Published : 14 Aug 2019 11:39 AM
Last Updated : 14 Aug 2019 11:39 AM

அறிவியல் மேஜிக்: கீழே சிந்தாத தண்ணீர்!

மிது கார்த்தி

நாடோடிகள் சாலை ஓரங்களில் துணியாலான கூடாரங்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? துணிக் கூடாரத்துக்கு மேலே விழும் மழை நீர், உள்ளே செல்லாமல் இருப்பது எப்படி? அதுக்குக் காரணமும் அறிவியல்தான். ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
ஒரு கண்ணாடி டம்ளர்
கைக்குட்டை
தண்ணீர்

எப்படிச் செய்வது?

* டம்ளரைத் தரையில் வைத்து, அதன் மீது கைக்குட்டையை விரித்து வையுங்கள்.
* டம்ளரில் முக்கால் பாகத்துக்கு அதிகமாகத் தண்ணீரை ஊற்றுங்கள்.
* டம்ளருடன் சேர்த்து கைக்குட்டையை நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
* கைக்குட்டையோடு சேர்த்து டம்ளரை அப்படியே தலைகீழாகத் திருப்புங்கள்.
* இப்போது என்ன நடக்கிறது? கைக்குட்டை வழியாகத் தண்ணீர் வெளியே வரும் என்று நினைப்பீர்கள்.
* ஆனால், கைக்குட்டை வழியாகச் சொட்டுத் தண்ணீர்கூட வராமல், அது டம்ளரிலேயே இருப்பதைக் காணலாம்.
துணி வழியாக ஊற்றிய தண்ணீர், அதே துணி வழியாக வெளியே வராமல் போனது எப்படி?

காரணம்

முதலில் கைக்குட்டை வழியாகத் தண்ணீரை ஊற்றும்போது, இயல்பாகத் தண்ணீர் டம்ளருக்குள் சென்றது. ஆனால், கைக்குட்டையை இறுக்கும்போது, துணியில் உள்ள ஓட்டைகள், மேலும் சிறியதாகிவிடுகின்றன. இதனால், தண்ணீரில் உள்ள மூலக்கூறுகள் துணி வழியாகப் போக முடியாமல் போவதால், அங்கே பரப்பு இழுவிசை உண்டாகிறது. அதே வேளையில் வளிமண்டலக் காற்றழுத்தம் நீர்ப்பரப்பின் மீது மேல் நோக்கிச் செயல்படுவதாலும் துணிகளின் துளைகளுக்கு இடையே பரப்பு இழுவிசை செயல்படுவதாலும் தண்ணீர் கீழே கொட்டாமல் இருக்கிறது.

பயன்பாடு

மழை பெய்தாலும் துணியாலான கூடாரங்களுக்குள் தண்ணீர் செல்லாமல் இருப்பதற்குக் காரணம், பரப்பு இழுவிசைதான்.ஓவியம்: வாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x