Published : 07 Oct 2019 12:08 PM
Last Updated : 07 Oct 2019 12:08 PM

சொந்த வீடு ஆர்வம் இல்லாத இளம் தலைமுறையினர்

சொந்த வீடு பலருக்கு கனவு. வங்கியில் கடன் வாங்கி சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் லட்சியமாகவே பலருக்கு இருந்தது. வாய்ப்பிருந்தும் வீடு வாங்கத் தவறிவிட்டோமே என வருத்தப்
படுவோரும் உண்டு.

ஆனால், இப்போதைய இளம் தலைமுறையினரின் மனோநிலையே வேறு மாதிரியாகத்தான் உள்ளது. குறிப்பாக இப்போது வேலைக்குச் செல்லும் இளம் தலைமுறையினர் எவருமே சொந்த வீடு வாங்கு வதில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டை வாங்கி அதற்காக மிகப் பெரிய தவணைத் தொகையை செலுத்தி, தங்களை வருத்திக் கொள்ள விரும்பவில்லை.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 2006-ம் ஆண்டுக்கு முன்புவரை ரியல் எஸ்டேட் சந்தையில் அப்படி ஒன்றும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படவில்லை. 2008-ம் ஆண்டில் சர்வதேச பெருமந்த பொருளாதார நிலை ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஏறுமுகத்தில்தான் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் சந்தை தொடர் இறங்குமுகத்தில்தான் உள்ளது.

கட்டப்பட்ட பல வீடுகளை வாங்க ஆளின்றி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஒரு வீட்டை வாங்கி பிறகு இரண்டு வீடு வாங்குவது என்ற மனோ நிலை இருந்த தலைமுறை மாறி இளம் தலைமுறையினர் ஒரு வீட்டை வாங்கி தங்களை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாக உள்ளது. வருமான வரிச் சலுகை கிடைக்கிறது என்பதற்காக ஒரு வீட்டிற்கு மாதாந்திர தவணை செலுத்தும் சிரமத்தை விட வேறு பல முதலீடுகளில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறார் இன்டர்நேஷனல் மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோவாய் நௌலஹி.

நிதி மேலாண்மையில் தற்போதைய இளம் தலைமுறையினர் மிகச் சிறப்பாகவே திட்டமிடுகின்றனர். இதுவும் அவர்களது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற இலக்கு ஏற்படாமல் போனதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் வீடு வாங்கினால் வேறு நகரங்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும்போது செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை உருவாவதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு செல்லும்போது கட்டும் மாதாந்திர தவணை அளவுக்குக் கூட வாடகை கிடைக்காததும் இதற்குக் காரணமாக உள்ளது.

அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கடந்த 20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சந்தையின் போக்கு எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்நிறுவனம் நடத்திய ஆன்லைன் சர்வே-யில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

1990-களில் அதிக அளவில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள் 45 வயது முதல் 55 வயதுப் பிரிவினர்கள். 2000-வது
ஆண்டுகளில் இந்த வயதுப் பிரிவு 35 முதல் 45 வயதுப் பிரிவினராகக் குறைந்தது. 2009 முதல் 2010 வரையான காலத்தில் வங்கிக் கடன் எளிதாகக் கிடைத்ததால் வீடு வாங்குவோரின் வயதுப் பிரிவு 25 முதல் 35 ஆகக் குறைந்தது.

1990-களில் வீடு வாங்க ஆர்வம் காட்டிய 45 வயது முதல் 55 வயதுப் பிரிவினர் தாங்கள் ஓய்வுக் காலத்தை முன்னிட்டு வீடு வாங்குவதற்குத் திட்டமிட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதி மூலம் வீடு வாங்கினர். வெகு சிலரே வங்கிகளை நாடினர். ஆனால் இந்த காலகட்டத்தில் வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டின. 2000-வது ஆண்டுகளின் பிற்பாதியில் வீட்டுக்கடன் கிடைப்பது மிகவும் எளிதானதாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அதாவது 35 வயது முதல் 45 வயது பிரிவினர்களுக்கு கடன் கிடைப்பது எளிதாக இருந்தது. அத்துடன் வீட்டுக் கடன் சுலப தவணைக்கு வரி விலக்கு கிடைத்ததும் ஒரு காரணமாக அமைந்தது. 2019-ம் ஆண்டில் வீடு வாங்கும் பிரிவினர் இன்னமும் 35 வயது முதல் 45 வயது பிரிவினராகத்தான் உள்ளனர்.

ஆனால் இதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் 25 முதல் 35 வயதுப் பிரிவினர் வீடு வாங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். மிகச் சிறிய வயதில் வீட்டுக் கடன்சுமையில் சிக்க வேண்டாம் என்ற மனோபாவம் இவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டதாக அனராக் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் பிரசாந்த் தாகுர் தெரிவிக்கிறார். வீடு வாங்குவதை விட தங்களது சேமிப்புகளை பிற இனங்களில் முதலீடு செய்யலாம் என்ற யோசனையும் இப்பிரிவினரிடையே உருவாகியுள்ளதே பிரதான காரணமாகும்.

ஒரு காலத்தில் பரஸ்பர நிதித் திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை என்ற மனோநிலை முந்தைய தலைமுறையினர் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போதேய இளம் தலைமுறையினர் பரஸ்பர நிதித் திட்டங்கள் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்கின்றனர். மேலும் பரஸ்பர நிதி சேமிப்பின் வளர்ச்சியானது வீடு வாங்குவதை விட சிறந்தது என்ற மனோபாவம் உருவாகியுள்ளதே இதற்குக் காரணமாகும். பரஸ்பர முதலீடுகள் ரூ. 25.47 டிரில்லியன் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதில் புதிய முதலீடுகள் ரூ. 1.02 டிரில்லியன் ஆக உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடுகளைத் தவிர்த்து பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. வீடு வாங்கும் போக்கு நகருக்கு நகர் வித்தியாசப்படுகிறது. மும்பையில் வீடு வாங்குவோரில் 37 சதவீதம் பேர் 35 வயது முதல் 45 வயது பிரிவினராக உள்ளனர். 45 முதல் 55 வயது பிரிவினரின் விகிதம் 28 சதவீதமாக உள்ளது. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய நகரங்களில் இது சற்று வித்தியாசப்படுகிறது.

ஹைதராபாத்தில் வீடு வாங்குவோர் விகிதத்தில் 39 சதவீதம் 25 வயது முதல் 35 வயதுப் பிரிவினராக உள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிக அளவில் (36%) வீடு வாங்க ஆர்வமாக உள்ளவர்கள் 35 வயது முதல் 45 வயது பிரிவினர்தான். அதாவது முந்தைய தலைமுறையினர்தான் வீடு வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இளம் தலைமுறையினர் வீடு வாங்குவதில் ஆர்வமாக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x