Published : 21 Sep 2019 12:00 PM
Last Updated : 21 Sep 2019 12:00 PM

சிறிய வீட்டின் சிறப்புகள்

ஜி.எஸ்.எஸ்.

வீடு கட்டும்போது அது சிறியதாக இருக்கலாமா, பெரிதாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்பும். சிறிய அளவில் வீட்டைக் கட்டிக்கொண்டு பிறகு கூட அதை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றை வாங்கும்போது தொடக்கத்திலேயே இந்தத் தீர்மானத்தை மேலும் தெளிவாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதா அல்லது மூன்று அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதா என்பதை நீங்கள் முன்னதாகவே தீர்மானித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதிக அறைகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதில் என்னென்ன நன்மைகள் என்பதும், வீடு பெரியதாக இருந்தால் அதிலுள்ள சாதகங்கள் என்னென்ன என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். எனினும், இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு முன்னால் கீழே அளிக்கப்பட்டுள்ள கோணங்களையும் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

சிறிய வீட்டில் பல நன்மைகளும் உண்டு. முக்கியமாக அதற்கான விலை. ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று ஃப்ளாட்டுக்கு நாம் அளிக்க வேண்டியிருக்கும். அதிக பரப்பளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு நாம் நிச்சயம் அதிகத் தொகை கொடுக்கவேண்டியிருக்கும். இது நம் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதும் முக்கியம். ஆசைப்பட்டு அதிகப் பரப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்கிவிட்டு மாதத் தவணை கட்டுவதற்கு முழி பிதுங்கியபடி வாழ்க்கையைச் சோகமாகக் கழிக்கும் சிலரை எனக்குத் தெரியும்.

விற்பனைத் தொகையோடு இன்னொரு செலவையும் நாம் யோசிக்க வேண்டும். பத்திரப் பதிவுக்கான தொகை அதிகமாகும் என்பது ஒருபுறமிருக்க, பெரிய ஃப்ளாட் வாங்கினால் மாதாந்திர சுமையும் அதிகமாகும். அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கத்துக்கு மாதா மாதம் பராமரிப்புத் தொகை என்ற ஒன்றை அளிக்க வேண்டியிருக்கும். இது உங்கள் வீட்டின் அளவைப் பொறுத்துதான் (சதுர அடிக்கு இவ்வளவு என்கிற விகிதத்தில்) வசூலிக்கப்படும்.

இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறையில் தூங்கினால் மின்விசிறி, ஏ.சி. ஆகியவை அதிக அளவில் இயக்கப்பட்டு மின்கட்டணம் மிகவும் அதிகமாகும். வீட்டில் இடம் அதிகமாக இருக்க இருக்க நாம் நிறையப் பொருள்களை (தேவையில்லாதவை உட்பட) வாங்கி அடுக்குவோம். அதிக இடம் இல்லை என்றால் எது தேவையோ அதை மட்டும் வாங்குவோம். இந்த விதத்தில் சிறிய வீடுகள் நம்மை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றன.
சிறிய வீடுகளை சுத்தம் செய்வது எளிது. இல்லையென்றால் ஒரு முறை பெருக்கித் துடைப்பதற்கே பெரும் களைப்பு உண்டாகும். பணிப் பெண்களை அமர்த்தும்போது பெரிய வீடு என்றால் அவர்கள் அதிக ஊதியம் கேட்கத்தான் செய்வார்கள்.

யாராவது விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் வீட்டை ஒழுங்குபடுத்துவது எளிதான விஷயமாக இருக்கும். இல்லை என்றால் ‘வீட்டை அவர்களுக்குச் சுற்றிக் காட்டவேண்டுமே’ என்பதற்காக வீடு முழுமையும் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள மன நெருக்கத்தை சிறிய வீடுகள் அதிகமாக்கும். வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஓர் அறைக்குள் புகுந்துகொண்டு கதவைச் சாத்திக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. உணவைக்கூடத் தங்கள் அறைக்குள் எடுத்துச் சென்று சாப்பிடுபவர்கள் உண்டு. சேர்ந்து சாப்பிடுவது என்ற அருமையான பழக்கம் குறைந்து வருகிறது.

இதைத் தவிர்க்க சிறிய வீடுகள் உதவும். சிறிய வீடு என்றால் (வேறு வழியில்லாமல்கூட) சக குடும்பத்தினரிடம் அதிகம் பேசுவோம். ஒருவரின் பிரச்சினை தானாகவே மற்றொருவருக்குத் தெரிய வரும். இதனால் பல மன இறுக்கங்கள் குறைய வாய்ப்பு உண்டு. குழந்தைகள் இருக்கும் வீடு சிறியதாக இருந்தால் குழந்தைகள் தொடர்ந்து நம் கண்காணிப்பில் இருப்பார்கள். இந்த விதத்திலும் பாதுகாப்புதான்.

அவர்கள் ஏதாவது விபரீதச் செயலில் (மின் இணைப்பைத் தொடுவது போன்றவை) ஈடுபட்டால் அதைச் சட்டென அறிந்து தடுக்க முடியும். ஆக, குறைந்த அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடா, அதிக அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடா என்று தீர்மானிக்கும்போது மேலே குறிப்பிட்டவற்றையும் மனத்தில் கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x