Published : 11 Aug 2019 09:53 AM
Last Updated : 11 Aug 2019 09:53 AM

முகம் நூறு: தமிழகத்தின் முதல் தங்கம் அனுராதா!

பெண்கள் என்றாலே மெல்லிய இயல்போடு இருப்பார்கள்; அவர்களால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என்பது பலரது நினைப்பு. இதைத்தான் விளையாட்டு சார்ந்தும் சிலர் சொல்லுவார்கள். தடகளம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிற பெண்களை ஏற்றுக்கொள்கிறவர்கள், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்றவற்றில் களம்காணப் பெண்களுக்குப் பெரிய வாய்ப்பளிப்பதில்லை. அவையெல்லாம் ஆண்களுக்கான விளை யாட்டு என்ற சிந்தனையின் வெளிப்பாடு இது.

ஆண்களுக்கானவை என முத்திரை குத்தப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகிற பெண்களுக்கு இரட்டைச் சவால். சமூகத்தின் பொதுவான கற்பிதத்தை உடைப்பதோடு பெண்ணுக்கான இலக்கணத்துக்கு எதிராக உடலை உறுதிசெய்ய வேண்டும். இவை இரண்டையும் பிசிறின்றிச் செய்து வாகைசூடியிருக்கிறார் அனுராதா. சமோவ் தீவில் ஜூலை 14 அன்று நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 221 கிலோ எடையைத் தூக்கி, மற்ற நாடுகளெல்லாம் வியக்கும் வகையில் இந்தியாவின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றுள்ளார் அவர்.

அழுத்திய பொருளாதாரச் சுமை

பளுதூக்குவது போன்ற உடல் வலுவுடன் தொடர்புடைய விளையாட்டுகளில் மிளிர பயிற்சியோடு சத்தான உணவும் அவசியம். அன்றாடச் சாப்பாட்டுக்கே சிரமப்படும் குடும்பத்தில் பிறந்த அனுராதா, வறுமையைத் தன் உறுதியாலும் திறமையாலும் வென்றிருக்கிறார். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் விவசாயத்தை ஆதாரமாகக்கொண்ட கொண்ட குக்கிராமம் நெம்மேலிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் - ராணி தம்பதியின் மகளான அனுராதாவின் பெயர்தான் காமன்வெல்த் போட்டி அரங்கில் அன்று உரத்து முழங்கியது. தொடக்கக் கல்வியைத் தன் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த அனுராதா, அதன் பிறகு அருகிலுள்ள பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தந்தை பவுன்ராஜ் இறந்துவிட்டார்.

தந்தையின் இறப்புக்குப் பிறகு அனுராதாவின் குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. யாராவது ஒருவர் கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழல். பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினார். அனுராதா படிப்பைத் தொடர்ந்தார்.

“என்னைப் படிக்கவைக்க அம்மா ஆடு மேய்ச்சாங்க. அண்ணன் கூலி வேலைக்குப் போனாரு. நாங்க கூரை வீட்டில்தான் இருந்தோம். அப்போ வீட்டில் சைக்கிள்கூட இல்லை. என்னோட விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அண்ணன், எதையும் பொருட்படுத்தாமல் என்னைப் பயிற்சிக்கு அனுப்பினார். பயிற்சி முடிஞ்சதும் வயிற்றை வாரிச் சுருட்டும் அளவுக்குப் பசியெடுக்கும். அப்போ உறவினர்களும் நண்பர்களும் உதவினாங்க” என்று சொல்லும் அனுராதா, பொருளாதார நெருக்கடியில் தங்கள் குடும்பம் தத்தளித்ததாகவும் சொல்கிறார்.

வறுமை தடையில்லை

“அதுவும் நாள் கிழமைன்னா விரக்தியின் உச்சத்துக்கே போகும் அளவுக்கு வறுமை கோரத்தாண்டவம் ஆடும். தினமும் படிக்கவும் பயிற்சிக்கும் ஊரில் இருந்து பெருங்களூர் வரைக்கும் போய்வருவதே பெரும்பாடா இருக்கும். அந்த வழியா போறவங்ககிட்ட ‘லிஃப்ட்’ கேட்டு வரணும். அப்போ எங்க குடும்ப வறுமையை மட்டுமே பெரிதாக நினைத்திருந்தால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திட்டு ஆடு மாடு மேய்ச்சிக்கிட்டு வீட்டிலேயே முடங்கியிருப்பேன்” என்று புன்னகைக்கும் அனுராதா, தன் விளையாட்டுத் திறமை நிச்சயம் தன்னைக் கரைசேர்க்கும் என்று உறுதியாக நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கை இன்று அவரைத் தங்கத் தாரகையாக வலம்வரச் செய்திருக்கிறது.

“பள்ளிக்கூடம் படிக்கும்போதே அனுவுக்குக் கபடி, வாலிபால் மேல ஆர்வம் இருந்தது. அப்பப்ப நடக்கும் போட்டிகளிலும் வெற்றிதான். ஒருமுறை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு அனுவைக் கூட்டிக்கிட்டுப் போனேன். அங்கே குழு விளையாட்டைவிடத் தனிநபர் போட்டியில் அனுராதா வுக்குத் திறமை அதிகமாக இருப்பதா சொன்னாங்க. பளுதூக்கும் போட்டியில் அனுராதாவோட திறமையைப் பரிசோதிச்சாங்க. எந்தப் பயிற்சியுமே இல்லாம 35 கிலோ எடையை ரொம்ப சுலபமா அனு தூக்கினா. அதைப் பார்த்து அங்கிருந்த வங்க ஆச்சரியப்பட் டாங்க. அதுதான் அனுராதாவைத் தொடர்ந்து பளுதூக்கும் போட்டியில் ஈடுபடவைத்தது” என்கிறார் அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து.

எல்லாமே ஏறுமுகம்

பளுதூக்குவதில் பள்ளி அளவில் ஏராளமான சாதனைகளைப் படைத்த அனுராதா, புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் பி.சி.ஏ. படித்தார். அப்போதும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். பளுதூக்கும் போட்டி எங்கே நடந்தாலும் அதில் தனக்குப் பரிசு கிடைக்கும் என்ற நிலையை எட்டினார். அனுராதாவின் திறமையை அறிந்த ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம், கட்டணமின்றி அவரை எம்.எஸ்சி, எம்.ஃபில்., வரை படிக்கவைத்தது. தொடர்ந்து தேசிய அளவிலும் தடம்பதித்தார் அனுராதா. தன் திறமையை மேம்படுத்திக்கொள்ள, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஓராண்டு பயிற்சி பெற்றார்.

2016-ல் நடைபெற்ற காவல் துறைத் தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் காவல் உதவி ஆய்வாளராகத் தேர்வானார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த அவர், தற்போது தோகூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கு இடையேயான போட்டிகளில் தொடர்ந்து அனுராதா தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் மத்திய அரசு நடத்தும் இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறத் தேர்வானார். அங்கேயே தங்கிப் பயிற்சி பெற்றுவந்த அனுராதா, அதன் தொடர்ச்சியாக காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் களமிறங்கினார். சொல்லி வைத்ததுபோல் அதிலும் அனுராதாவுக்கே தங்கப் பதக்கம்! தமிழகத்தில் இருந்து காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை அனுராதா படைத்துள்ளார்.

ஏற்றுக்கொண்ட ஊர்

“பளுதூக்குறதுனா என்னன்னே ஊருக்குள்ளே பலருக்குத் தெரியாது. விளக்கம் கேட்டா சொல்லிப் புரியவைக்கிறதுக்குள்ள தலையே சுத்திரும். அதுக்கு ஏன் வெளியூர் போய் கஷ்டப்படணும்? ஊர்ல கிடக்கும் மரக்கட்டை, மூட்டை, முடிச்சுகளைத் தூக்கிப் பழக வேண்டியதுதானே? அப்புடித் தூக்கித்தான் என்னத்தைச் சாதிக்கப்போறேன்னு நிறையப் பேர் கேட்டிருக்காங்க. பல்வேறு இடங்களில் பெற்ற வெற்றியும் எஸ்.ஐ. வேலையும்தான் விளையாட்டோட மகத்துவத்தை எங்க ஊர் மக்களுக்குப் புரியவெச்சிருக்கு” என்று சிரிக்கிறார் அனுராதா.

இவருடைய வழிகாட்டுதலில் இவரது ஊரைச் சேர்ந்த நால்வர் காவல் துறையில் சேர்ந்துள்ளனர்.
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் ‘ஸ்னாச்’ முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்டு ஜெர்க்’ முறையில் 121 கிலோ என மொத்தம் 221 கிலோ பளுவைத் தூக்கி இவர் சாதனை படைத்துள்ளார். இதுவரை தமிழகத்தில் இருந்து இப்படியொரு சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை.
“வழிகாட்டுறதுக்குச் சரியான ஆள் இல்லாததால் சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே பல மாதங்களாச்சு. நான்கு ஆண்டுகள் பயிற்சியாளரே இல்லை.

இதெல்லாம் கிடைச்சிருந்தா ஐந்து வருசத்துக்கு முன்னாடியே காமன்வெல்த்தில் தங்கம் ஜெயிச்சிருப்பேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் என் ஒரே லட்சியம்” என்று சொல்லும் அனுராதா, விளையாட்டுத் துறையில் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே தனது திருமணத்தைத் தள்ளிப்போட்டுவந்திருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத் துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார் அனுராதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x