Published : 26 Oct 2019 10:16 AM
Last Updated : 26 Oct 2019 10:16 AM

பார்வைக்கு முதலிடம்

மு. வீராசாமி

குழந்தை பிறந்தவுடன் ஒரு முறை கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. ஏதாவது பிறவிக் கோளாறுகள் (Congenital defects) இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இது உதவும். தொடக்கத்திலேயே சரிசெய்ய வாய்ப் பாகவும் அது இருக்கும்.

பிள்ளைகள் வீட்டிலும் சரி, வீட்டுக்கு வெளியிலும் சரி விளையாடும்போது கண்ணில் காயம் ஏற்படாமல் கவனமாக விளையாடும்படி அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் குறிப்பாகக் கருவிழிப் பார்வை இழப்பால் ஏற்படும் நிரந்தரப் பார்வை இழப்பைத் தடுக்கலாம்.

மாறுகண் அதிர்ஷ்டமா?

குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்முன் ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம். மாறுகண் பிரச்சினையோ பார்வைப் பிரச்சினையோ இருக்கிறதா என்பதை அதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை மாறுகண் இருந்தால் கண் கண்ணாடி, கண் பயிற்சி அல்லது கண் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம். அனைத்தும் 8 வயதுக்குள் செய்ய வேண்டும். மாறுகண்ணை அதிர்ஷ்டம் என்று நினைத்து குழந்தைக்கு சிகிச்சை கிடைக்காமல் தடுத்துவிடக் கூடாது. அது பார்வை இழப்புக்கு வழிவகுத்துவிடும்

பிரேமில் கவனம் தேவை

பார்வைக் குறைவுக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஒருவேளை கண்ணாடி பவரில் மாற்றம் இருந்தால் புதிய கண்ணாடி பிரேமில் போட்டுக்கொள்வதே சிறந்தது.

குறிப்பாக, வளரும் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்குக் கண்ணாடி பிரேமை ஒவ்வொரு முறையும் கட்டாயம் மாற்ற வேண்டும். ஏனெனில், ஓராண்டுக்குமுன் போட்ட பழைய பிரேம், தற்போது பிள்ளை வளரும் நிலையில் முகம் சற்றுப் பெரிதாகி முகத்துக்கு அளவு பொருந்தாமல் நெற்றியின் இரு பக்கத்தையும் பிரேம் அழுத்தி பக்கவாட்டில் நீண்ட அழுத்தமான பள்ளம் ஏற்பட்டு வலி ஏற்படலாம். பிரேம் சிறிதான நிலையில் பார்வை யும் தெளிவில்லாமல் போகலாம்.

வெள்ளெழுத்துப் பிரச்சினை

நாற்பது வயதில் வெள்ளெழுத்துப் பிரச்சினை ஏற்படும். நாற்பதை நெருங்கும்போது தலையில் முடி எப்படி நரைக்கிறதோ அதைப் போன்றே வயதாவதால் உடலில் ஏற்படும் மாற்றம்தான் இதுவும். வெள்ளெழுத்துக்குக் கண் ஆய்வு செய்து தகுந்த கண்ணாடியைப் போட்டு நன்றாகப் படிக்கலாம். கண்ணாடியைப் போட்டால் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் அல்லது கண்ணாடியைப் போட்டுவிட்டால் ஆயுசுக்கும் கண்ணாடியைப் போட்டுத்தான் படிக்க முடியும் என்று நினைத்துப் பலர் கண்ணாடியைப் போடுவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.

கண்ணாடியைப் போடாவிட்டால் ஹோட்டலில் சாப்பிட்ட பில்லின் தொகை தெரியாமலோ அல்லது வங்கியில் படிவத்தைத் தவறுதலாகப் பூர்த்திசெய்வதன் மூலமோ நேரும் இழப்பு யாருக்கு ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு

35 வயதில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த உயர்வு போன்றவை இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தால் கண்டிப்பாக மருத்துவர் பரிந்துரைப்படி மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், சர்க்கரையால் கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை கடுமையாக – சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படலாம். (சர்க்கரை நோய் விழித்திரைப் பாதிப்பு) எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கண்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ரத்த அழுத்த உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும்.

கண்நீர் அழுத்தம்

40 வயதில் கண்ணில் கண்நீர் அழுத்தம் (Eye Pressure ) இயல்பாக இருக்கிறதா என்பதையும் கட்டாயம் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும். இந்த அழுத்தம் சத்தமில்லாமல், எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், உயர்ந்துபோய் பார்வையை நிரந்தரமாகப் பாதிக்கலாம்.

கண்நீர் அழுத்த உயர்வில் ஏற்பட்ட பார்வைப் பாதிப்பை மீண்டும் சரி செய்ய முடியாது. அழுத்தத்தைக் கண்சொட்டு மருந்து, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் பார்வையைப் பாதுகாக்கலாம். தொடர் சிகிச்சை அவசியம். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை தேவை-பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

சுய மருத்துவம் கூடவே கூடாது

கண்ணில் ஏற்படும் சிவப்புநிற மாறுதல் அனைத்துமே ‘மெட்ராஸ்-ஐ’ கிடையாது. கண்நீர் அழுத்த உயர்வு போன்ற, வேறு சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எனவே, நாமாக மருந்துக் கடையில் கண்ட கண்ட சொட்டு மருந்தை வாங்கிக் கண்ணில் ஊற்றக் கூடாது. அந்தச் சிவப்பு ‘மெட்ராஸ் ஐ’யால் ஏற்பட்டிருந்தாலும் கண்நீர் அழுத்த உயர்வால் ஏற்பட்டிருந்தாலும் நீங்கள் வாங்கிய மருந்து ஒருவேளை ஸ்டீராய்டு வகை சொட்டு மருந்தாக இருந்தால் – பார்வையை மிகக் கடுமையாகப் பாதித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

எனவே, கண்ணில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் சுய மருத்துவம் கூடவே கூடாது. மருத்துவரிடம் காண்பித்து முறையான மருத்துவம் செய்துகொள்வதே பார்வைக்குப் பாதுகாப்பு. வாழ்நாள் முழுவதற்கும் பார்வை அவசியம் அல்லவா?

கட்டுரையாளர்,
மதுரை அரசு
கண் மருத்துவ உதவியாளர் தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x