Published : 08 Aug 2019 10:49 AM
Last Updated : 08 Aug 2019 10:49 AM

வார ராசி பலன்கள் ஜூலை 08 முதல் 14 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.

பெண்களுக்கு, திறமையான பேச்சால் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயமடைவீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்ப்புகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர்கள், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: கிருஷ்ண பகவானை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்துக்கு மாறுகிறார். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவு உண்டு. போட்டிகளைக் கண்டு கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலும் படபடப்பும் ஏற்பட்டு நீங்கும். குடும்பக் கவலைகள் மேகத்தைப் போலத் தோன்றி மறையும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

சகோதரர்கள், உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பெண்களுக்கு, நன்மை தீமையைப் பற்றிய கவலையின்றி எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, நட்பு வட்டாரத்தில் நிதானமாகப் பழக வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, செயல்திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்.
எண்கள்: 2, 9
பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாத் தடங்கல்களும் நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு விரய ஸ்தானத்தில் மறைந்திருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பயணத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

பெண்களுக்கு, எந்தவொரு காரியத்தைச் செய்யும் முன்பும் அதை எப்படிச் செய்வது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு, அடுத்தவர்களின் யோசனைகளைக் கேட்டுத் தடுமாற்றம் அடைய வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை வணங்குவதும், வயதானவர்களுக்கு உதவுவதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் சஞ்சரிக்கிறார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில், திறமையுடன் செயல்பட்டுப் பாராட்டுகளைப் பெறுவார்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களிலும் கவனம் தேவை.

அக்கம்பக்கத்தவரிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டாம். பெண்களுக்கு, வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமையன்று முருகனுக்குத் தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனி அனுகூலமான முறையில் சஞ்சரிக்கிறார். ராசியைச் செவ்வாய் பார்த்து உதவுகிறார். ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில், மிகவும் கவனமாக வேலைகளைப் பார்க்க வேண்டும். உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம் கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.. மன வலிமை அதிகரிக்கும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு, எந்தவொரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது ஆலோசனையில் ஈடுபட்டு முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, பணவரவு தாமதமாகலாம். மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியைத் தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு பார்வை, செவ்வாய் பார்வை ராசியின் மீது விழுகிறது. வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க மனம்விட்டுப் பேச வேண்டும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுங்கள்.

பெண்களுக்கு, வீண் அலைச்சல் உண்டாகும். கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: பெருமாளைத் துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x