Published : 12 Sep 2019 11:02 AM
Last Updated : 12 Sep 2019 11:02 AM

தெய்வத்தின் குரல்: சக்தி காரியம் சிவ சம்பந்தம்

அத்வைத மார்க்கத்தில் போக முடியாதவர்களுக்காக நம்முடைய ஆசார்யாள் பக்தி மார்க்கத்தில், சக்தி மார்க்கத்தில் ‘சௌந்தர்ய லஹரி’ பண்ணும்போது காஷ்மீர சைவத்தில் வரும் ஸ்பந்தம் அதில் மட்டுமில்லாமல் மற்ற சைவ சம்பிரதாயங்களிலும் வரும் பசு-பதி-பாசம் முதலியவற்றையும் சொல்லியிருக்கிறார். கடைசி சுலோகத்துக்கு முதல் சுலோகத்தில், ‘அம்பாளைப் பூஜிப்பவன் பசு-பாசப் பற்று அற்றுப்போய்ப் பரமானந்த ரசத்தை சாசுவதமாக அனுபவிப்பான்’: ‘க்ஷபித பசு பாச வ்யதிகர:’ என்கிறார்.

அம்பாள் ஸ்துதியானதால் பாராயணம் பண்ணும் அவளுடைய பக்தர்களுக்கு அவளிடமே, வேறு தெய்வத்தை நாடாத பக்தியை உண்டாக்கும் பொருட்டு அவளுடைய மகிமையை உச்சமாகக் காட்ட வேண்டும்; அழகான கவிதையாக, காவ்ய மரபுகளை மதித்துப் பண்ணிய கவிதையாக இதைப் பண்ண வேண்டும்; ஸ்ரீவித்யா தந்திர ரீதியிலும் அதற்குப் போஷாக்குக் கொடுக்க வேண்டும்; இதிலே அத்வைதத்தை அழுத்திச் சொல்லாவிட்டாலும் ஸ்ரீவித்யைக்கும் அது உடன்பாடுதான் என்பதால் ஆங்காங்கே கோடிக் காட்ட வேண்டும்; கவி மரபிலும், தத்வ ரூபத்திலும் உள்ள விஷயங்கள் லோகத்திற்கான ஸ்த்ரீ தர்மத்திற்கு மாறான எண்ணங்களைப் பக்குவம் போதாதவர்களிடம் ஏற்படுத்த விடாமல் அங்கங்கே அந்த தர்மங்களையும் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற சங்கல்பத்தில் உண்டானதே ‘சௌந்தர்ய லஹரி’.
பிற்காலத்தில் சைவ சித்தாந்தம், காஷ்மீர சைவம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்றெல்லாம் நன்றாக இறுதி ரூபமான கொள்கைகளின் சில அம்சங்கள்கூட அலை பரப்பிக் கொண்டு வந்தபோது அவற்றையும் சுலோகமாகப் பாடிக் கொடுத்து விட்டார்.

ஆதிசங்கரரின் ஸ்தாபிதம்

அத்வைதமும் ஆசார்யாளுக்கு முன்பே இருந்ததுதான். ஆனால் அவர்தான் அதை சாங்கோ பாங்கமான ஒரு சித்தாந்தமாக எடுத்துச் சொல்லி ஸ்தாபித்தது. இதே மாதிரிதான் இப்போது நாம் மற்ற சம்பிரதாயங்களின் பிராதன ஆசார்யர்களாக நினைப்பவர்களும் தங்களுக்கு முந்தியே இருந்த மூலக் கொள்கைகளைத்தான் நன்றாக ரூபம் பண்ணி ஒவ்வொரு மதமாகத் தந்திருக்கிறார்கள். சர்வக்ஞரான நம்முடைய ஆசார்யாள் அந்த மூலக் கொள்கைகள் எல்லாம் தெரிந்தவரானதால், இங்கே அவருடைய சிந்தனைப் போக்கில் அந்தத் தத்துவங்களும் அங்கங்கே கொஞ்சம் வந்திருக்கின்றன.

சத்ய சத்யம்

கரையையும் உடைத்துக்கொண்டு பிரவாகம் பரவுவதுபோல, இந்த மனோபாவத்தின் உச்சத்தைத் தான் முதல் சுலோகத்தில் பிரம்மத்தைப் பற்றமுடிந்ததற்காக சந்தோஷப்பட்டுக் கொண்டு அப்படி பற்றுவதற்கு உதவியவளை ஓஹோ என்று கொண்டாடிக்கொண்டு அவர் ஸ்தோத்திரிப்பதில் பார்க்கிறோம்! அத்வைதப்படி அசையாமல், ‘ஸ்தாணு’ என்று பெயர் சொல்லும் படிப் பட்ட கட்டையாக சிவன் உட்கார்ந்திருக்கிற நிலைதான் சத்ய சத்யம். நிர்குண பிரம்மம் என்று சொல்லும் நிலை, ஏகமாக அத்வைதமாக இருக்கிற நிலை. அதை மாயா சக்தி த்வைத பிரபஞ்சமாகக் காட்டுகிறது. பிரம்மத்துக்குள்ளேயே அந்த மாயை இருந்து அதனுடன் உறவுகொள்ளச் செய்வதாக ஆசார்யாள் சொன்ன அத்வைத சாஸ்திரத்தில் கிடையாது!

அத்வைத பிரம்மம் அசையவே முடியாது. அது பாட்டுக்கு இருக்கிறபடி இருக்கும். அதன் ஆதாரத்தில் மட்டுமே மாயை ஜகத்தைக் கல்பித்துக் காட்டுகிறது என்றுதான் அத்வைத சாஸ்திரம் சொல்லும். அங்கே மாயையைக் கரித்துத்தான் கொட்டுவது! ஏனென்றால், நம்முடைய ஆத்மா என்பதும் அந்த நிர்குண பிரம்மமேதான். அதை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் மறைத்து – திரோதானம் பண்ணி – உடம்பையும் மனசையுமே நாமென்று நினைத்துக்கொண்டு லோகத்தில் அவஸ்தைப்படுவதற்குக் காரணம் மாயைதானே? அதனால்தான் அதைக் கரித்துக் கொட்டுவது.

மாயா காரியம்

சந்தியா கால மூட்டம் ஒரு கயிறைப் பாம்பாகக் காட்டுகிற தென்றால் கயிறு வாஸ்தவத்தில் ஏதாவது மாறுதலாக ஆச்சா என்ன? பாம்பு அதிலிருந்தே உண்டான தோற்றம் தானென்றாலும் அந்தப் பாம்போடு கயிற்றுக்கு ஏதாவது சம்பந்தமுண்டா என்ன?
ஆனால், இங்கே ஆசார்யாள் பின்பற்றிக் காட்டும் சாக்தத்தில் மாயா சக்தி என்று பிரம்ம சம்பந்தமில்லாமல் ஏதோ ஒன்று இருப்பதாக இல்லை. அத்வைதத்திலே பிரம்ம சக்தி என்பதை முக்கியம் கொடுத்துச் சொல்வதே கிடையாது. இங்கே அதுதான் முக்கியம்: பராசக்தி, அம்பாள் என்பது! அவளுடைய ஒரு ‘ஆஸ்பெக்ட்’ தான் மாயா காரியம். அவளே மாயைக்கு நேரெதிரான ஞானமாகவும் இருக்கிற சித்சக்தி.

இன்னும் க்ரியா சக்தி, இச்சா சக்தி எல்லாமும் தான். நிர்குண பிரம்மத்தின் ஸ்தானத்திலிருக்கும் சிவனோடு ஒன்றாக, பிரிக்கவே முடியாமல் சம்பந்தப்பட்டிருப்பவள் அவள். சிவ-சக்தி ஐக்கியம் இங்கே ரொம்ப முக்கியம். ஐக்கியம் என்றால் ‘ஏதோ’ சேர்ந்திருப்ப தில்லை; ஒன்றே என்கிற அளவுக்கு ஒட்டிப் போயிருப்பது. ‘ஏகம்’ என்றால் ஒன்று அல்லவா? ‘ஏக’மாக இருக்கும் தன்மை ‘ஐக்கியம்’. லலிதா ஸஹஸ்ரநாமத்தை முடிக்கிற இடத்தில் அவளை ‘சிவா’ என்று கூப்பிட்டுவிட்டு, அடுத்தாற்போல ‘சிவ சக்தி ஐக்ய ரூபிணி’ என்று சொல்லியிருக்கிறது. இந்த சிவன் கிட்டத்தட்டத்தான் அத்வைத சாஸ்திரப் பிரம்மம் ஆகையால் இவனையும் சேர்த்துக்கொண்டு, சம்பந்தப்படுத்தி, அசைத்துத்தான் அவள் தம்பதியாக பிரபஞ்ச சிருஷ்டி, நிர்வாஹாதிகளைப் பண்ணுவது.

ஒரு சக்தி இருக்கிறதென்றால் அதற்கு ஆச்ரயமான ஒரு அடிப்படையும் இருக்கத்தானே வேண்டும்? வாசனை என்று ஒரு சக்தி இருக்கிறது, வர்ணம் என்று ஒரு சக்தி இருக்கிறது என்றால் புஷ்பம் மாதிரி ஒரு ஆச்ரயத்தைச் சார்ந்துதானே அது இருக்க முடிகிறது? அந்த ஆச்ரயமில்லாமல் அது உண்டா? அப்படி எல்லா சக்திக்கும் மூலமான பராசக்திக்கு அதனிடமிருந்து பிரிக்க முடியாத ஆச்ரயமாக இருப்பதே சிவமான பிரம்மம்.

அந்த சிவத்தின் ‘எனர்ஜி’ தான் இந்த சக்தி என்கிறபோது எப்படிப் பிரிப்பது? ‘பாலிலிருந்து வெள்ளையைப் பிரி; பாலிலிருந்து அதன் ருசியை பிரி’ என்றால் முடியுமா? ஆகையால் சக்தி விலாசத்தால் என்ன பண்ணினாலும் அதிலே சிவனுந்தான் சேர்ந்து இருக்கிறான். கஷாயத்தின் உறைப்பைக் குறைப்பதற்காக பாலுடைய மதுரமான ருசியைச் சேர்க்கே வேண்டும் என்றால் பாலிலிருந்து அந்த ருசியை மட்டும் பிரித்தெடுத்துச் சேர்க்க முடியுமா? சக்தி காரியம் அத்தனையிலும் சிவ சம்பந்தமில்லாமல் செய்ய முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x