Published : 12 Oct 2019 10:14 AM
Last Updated : 12 Oct 2019 10:14 AM

மருத்துவம் தெளிவோம் 04: தொல்லை தரும் தோள் வலி!

டாக்டர் கு. கணேசன்

தோள் மூட்டில் வலி வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதிக உடலுழைப்பு காரணமாகவோ அதிக எடை தூக்குவதாலோ தோள் மூட்டுத் தசைகள் பிசகிக்கொள்வது ஒரு முக்கியக் காரணம். விபத்து, விளை யாட்டு, அடிபடுதல் போன்றவற்றால் மூட்டில் காயங்கள் ஏற்படுவதும் தசைக் கொத்து நைந்துபோவதும் அங்குள்ள சவ்வு கிழிந்துவிடுவதும் அடுத்த காரணங்கள்.

ஏதேனும் தொற்று உண்டாகி மூட்டில் அழற்சி தோன்றினாலும் தோள் வலி ஏற்படும். நீண்ட நேரம் ஒரே நிலையில் கழுத்தை வைத்திருந்தாலும் – உதாரணம்: கணினி வேலை செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள் – கழுத்து வலியோடு தோளிலும் வலி ஏற்படும். கரடுமுரடான சாலைகளில் நெடுந்தூரம் வாகனம் ஓட்டுபவர்களுக்குத் தோள் மூட்டின் இணைப்புத் தசைநாண்கள் தொய்வடைவதால் தோளில் வலி ஏற்படுவதுண்டு. மூட்டழற்சி நோய்கள் காரணமாகவும் மூட்டு நழுவுதல் பிரச்சினை இருந்தாலும் தோளில் கடுமையாக வலிக்கும்.

அடுத்து, தோள்பட்டை, புஜ எலும்பு முனைகள் ஆகியவை தேய்ந்து கரடுமுரடாகலாம். அவை பிற பகுதிகளுடன் உராய்ந்து வலியை ஏற்படுத்தலாம். பொதுவாக, இந்த இணைப்புப் பகுதியில் ‘பர்ஸா’ (Bursa) என்னும் ஒரு குஷன் போன்ற குழிப்பை இருக்கிறது. அது இந்த உராய்வைத் தடுக்கிறது. ஆனால், அந்தக் குஷனிலேயே பாதிப்பு ஏற்பட்டால் வலி தாங்கமுடியாததாகிவிடும். தோள் மூட்டுத் தசைநாண்களில் கால்சியப் படிவங்கள் சேருவதாலும் இப்படி வலி ஏற்படுகிறது.

பித்தப்பைப் பிரச்சினைகள் இருந்தால் வலது தோளில் வலி தோன்றும். கழுத்து எலும்புகளில் பாதிப்பு உண்டாகும்போது அந்த வழியாகத் தோளுக்கு வந்துசேரும் நரம்புகள் அழுத்தப்படுமானால், தோளில் வலி வரும். மாரடைப்பின்போது இடது தோளில் வலி ஏற்படும். மூட்டு அசைவுக்குத் துணை செய்யும் நான்கு தசைநாண்களும் (Rotator cuff) பாதிப்படைந்தால், வலியால் தோளை அசைக்காமல் வைத்திருந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தாவிட்டால் தோள் மூட்டுத் தசைகள் இறுகிவிடும் (Frozen shoulder). அப்போது தோளைச் சிறிதுகூட அசைக்க முடியாத அளவுக்கு வலி கடுமையாகும்.

மாரடைப்பு வலியா?

தோளைப் பல்வேறு திசைகளில் அசைத்துப் பாருங்கள். அந்த வலி அதிகமானாலோ குறைந்தாலோ தோளை இறுக்கிப் பிடித்த உணர்வு தளர்ந்தாலோ அது தோள் மூட்டு கொடுத்த வலியாகவே இருக்கும். தோளின் அசைவுக்கும் வலிக்கும் தொடர்பில்லை; அசைவு இல்லாத நேரத்திலும் வலிக்கிறது; வலி தொடர்ந்து இருக்கிறது என்பது உறுதியானால், அடுத்த அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். இடது பக்கத் தோளில் மட்டும் வலி அதிகம்; இடது கைக்கும் விரல்களுக்கும் வலி பரவுகிறது; உடல் வியர்க்கிறது; படபடப்பாக இருக்கிறது என்றால், அது மாரடைப்பு வலியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

கழுத்துப் பிரச்சினையா?

கழுத்தில் தொடங்கும் வலி தோள் வழியாக கைக்கு இறங்கினால், மின்சாரம் பாய்வது போன்ற வலி தோன்றினால், விரல்களில் மரத்துப் போதல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் கழுத்தில் உள்ள பிரச்சினையால் தோளில் வலி வருகிறது எனத் தெரிந்துகொள்ளலாம்.

வீட்டிலேயே சிகிச்சையா?

பாதிப்பின் தொடக்க கட்டத்தில் வலி உள்ள பகுதியில் வெந்நீர் ஒத்தடம் ஒரு நிமிடம் ஐஸ் ஒத்தடம் ஒரு நிமிடம் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். இப்படிக் காலையிலும் இரவிலும் தலா 20 நிமிடங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து கொடுத்தால் தோள் வலி குறையும். தோளுக்கு ஓய்வு கொடுப்பதும் நல்லது. கையை மேலே தூக்கிச் செய்யும் வேலைகளையும், கைகளைப் பின்புறம் கொண்டு சென்று செய்யும் வேலைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். தோள் மூட்டைப் பின்னுக்குக் கொண்டு செல்லும் பயிற்சிகள், பெண்டுலம் போல் முன்னும் பின்னும் ஆட்டும் பயிற்சிகள், கைகளைப் பக்கவாட்டில் கொண்டுசெல்லும் பயிற்சிகள் போன்ற எளிய பயிற்சிகளை அடிக்கடி செய்யலாம்.

தோள் வலிக்கான பரிசோதனைகள்

எக்ஸ்ரேயில் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் தெரியும். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றில் மூட்டைச் சுற்றியுள்ள தசை நாண்கள், மெல்லிய சவ்வுகள் உள்ளிட்ட மற்ற பகுதிப் பிரச்சினைகளை யும் அறியலாம். தோள் வலிக்கு நரம்புப் பிரச்சினைதான் காரணமா என்பதை அறிய நரம்புக் கடத்தல் பரிசோதனை (Nerve conduction study) உதவும். இ.சி.ஜி./'ட்ரெட் மில்' பரிசோதனையும் தேவைப்படும்.

சிகிச்சை முறைகள்

தொடக்க கட்ட வலிக்கு வலி நிவாரணிகளும் களிம்பு களும் பரிந்துரை செய்யப்படும். தசை இறுக்கத்தைத் தளர்த்தும் மருந்துகளும், தூக்கம் கொடுக்கும் மருந்துகளும் தேவைக்கேற்ப தரப்படும். இயன்முறை சிகிச்சை (Physiotherapy) நல்ல நிவாரணம் தரும். வலி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது, ஸ்டீராய்டு ஊசிகளைத் தோள் மூட்டுக்குள் செலுத்துவதுண்டு.

இவற்றுக்கெல்லாம் வலி குறையவில்லை என்றால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தோளில் சில துளை இட்டு ஆர்த்ராஸ்கோப் கருவி கொண்டு கரடுமுரடாகிப்போன குருத்தெலும்பைச் சீர்படுத்துகிறார்கள்; நைந்து போன தசைக் கொத்தைச் சரிப்படுத்துகிறார் கள்; கிழிந்த சவ்வை இணைக்கி றார்கள்; கால்சியம் படிகங்களை அகற்றுகிறார்கள்; தோள் மூட்டைச் சுத்தப்படுத்துகி றார்கள். இவற்றால் தோள் வலி நிரந்தரமாகக் குணமாகிறது.

சிகிச்சை முறைகள்

தொடக்க கட்ட வலிக்கு வலி நிவாரணிகளும் களிம்பு களும் பரிந்துரை செய்யப்படும். தசை இறுக்கத்தைத் தளர்த்தும் மருந்துகளும், தூக்கம் கொடுக்கும் மருந்துகளும் தேவைக்கேற்ப தரப்படும். இயன்முறை சிகிச்சை (Physiotherapy) நல்ல நிவாரணம் தரும். வலி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது, ஸ்டீராய்டு ஊசிகளைத் தோள் மூட்டுக்குள் செலுத்துவதுண்டு.

இவற்றுக்கெல்லாம் வலி குறையவில்லை என்றால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தோளில் சில துளை இட்டு ஆர்த்ராஸ்கோப் கருவி கொண்டு கரடுமுரடாகிப்போன குருத்தெலும்பைச் சீர்படுத்துகிறார்கள்; நைந்து போன தசைக் கொத்தைச் சரிப்படுத்துகிறார் கள்; கிழிந்த சவ்வை இணைக்கி றார்கள்; கால்சியம் படிகங்களை அகற்றுகிறார்கள்; தோள் மூட்டைச் சுத்தப்படுத்துகி றார்கள். இவற்றால் தோள் வலி நிரந்தரமாகக் குணமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x