Published : 25 Aug 2019 10:33 AM
Last Updated : 25 Aug 2019 10:33 AM

அறிவோம் தெளிவோம்: குற்றமென்று குழந்தைக்குத் தெரியுமா?

சுடரொளி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது ஓரளவுக்குப் பதிவுசெய்யப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போதிய கவனம் பெறுவதில்லை. குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் பல நேரம் குற்றமாகக்கூடக் கருதப்படுவதில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 2012-ல் உருவாக்கப்பட்டது போக்சோ சட்டம் (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012).

இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, 2012 நவம்பர் 14 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வரும்முன், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டு, குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகள் கையாளப்பட்டுவந்தன.

சட்டத்தின் பொதுவான அம்சங்கள்

# 18 வயதுக்குக் குறைவான ஆண், பெண் என அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள்.
# பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
# 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவுசெய்யப் பட வேண்டும்.
# ஓராண்டுக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது.
# சாதாரணச் சிறைத் தண்டனையிலிருந்து கடுங்காவல், ஆயுள் தண்டனைவரை கொடுக்கப்படலாம் .
# சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள், பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்கு உரியவர்கள் குற்றம் இழைக்கும்போது, அதிகத் தண்டனை உண்டு.
# மாவட்ட அளவில் குழந்தைப் பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். காவல் துறை தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
# பாதிக்கப்பட்ட குழந்தை எங்கே இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில நேரம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்தவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

குழந்தையின் நலனே முதன்மை

# சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்பட வேண்டும். வழக்கின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அதாவது புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கைப் பதிவு, விசாரணை, வாக்குமூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். இதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் சொல்கிறது.

# உதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவனின் சாட்சியம் அவர்களது வீட்டிலோ அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவுசெய்யப்பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரிதான் பதிவுசெய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.

# இரவு நேரத்தில் குழந்தைகளைக் காவல் நிலையத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படிச் சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவுசெய்ய வேண்டும்.

# மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்துகொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

# மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப்பட வேண்டும்.

# பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேரும்போது மருத்துவர்கள், காவல் துறை அல்லது நீதித் துறையின் உத்தரவைக் கோர வேண்டிய அவசியம் இல்லை.

# வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

# விசாரணையோ, வழக்கோ, வாக்குமூலமோ எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட சிறுமியை/சிறுவனை நடந்ததைத் திரும்பத் திரும்பச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.

குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையைச் சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

குறிப்பிடத்தகுந்த பிரிவுகள்

குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல; குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் முயன்றவர்களும் குற்றவாளிளே. பாலியல் வன்முறைக்கு ஆளாக்க ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று காரணம் கூறலாம்.

வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இச்சட்டம் தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியைக் குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயல்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

மற்றொரு முக்கியப் பிரிவு, பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளிதான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும் அடையாளத்தையும் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள்.

இழப்பீடு/நிவாரணம்

# சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

# இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும் விடுவிக்கப் பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய்விட்டாலும்கூட, இழப்பீடு வழங்கலாம்.

# உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத்தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.

# மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

# எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகிவிட்டால், ஊனமடைந்துவிட்டால் அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

# மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

# நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட்களுக்குள் இது அளிக்கப்பட வேண்டும்.

# பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் பெற்றோருக்கும் இச்சட்ட விதிகள் கூறப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதேபோல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

# தேசிய/மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.

# ‘போக்சோ’ எனப்படும் குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளிகளுக்கு இதுவரை அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில், போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாகத் தூக்குத் தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

# இச்சட்டத்தின் விவரங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் அடிக்கடி எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x