாக்கத்தையே பிற மொழிகளிலும் பயன்படுத்து கின்றனர். உலகுக்குத் தமிழகம் அளித்த அறிவியல் கொடையே இந்தப் பாலாடை. அதை மீண்டும் பயன்படுத்துவோம், குழந்தைகளின் நலனை மேம்படுத்துவோம்.

பாலாடை மூலம் தாய்ப்பாலை வழங்க வேண்டிய குழந்தைகளின் எடை விவரம்

* 1,250-1,500 கிராம் வரையுள்ள எடைகுறைந்த குழந்தைகள்
* 1,501-2,000 கிராம் வரையுள்ள எடைகுறைந்த குழந்தைகள்.

டாக்டர் ஜெ. ஸ்ரீராம்
கட்டுரையாளர்,
அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: sriramsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x