Published : 17 Sep 2019 12:04 PM
Last Updated : 17 Sep 2019 12:04 PM

பெரியார் பிறந்த நாள்: கேள்வியின் நாயகன்!

மூன்றிலிருந்து நான்காண்டுகள்வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். பிற்காலத்தில் தமிழகத்தின் கல்விப் பரப்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்திச் சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்.

சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதன் பொருட்டு இந்தியா வின் பல இடங்களுக்குப் பயணித்தவர் பெரியார். 1929-ல் மலேசியாவுக்கும், 1931-ல் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுவந்தார். இந்தப் பயணங்களின்போது உலக நாடுகளின் கல்வி நிலையைக் கூர்மையாகக் கவனித்தார். கல்வியில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு செல்ல வேண்டிய தொலைவு அதிகமிருப்பதைக் கண்டறிந்தார். செல்லும் இடமெல்லாம் அதைப் பற்றி உரைகளை நிகழ்த்தினார். ‘குடி அரசு’, ‘விடுதலை’ இதழ்களில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குக் கல்வியை முன்னிட்டுப் பல தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார்.

இவ்வாறு பெரியார் முன்வைத்த கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு, ‘கல்விச் சிந்தனைகள் பெரியார்’ புத்தகம். எழுத்தாளர் அ.மார்க்ஸ் தொகுத்து, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம் இது.

கற்க ஆசை இல்லையா?

2019-ம் ஆண்டிலிருந்து 1931 காலகட்ட இந்தியாவுக்கு ‘இன்றைய கல்வி நிலை’ என்ற அத்தியாயம் நம்மை அழைத்துச் செல்கிறது. 87 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு மகாஜனப் பள்ளியில் இதே நாளில் பெரியார் ஆற்றிய உரை அது. அன்று இந்தியாவின் மக்கள்தொகை 35 கோடி. அவர்களில் பாதிப் பேர் பெண்கள் என்ற நிலையில் 100-க்கு 99.5 பெண்கள் எழுத்தறிவற்றவர்கள். 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய அடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டவர்கள். சில சமூகப் பிரிவினர் மட்டுமே கல்வி பெற முடிந்தது. அப்படிப் படித்தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை நீங்கவில்லை.

இத்தகைய காலகட்டத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வைப் பெண் களுக்கும் சாதிரீதியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும் ஏற்படுத்த நுட்பமான பல கேள்விகளை அன்றைய உரையில் எழுப்பினார் பெரியார். “இந்தியாவில் 100-க்கு 90 பேர் தற்குறியாக இருப்பது ஏன்?, அரசாங்கம் நமக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவில்லையா?, அரசாங்கத்திடம் பணமில்லையா?, மக்களுக்குக் கல்வி கற்க வேண்டும் என்கிற ஆசை இல்லையா? என்பவைகளைக் கவனித்தோமானால் ஏன் மக்கள் கல்வி கற்கவில்லை என்பது விளங்கும்” என்றார்.

கேள்வியைப் புரிந்துகொள்வது என்பதே பாதி விடையைக் கண்டு பிடித்ததற்குச் சமம் என்று தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் குறிப்பிட்டார். அவ்வாறே பெரியார் அன்று எழுப்பிய கேள்விகள் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் விடை தேட உந்தித்தள்ளின.

நோக்கம் என்ன?

இந்தக் கேள்விகளோடு நின்று விடாமல் கல்வியின் நோக்கம் என்ன என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட கேள்வியையும் தன்னுடைய உரையில் எழுப்பினார் பெரியார்.

சுயசார்போடும் சுய அறிவோடும் சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருவரைத் தகுதிப்படுத்துவதே கல்வி. நல்வாழ்க்கை வாழ்வதற்குத் தயார்படுத்துவதே கல்வி. இப்படித் தான் கல்வி கற்பவர்களும் கற்பிப்பவர்களும் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், “கல்வியின் பயன் இந்த லட்சியத்தோடு பொருந்திப் போகிறதா?” என்று கேட்டார். இதிகாசங்கள், புராணங்களைக் கற்பித்து மதத்தைக் கல்வியில் கலப்பதால் பகுத்தறிவுக்குப் பாதகம் ஏற்படும். அங்கு அச்சமும், மூடநம்பிக்கையுமே கையோங்கும். சுயசிந்தனை தழைக்கவே தழைக்காது என்று தெளிவுபடுத்தினார்.

பெண்ணுக்கு இருபாலர் கல்விக்கூடம்

1972-ல் மன்னார்குடி வடச்சேரியில் பெண் கல்வி குறித்துப் பெரியார் ஆற்றிய உரை இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பெண் கல்வி, வாழ்க்கைத் தரம், திருமண உரிமை உள்ளிட்டவற்றில் 30 ஆண்டுகளாகப் பெரியார் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சட்ட வடிவம் கிடைக்கப்பெற்ற காலகட்டத்தில் ஆற்றிய உரை இது. உதாரணத்துக்கு, பலதார மணம் செய்வது சட்டப்படி குற்றம் போன்ற சட்டங்கள் உருவெடுக்கக் காரணம் பெரியாரின் இடைவிடாத போராட்டமே.

இப்படிப் பெண்ணின் அடிப்படை உரிமைகளைப் போராடிப் பெற்றுத் தந்த பிறகு, அடுத்தகட்டமாக இரு பாலர் கல்வியின் முக்கியத் துவத்தை அழுத்தந்திருத்தமாக, ‘பெண்களுக்குத் தனிக் கல்லூரி வேண்டாம்’ என்ற பரப்புரை மேற் கொண்டார் பெரியார். “ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில், கல்லூரிகளில்தான் படிக்க வேண்டும். அப்பத்தான் சமத்துவம் வளரும்…எல்லாவிதமான வேலைகளுக்கும் தொழில்களுக்கும் பெண்கள் பக்குவம் உடையவராக இருபாலர் கல்வி கைகொடுக்கும்” என்றார். 21-ம் நூற்றாண்டில் முன்னிறுத்தப்படும் வளர்ச்சி என்ற கருதுகோளை அன்றே விளம்பினார் பெரியார். “சமூகத்தின் சரிபாதியான பெண்களும் முன்னேறினால்தான் நாடும், சமுதாயமும் முன்னேற்றம் காணும்” என்றார்.

உதவித்தொகைக்குக் குரல்

சாதிய ஏற்றத்தாழ்வு முறை, பெண் அடிமைத் தனம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்காக இந்தியர்களை கடுமையாக விமர்சித்தவர் பெரியார். அதேநேரத்தில் கல்வியில் முன்னேற்றம் கண்ட பகுதிகளைத் தேடி அடை யாளம் கண்டு அவற் றைக் குறித்துப் பாராட்டி எழுதினார், பேசினார்.

அன்றைய காஷ்மீர் மகாராஜா தனது சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி, கல்வி உதவித்தொகை, வேலை வழங்கி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதைப் பாராட்டி 1930-ல் ‘குடி அரசு’-வில் ‘தீண்டப் படாதாரும் கல்வியும்’ என்ற கட்டுரை யில் எழுதினார் பெரியார். நாட்டின் பிற பகுதிகளில் இதைப் பின்பற்ற வேண் டும், அதுவே ‘மனித உரிமை’ என்று 1930-களிலேயே குரல் கொடுத்தார்.

கல்வி உதவித்தொகைத் திட்டத் தைத் தமிழ் அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினார். அப்படிச் செய்தால் மட்டுமே ஏழ்மை யில் வாடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சந்ததியினர் பாடசாலைகளை நோக்கி முன்னேற முடியும் என்று விளக்கினார். விளிம்புநிலை குழந்தைகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாகக் கல்வி கற்பிக்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வலியுறுத்தினார். அதற்காக ‘தீண்டாமை ஒழிப்பு கமிட்டி’யைப் பெரும்பான்மையாக அவ்வகுப்பினர் களைக்கொண்டே ஏற்படுத்த அறிவுறுத்தினார்.

இதேபோன்று, 1965-ல் ‘விடுதலை’ இதழில் ‘கல்வியில் ஒதுக்கீடு’ என்ற தலையங்கத்தில் சாதிவாரியாகக் கல்வியில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை டாக்டர் அம்பேத்கரை மேற்கோள்காட்டி விவரித்தார். நெடுங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக் கீட்டின் அடிப்படையிலான கல்வி வழங்கும் சமத்துவப் பாதையை அகலப்படுத்த வலியுறுத்தினார்.

மும்மொழி பார்வை

இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை எப்படி அணுக வேண்டும் என்று பல கட்டுரைகளில் விவாதித்திருக்கிறார். இவற்றை வாசிக்கையில் இந்தி மொழியை அவர் எதிர்க்கவில்லை, அதை வைத்து நடத்தப்படும் கலாச்சாரத் திணிப்பைத்தான் எதிர்க்கிறார் என்பது தெளிவாகிறது. அதேபோல தமிழ் மொழியை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது “வளர்ப்பது என்றால் என்ன?” என்ற கேள்வியை 1948-ல் ‘விடுதலை’ இதழில் வெளியான ‘ஏன் நமக்கு ஆங்கிலம் வேண்டும்’ என்ற கட்டுரையில் எழுப்பினார்.

அதற்கு, “தமிழை வளர்ப்ப தென்றால் புராணக்கதைகளை, பிரச்சாரம் செய்வதல்ல. தமிழ் மொழியை விஞ்ஞானத்துறையில் புகுத்தித் தமிழ் மொழி வழியாகவே புதிய உலகைக் காணும் வழி வகுத்தல் வேண்டும். இன்று உலகில் அவ்விதத் தன்மையுடைய மொழி நமக்கு ஆங்கிலம் ஒன்றைத் தவிர வேறில்லை என்றே கூறுவேன்” என்று எழுதினார். கூடுமானவரை மதம் நீக்கப்பட்ட மொழி ஆங்கிலம் என்றார் பெரியார். ஆகையால் ஆங்கில ஏகாதிபத்திய முறையை எதிர்த்த அதேவேளையில் ஆங்கில மொழியை வரவேற்றார்.

அறிவியல்பூர்வமான நோக்கில் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். சிலருக்கு மட்டுமே என்று இருந்த பாடசாலைகளை எல்லாருக்குமானதாக்க இடைவிடாது போராடினார். மொழி, சட்டம், பண்பாடு ஆகிய தளங்களில் மட்டுமின்றிக் கல்வியிலும் சாதி ஒழிப்பையும் மதச்சார்பின்மையையும் வலியுறுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக அன்று அவர் எழுப்பிய அநேகக் கேள்விகள் ஒரு நூற்றாண்டு கடந்தும் உயிர்ப்புடன் நின்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

- ம.சுசித்ரா, தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in


கல்விச் சிந்தனைகள் பெரியார்
தொகுப்பு: அ. மார்க்ஸ்
பாரதி புத்தகாலயம், தொலைபேசி: 044-24332424
156 பக்கங்கள் | விலை ரூ.130/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x