Published : 24 Aug 2019 11:05 AM
Last Updated : 24 Aug 2019 11:05 AM

சென்னை 380: சென்னை அன்றும் இன்றும்

தொகுப்பு: ச.ச.சிவசங்கர்

கெயிட்டி திரையரங்கம்

சென்னையில் சினிமா திரையிடுவதற்கென உருவான முதல் திரையரங்கம் கெயிட்டி எனச் சொல்லப்படுகிறது. இதில் சில சர்ச்சைகள் இருந்தாலும் கெயிட்டியின் பழமை நூற்றாண்டுகளைக் கடந்தது. 1912-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரையரங்கம் 2005 வரை வெற்றிகரமாக இயங்கிவந்தது. இப்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

உட்லேண்ட்ஸ்- டிரைவ்இன்

இதுதான் தென்னிந்தியாவின் முதல் டிரைவ்-இன் உணவகம். 1962-ம் ஆண்டு தொடங்கபட்ட இந்த உணவகம் 2008-ல் மூடப்பட்டது. தமிழ்நாடு அரசு தவாரவியல் பூங்கா அமைக்க இந்த இடத்தைக் கையகப்படுத்தியது. இன்று இந்த இடத்தில்தான் செம்மொழிப் பூங்கா அமைந்துள்ளது.

ஸ்பென்சர் பிளாசா

ஆங்கிலேயர்களால் 1864-ம் கட்டபட்ட ஸ்பென்சர் பிளாசா இந்தியாவின் முதல் பல்கடைப் பேரங்கட. சார்லஸ் டுரண்ட், ஜே.டபுள்யூ. ஸ்பென்சர் ஆகிய இருவர் இணைந்து இந்தப் பேரங்காடியை நிறுவியுள்ளனர். 1983-ல் நடந்த தீ விபத்தில் பழமையான ஸ்பென்சர் முழுவதும் சேதமடைந்துவிட்டது. மீண்டும் ஸ்பென்சர் கட்டப்பட்டு 1991-ம் திறக்கப்பட்டது. இன்றும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக ஸ்பென்சர் இருக்கிறது.

கலைவாணர் அரங்கம்

இந்தக் கட்டிடம் 1952-ல் சட்டமன்ற அவைக்காகக் கட்டப்பட்டது. அப்போது சென்னையின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவான பிறகு சென்னை மாகாணத்தின் பல பகுதிகள் அதில் இணைந்தன. அதனால் எண்ணிக்கை 205ஆகக் குறைந்தது. 1956-ல் மீண்டும் கோட்டையே சட்டமன்ற அவையாக ஆனது. அதன்பிறகு இது பாலர் அரங்கமாக ஆக்கப்பட்டது. 1974-ல் தமிழக அரசு இதை கலைவாணர் அரங்கமாகப் புதுப்பித்தது. பிறகு அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு 2016-ல் இப்போதுள்ள கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டது

சென்னை தினக் கண்காட்சி

சென்னை தினத்தை முன்னிட்டு தக்‌ஷன்சித்ராவில் ஒளிப்படக் கண்காட்சி நடந்துவருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ரயில் சேவை, நிலையங்கள் எப்படி இருந்தன என்பதைச் சொல்லும் ஒளிப்படங்கள் இவை; ஆஸ்திரேலிய ஒளிப்படக் கலைஞர் இயன் மானிங் அவரது 23 வயதில் எடுத்த ஒளிச் சித்திரங்கள்.

கடந்த 17-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கவுள்ள இந்தக் கண்காட்சியில் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சென்னையைச் சிறப்பித்துவருகின்றனர். இன்று நடைபெறவுள்ள அமர்வில் சென்னையின் பழமையான ரயில் நிலையங்கள் குறித்து அறிஞர்கள் பேசுகிறார்கள். இந்தக் கண்காட்சியை சென்னை ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் இணைந்து தக்‌ஷன்சித்ரா ஒருங்கிணைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x