Published : 08 Sep 2019 10:54 AM
Last Updated : 08 Sep 2019 10:54 AM

அம்ரிதா ப்ரீதம் நூற்றாண்டு: காதலின் உள்ளொளியைப் படைத்த கவி!

“உன் காதலின் ஒரு துளி கலந்திருந்தது
எனவே, நான் வாழ்க்கையின் முழு கசப்பையும் குடித்தேன்”

இந்திய இலக்கியத்தில் காதலைக் கொண்டாடிய, எழுதித் தீர்த்த ஒரு பெண் கவி உண்டென்றால் அது அம்ரிதா ப்ரீதமாக மட்டுமே இருக்க முடியும். அவருடைய கவிதைகளில் காதலின் உள்ளொளி இருந்தது. அதனால்தான் அவருடைய கவிதைகள் நேற்று படைத்ததைப் போல எப்போதும் உள்ளன.

நவீன எழுத்தில் பஞ்சாபி மொழிக்கு மகுடத்தைச் சூடிச் சென்ற அம்ரிதா, பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபின் குஜ்ரன்வாலா என்ற ஊரில் பிறந்தவர். தந்தை கர்தார் சிங் கவிஞர்; சீக்கிய மதப் பிரச்சாரகராகவும் இருந்தவர். தாய் ராஜ் பீபி பள்ளி ஆசிரியராக இருந்தவர். 11 வயதில் தாயைப் பறிகொடுத்த அம்ரிதா, தந்தையுடன் லாகூருக்குக் குடிபெயர்ந்தார்.

தாயைக் காப்பாற்றாத கடவுளை இனி வணங்கப் போவதில்லை என ஆன்மிகவாதியான தன் தந்தையுடன் வாக்குவாதம் செய்ததை ‘ரெவின்யூ ஸ்டாம்ப்’ என்ற தன்னுடைய சுயசரிதையில் அவர் பதிவுசெய்துள்ளார். பதின்பருவத்தில் தாய் உடன் இருந்திருந்தால் தன்னுடைய நிலை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என வருந்துகிற அவர், வீட்டுக்குள் முடக்கப்பட்ட தன்னை வேறு உலகத்தை சிருஷ்டிக்க வைத்தது எழுத்து மட்டுமே என்கிறார்.

முதல் புதுக்கவிதை

தனிமையை எழுதிக் கடக்க முனைந்த அவர், 13 வயதில் முதல் கவிதைத் தொகுப்பான ‘அம்ரித் லெக்ரானை’ வெளியிட்டார். இது ஆன்மிகப் பாடல் நடையில் எழுதப்பட்டிருந்தது. அடுத்து 16 வயதில் வெளியான ‘தண்டியான் கிரண்’ என்ற கவிதை நூல் மூலம் பஞ்சாபின் முதல் புதுக்கவிதையைப் படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். சிறுவயதில் நிச்சயிக்கப்பட்ட ப்ரீதம் சிங்கை மணந்தார். அதன்பின் ‘அம்ரிதா ப்ரீதம்’ என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். கட்டாயத்தின் பேரில் சேர்த்துக்கொண்டாரா காதலுடன் சேர்த்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் பெயர் இந்திய இலக்கிய உலகில் இறவாப் புகழ் பெற்றுவிட்டது!

அம்ரிதா ப்ரீதமின் ஆரம்ப காலக் கவிதைகள் காதலால் நிரம்பியவை. அதன்பின் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்துடன் ஏற்பட்ட அறிமுகத்தால் சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதத் தொடங்கினார். 1943-ம் ஆண்டின் வங்க பஞ்சத்தையொட்டி இவர் எழுதிய ‘மக்களின் கோபம்’ என்ற கவிதைத் தொகுப்பும் பிரபலமானது. பாகிஸ்தானின் இடதுசாரி இதழ்களில் எழுதிய அம்ரிதா, லாகூரில் இருந்த வானொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். லாகூரின் இலக்கிய வட்டத்தோடு தொடர்பில் இருந்தார். கவிதைகள் எழுதுவது, முற்போக்கான செயல்பாடுகளில் ஒரு பெண் ஈடுபட்டிருப்பது இப்போதும்கூட விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. அம்ரிதாவின் காலத்திலும் அது இருந்திருக்கிறது.

பிரிவினையின் துயரம்

இலக்கிய வட்டாரத்தில் தன்னைச் சுற்றிப் புனையப்பட்ட ‘காதல்’கள் குறித்து அம்ரிதா தன்னுடைய சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். லாகூரில் மட்டுமல்ல, டெல்லி வந்த பிறகு இங்கேயும்கூட அத்தகைய ‘கிசுகிசுக்கள்’ தன்னைச் சுற்றிக் கிளம்பியதையும் அவர் கூறுகிறார்.

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைப் பலிவாங்கிய இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் நேரடி சாட்சியமாக இருந்தவர்களில் அம்ரிதாவும் ஒருவர். 1948-ல் 28 வயதில் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து டேராடூனுக்கு ரயிலில் வந்தபோது புகழ்பெற்ற பஞ்சாபி சூஃபி கவிஞரான வாரீஸ் ஷாவுக்கு எழுதுவதாகப் பிரிவினையின் துயரத்தை கவிதையாகப் பகிர்ந்துகொண்டார். பிரிவினை குறித்து எழுதப்பட்ட முதல் கவிதை இது. இதை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங், “அவர் உருவாக்கிய அந்தச் சில வரிகள் அவரை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இறவாப் புகழ்பெற்றவராக்கிவிட்டன” என எழுதினார்.

1984-ல் நிகழ்த்தப்பட்ட சீக்கியப் படுகொலை வழக்கின் சமீபத்திய தீர்ப்பொன்றில் அம்ரிதாவின் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தார் நீதிபதி.

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன; எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களைப் பாம்புகளாக மாற்றிவிட்டது
அவற்றின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டது”

வெறுப்பின் அரசியல் அரங்கேறும் இன்றைய இந்தியச் சூழலுக்குப் பொருந்தும்படியாகவும் உள்ளது இந்தக் கவிதை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, சீக்கியக் கலவரம் அல்லது வெறுப்பரசியலால் தூண்டப்படும் கும்பல் கொலைகளுக்கும்கூட அம்ரிதாவின் கவிதை பொருந்திப்போகிறது. வன்முறை என்னும் நச்சின் பாதிப்பை உள்ளுணர்ந்து கவிதையாகப் படைத்துவிட்டார் அவர். அது காலம் கடந்து நிற்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையொட்டி எழுதப்பட்ட ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு) என்ற நாவலும் பிரபலமானது. பின்னாளில் இது இந்தியில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. டெல்லிக்கு வந்த பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். 25 ஆண்டு காலத் திருமண வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். “எங்கள் மணவாழ்க்கையை முடிவுக்குக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருந்தது. இருவரும் பேசி இயல்பாகவே பிரிந்தோம்” என்று சொல்லியிருக்கிறார். அவரது திருமண வாழ்க்கையில் காதல் இருந்ததில்லை. அந்தக் காதலை அம்ரிதா தேடிக்கொண்டே இருந்தார்.

காதல் என்பது காதலே

சாஹிர் லூதியானி என்ற பிரபலக் கவிஞருடன் அவருக்கு ஆழமான காதல் இருந்தது. ‘சாஹிர் என்னுடைய சாத்தார் நான் அவருடைய சிமோன்’ என எழுதினார் அம்ரிதா.

‘உன் மரத்தின் கிளையை நான் கண்டபோது
என் உடைந்த இதயத்தின் பறவை அங்கே நிரந்தமாகத் தங்கிவிட்டது’
என சாஹிர் உடனான காதல் குறித்து கவிதை எழுதினார்.

ஆனால், அது ஒரு ‘கோரப்படாத காதலாக’வே எஞ்சிவிட்டது. சாஹிருக்கு அம்ரிதாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிவில்லை. ‘நான் முழுமனதாக உன்னைக் காதலிக்கிறேன். நீங்கள் அந்த அளவுக்கு என்னைக் காதலிக்கிறீர்களா?’ என வினவினார். அந்தக் காதல் முறிந்தது.

‘இது ஆத்மாவால் உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு
காதல், காதல் என்ற பெயரிலேயே இருக்கட்டும்
அதற்கொரு பெயர் கொடுத்து மாசாக்கிவிட வேண்டாம்’

அவர் துயரப்படவில்லை. மாறாக, சாஹிருடனான காதலைக் கொண்டாடினார்.

அதன்பின், ஓவியரும் கவிஞருமான இந்திரஜித் இம்ரோசுடன் காதல் கொண்டு, தன்னுடைய இறுதிக் காலம்வரை அவருடனேயே வாழ்ந்தார். டெல்லி வந்த தொடக்க காலத்திலிருந்தே அம்ரிதாவின் நண்பராக இருந்தவர் இம்ரோஸ். இவருக்காக இறுதியாக எழுதப்பட்ட ‘மீண்டும் உன்னைச் சந்திப்பேன்’ என்ற காதல் கவிதையும் புகழ்பெற்றது.

பெண்களின் அக உலகம்

காதல் நிரம்பிய கவிதை உலகத்தைப் படைத்த அவர், தன்னுடைய சிறுகதைகளில் பெண்களின் அக உலகைப் படைத்தார். ‘காட்டுப் பூ’ அப்படியான ஒரு சிறுகதை. பிற்போக்குத்தனங்களுடன் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு நகரத்தில் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துவைக்கப்படும் ஒரு பெண் காதல் வயப்படுவதே கதையின் மையக்கரு. ஒரு ஆண் எழுதியிருந்தால் அது ஆபாசமான உறவு மீறல் கதையாகியிருக்கும். அம்ரிதா அதைப் பூப்போலப் படைத்திருக்கிறார்.

தன்னுடைய எழுத்தைப் பெண் எழுத்து என வகைப்படுத்துவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. சுயசரிதையில் அப்படித்தான் குறிப்பிடுகிறார். நேர்காணல் ஒன்றில், “ஒரு ஆண், பெண்ணின் ஆற்றலை நிராகரிக்கிறார் எனில், அவர் தன்னுடைய உள்ளுணர்வை நிராகரிக்கிறார் எனப் பொருள். ஆணின் வெளிப்புறம் ஆண் தன்மையுடையது; உள்புறம் பெண் தன்மையுடையது. இரண்டும் சேர்ந்ததுதான் மனித இனத்தின் அடிப்படை” என அதை விளக்குகிறார்.

2005-ல் 86 வயதில் முதுமை காரணமாக காலமானார் அம்ரிதா. அவரது எழுத்தோ இந்தக் கவிதையைப் போல உயிர்ப்புடன் இருக்கிறது.

‘நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்
எப்படி எங்கே என்று
எனக்குத் தெரியாது
ஒருவேளை உன் கற்பனையின்
ஒரு பகுதியாக இருப்பேன்
உன் சித்திரத்திரையில்
மர்மமான கோடாக என்னைப் பரப்பிக்கொண்டு
உன்னை உற்று நோக்கிக்கொண்டிருப்பேன்’

- மு.வி.நந்தினி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x