Published : 05 Sep 2019 11:21 AM
Last Updated : 05 Sep 2019 11:21 AM

இறைத்தூதர் சரிதம் 11: இறைவனிடம் மட்டுமே அடிபணிவோம்

சனியாஸ்னைன் கான்

இஸ்லாமியர்களுக்கு அரசவையில் நடந்த விஷயம் தெரியவந்தது. அவர்கள் என்ன செய்யலாம் என்று கூடி ஆலோசித்தனர். இறைத்தூதர் முஹம்மது தங்களுக்குள் விதைத்த கருத்துகளை அரசரை நேரில் சந்தித்துப் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்தனர்.

அவர்கள் அரசர் நெகஸின் அரசவைக்கு வந்தனர்; அரசருக்கு வணக்கம் தெரிவித்தனர்; ஆனால், அரசரை வழக்கமாக அடிபணிந்து வணங்கும் முறையைப் பின்பற்றவில்லை. ஏன் அப்படி வணங்கவில்லை என்று கேட்டதற்கு, “நாங்கள் இறைவனை மட்டுமே அடிபணிந்து வணங்குவோம். எங்களுடைய இறைத்தூதர் இதை எங்களுக்குக் கற்பித்திருக்கிறார்” என்றார் ஜாஃபர் இபின் அபி தாலிப்.

அலி இபின் அபி தாலிப்பின் மூத்த சகோதரர் ஜாஃபர். அவர்கள் இருவரும் இறைத்தூதர் முஹம்மதின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். ஜாஃபர் சிறந்த பேச்சாளர். அதனால், அரசவையில் இஸ்லாமியர்களின் சார்பாக அவர் பேசினார்.
எத்தியோப்பிய அரசர் நெகஸ் அவர்களுடைய மதத்தைப் பற்றிக் கேட்டதற்கு, ஜாஃபர், “ஓ அரசரே! நாங்கள் அறியாமையிலும் பாவத்திலும் உழன்றுகொண்டிருந்தோம். எல்லாவிதமான மோசமான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம். நாங்கள் எங்கள் உறவினர்களுக்கு எந்த மரியாதையும் அளிக்காமல் இருந்தோம். அண்டை வீட்டுக்காரர்களுக்கு உதவாமல் இருந்தோம்.

எங்களில் வலிமையானவர்கள், எளிமையானவர்களை ஏய்த்து வாழ்ந்துவந்தோம். அப்போது, எங்களிலிருந்து ஒருவரையே இறைத்தூதராக இறைவன் எங்களிடம் அனுப்பினார். அவர் எங்களுக்கு இறைவன் ஒருவர்தான் என்பதை வலியுறுத்தினார். எப்போதும் உண்மை, நேர்மையுடன் இருக்கவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அண்டை வீட்டார், உறவினர்களுக்கு உதவவும் எங்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார்” என்றார்.
“பொய்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், பொய்சாட்சியாக இருக்கக் கூடாது என்றும், ஆதரவற்றவர்களிடமிருந்து திருடக் கூடாது என்றும், இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்றும், அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கு இறைத்தூதர் கற்றுக்கொடுத்தார்” என்றார் ஜாஃபர்.

“அவருடைய வாக்கை நாங்கள் இறைவனின் செய்தியாக நம்பினோம். அவர் எவற்றையெல்லாம் செய்யச் சொன்னாரோ, அவற்றையெல்லாம் செய்தோம். அவர் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்றாரோ, அவற்றையெல்லாம் நாங்கள் செய்யவில்லை. எங்கள் இனத்தின் மக்களே, நாங்கள் இந்த மதத்தைப் பின்பற்றுவதைத் தடுக்க எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தார்கள். எங்களை அவர்கள் மீண்டும் பாவத்தின் பாதைக்குத் திரும்பும்படி வலியுறுத்தியது எங்களுக்குக் கடுமையான துக்கத்தை அளித்தது.

மக்காவில் நாங்கள் வாழ முடியாதபடி, எங்களை மோசமாக நடத்தினார்கள். அதனால்தான் நாங்கள் உங்கள் நாட்டுக்கு வரத் தீர்மானித்தோம். எங்களுக்கு நீதி கிடைக்கும், அமைதியான வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறோம்” என்றார் ஜாஃபர். “இறைவன் உங்கள் இறைத்தூதருக்குத் தெரிவித்த சில வெளிப்பாடுகளை என்னுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?” என்று ஜாஃபரிடம் கேட்டார் அரசர்.

“முடியும்!” என்ற ஜாஃபர், குர் ஆனின் ‘மரியம்’ என்ற பத்தொன்பதாம் அத்தியாயத்தைச் சொல்லத் தொடங்கினார்:
“அவள் (மரியன்னை) குழந்தையைச் சுட்டிக்காட்டினாள். ‘எப்படித் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் பேசுவது?’ என்று அவர்கள் கேட்டனர். (ஆனால்) அவர் சொன்னார், ‘நான் இறைவனின் சேவகன். அவர் இந்தப் புத்தகத்தை எனக்கு அளித்து என்னை இறைத்தூதராக்கினார்; நான் எங்கிருந்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக என்னை மாற்றினார். அவர் எனக்குத் தொழுகைகளை உபதேசித்து எனது வாழ்நாள் முழுவதற்கும் தானம் அளித்தார். என்னுடைய அன்னைக்கு எப்போதும் கடமையுணர்வுடன் இருக்கும்படி என்னை ஆக்கினார். என்னை ஆணவக்காரனாகவோ தீயவனாகவோ அவர் ஆக்கவில்லை.

நான் பிறந்த நாளிலிருந்தே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். நான் இறக்கும் நாளிலும் ஆசிர்வதிக்கப்படுவேன். மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் நாளிலும் நான் ஆசிர்வதிக்கப்படுவேன்”’
குர் ஆனின் வார்த்தைகளைக் கேட்ட அரசர் நெகஸ், கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.
“எங்கள் இயேசு கிறித்துவின் வார்த்தைகள் எங்கிருந்து வந்திருக்குமோ, அங்கிருந்துதான் இப்போது நீங்கள் ஒப்புவித்த வார்த்தைகளும் வந்திருக்க வேண்டும்” என்றார் அரசர்.
“நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள். இஸ்லாமியர்களை உங்களிடம் நான் ஒப்படைக்க மாட்டேன்” என்று குரைஷ் குழுவினரைப் பார்த்து சொன்னார் அரசர் நெகஸ்.

- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x