Published : 20 May 2014 02:32 PM
Last Updated : 20 May 2014 02:32 PM

குழந்தைகளுக்கு...

#வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு முகம், கை, கால் ஆகிய உறுப்புகள் கறுத்துப் போகும், தடிப்புகளும் வரும். இதற்குத் தீர்வாகக் குளிக்கும் முன் தயிரை எடுத்துக் குழந்தையின் முகம், கை கால்களில் நன்றாகத் தடவி 5 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வைத்தால் முகம் பளபளப்பாக இருக்கும். உடலும் அரிக்காமல் இருக்கும்.

#குழந்தைகளுக்கு அடிக்கடி கால் வலி ஏற்படலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெயை எடுத்துச் சூடுபடுத்தவும். குழந்தைகள் படுக்கப் போகும் முன் கால்களை நீட்டச் சொல்லிப் பொறுத்துக்கொள்கிற சூட்டில் முழங்காலிலிருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்துவிட்டால், கால் வலி போகும். நன்றாகத் தூக்கம் வரும்.

#குழந்தைகளுக்குச் சளி பிடித்தாலோ, தொண்டை கரகரப்பாக இருந்தாலோ பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 சிட்டிகை மிளகுத் தூள் போட்டு நன்றாகக் காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து 3 நாளைக்குக் கொடுத்துவந்தால் சரியாகிவிடும்.

#பிறந்த குழந்தைகள் கையை விட்டு இறங்காமல் அழுதால், எதற்கு அழுகிறது என்று புரியாது. வெற்றிலையில் எண்ணெயைத் தடவி விளக்கில் காட்டவும். பிறகு அதை எடுத்துப் பொறுத்துக்கொள்கிற சூட்டில் வயிற்றின் மேல் போட்டால் வயிற்று வலி இருந்தால் உடனே சரியாகிவிடும்.

#குழந்தைகளுக்குக் கர்ப்பச் சூட்டினால் கண்கள் பொங்கி வரும். பூளை கட்டும். கண் சிவப்பாக இருந்தால், தாய்ப்பாலை இரண்டு கண்களிலும் பீய்ச்சிவிட்டால் இரண்டு நாட்களில் சரியாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x