Published : 24 Oct 2019 12:55 PM
Last Updated : 24 Oct 2019 12:55 PM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மேஷ ராசி வாசகர்களே

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.

மேஷ ராசி வாசகர்களே

சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், பணப்போராட்டத்தையும் கொடுத்து வந்த குருபகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். இனி எதைத் தொட்டாலும் சுபமாக முடியும். அடிக்கடி குடும்பத்தில் நிலவி வந்த வீண் விவாதங்கள், சச்சரவுகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகளால் இனி வீடு களைகட்டும். வருங்காலத்தை மனத்தில் கொண்டு சேமிப்பீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.

பணவரவு சரளமாக வருவதால் வங்கியிலிருந்த நகையை மீட்பீர்கள். நெடுநாள் கனவான வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வருங்காலத்தை மனத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் குழப்பம், தடுமாற்றம் நீங்கும்.

அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பில் முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் 29.10.2019 முதல் 31.12.2019 வரை செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். செரிமானக் கோளாறு, சிறுநீர்த் தொற்று வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். சிலர் புது வீடு கட்டி குடிப் புகுவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள்.

பூராடம் நட்சத்திரத்தில் 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை குருபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். என்றாலும் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்விகச் சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். 28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் புதிய தெம்பு பிறக்கும். என்றாலும் அவ்வப்போது காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். யாருக்காகவும் எந்தவிதமான வாக்குறுதிகளும் தர வேண்டாம்.

07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம். பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மனைவிக்கு நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

பழுதாகியிருந்த கடையை அழகுபடுத்துவீர்கள். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையையும், தகுதியையும் மேலதிகாரி அங்கீகரிப்பார். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு இனி தேடி வரும். இந்த குரு மாற்றம் வறுமை, வாட்டம், விரக்தி இவற்றிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்டகாலக் கனவுகளை நனவாக்குவதாக அமையும்.

பரிகாரம்

அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அருகில் உடையவர் தீயனூரில் வீற்றிருக்கும் அமிர்தாம்பிகை உடனுறை ஸ்ரீஜமதக்னீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபடுங்கள். வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். நோய்கள் பூரணமாக குணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x