Published : 27 Jul 2019 07:43 PM
Last Updated : 27 Jul 2019 07:43 PM

இனி எல்லாம் நலமே 16: எது சிறந்த கருத்தடை சாதனம்?

துணிந்த பின் எண்ணுவதைவிட எண்ணித் துணிவது நல்லது. இப்போதைக்குக் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்துச் செயல்பட்டால் வேண்டாத கர்ப்பத்தைத் தவிர்க்கலாம். இருபாலருக்கும் கருத்தடை முறைகள் உள்ளன.

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் ஆண்கள் ஆணுறை அணியலாம். குழந்தை வேண்டாம் என நினைத்தால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். பெண்களுக்குப் பல வகையான கருத்தடை முறைகள் உள்ளன. கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், காப்பர்-டி, நிரந்தர அறுவை சிகிச்சை முறை போன்றவை பொதுவாக வழக்கத்தில் உள்ளவை.

கருத்தடை மாத்திரை நல்லதா?

உறவின் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்னும் திருமணமாகி முதல் குழந்தையைத் திட்டமிடுவதற்கு முன்னும் மாத்திரைகள், ஆணுறை ஆகியவை சிறந்த தீர்வாக இருக்கும்.

மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து 21 நாட்கள்வரை இந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். ஒரு நாள் விட்டால் மறுநாள் இரண்டாகச் சேர்த்து சாப்பிட வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் தவறவிட்டால், இந்த முறையால் நாம் நினைக்கும் பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுவதை நிறுத்தியவுடன் நமக்குக் குழந்தை பெறும் தன்மை உடனே வந்துவிடும்.

இதனால்தான், இதை முதல் தேர்வாகச் சொல்கிறோம். இவை ஹார்மோன் மாத்திரைகள். இவற்றைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் பிறகு கருவுற முடியாது எனவும் கருவுறத் தாமதமாவதற்குக் கருத்தடை மாத்திரைகளே காரணம் எனவும் பலர் நினைக்கிறார்கள். எடை கூடிவிடும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இதனால் நிறையப் பெண்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. தவிர, தினமும் நினைவு வைத்துக்கொண்டு மாத்திரை சாப்பிடுவதைச் சிலர் கஷ்டமாக உணரக்கூடும்.

கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் எடை கூடாது. ஆனால், நீர் சேரும் தன்மையால் எடை கூட நேரிடலாம். அதை உடற்பயிற்சி செய்து கட்டுப்படுத்தலாம். நம்முடைய முதல் இலக்கு வேண்டாத கர்ப்பத்தைத் தவிர்ப்பது. எடை கூடும் என்று மாத்திரையைத் தவிர்த்து, வேறு முறைகளையும் கடைப்பிடிக்காமல் விட்டால் வேண்டாத கர்ப்பத்துக்கு ஆளாகி, கருவைக் கலைப்பதா குழந்தைப் பெற்றுக்கொள்வதா என்று பெரிய பிரச்சினைகளுக்குள் போக நேரிடும். எதற்காக எதை விட்டுக்கொடுக்கிறோம் என்று யோசிக்க வேண்டும்.

ஏன் காப்பர்-டி சிறந்தது?

முதல் குழந்தை பிறந்த பிறகு பயன்படுத்துவதற்கான சிறந்த கருத்தடை முறை காப்பர்-டி. இனிமேல் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் நிரந்தரக் கருத்தடை அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்.
காப்பர்-டியைப் போட்டுக்கொண்டால் கருத்தடை மாத்திரையைச் சாப்பிடத் தேவையில்லை.

நன்றாகப் பொருந்திவிட்டால் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள்வரைகூடப் (காப்பர்-டி யின் தன்மையைப் பொறுத்து) பிரச்சினை இல்லை. ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவரைப் பார்த்து காப்பர்-டியின் பாதுகாப்பைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

காப்பர்-டி போட்டுக்கொண்ட முதல் மாதம் சிலருக்கு அதிகப்படியான உதிரப்போக்கு வரலாம். ஆனால், சில மாதங்களில் காப்பர் - டி உங்களுக்குப் பொருந்திப்போன பிறகு உங்களுக்கான பாணி அமைந்துவிடும். காப்பர் – டி அணிந்தும் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்தும் மாதாந்திர உதிரப்போக்கு வரவில்லை என்றால் கர்ப்பம் தங்கியுள்ளதா என்று உடனடியாகப் பரிசோதித்துப் பார்த்துவிடுவது நல்லது. இது பலருக்கும் நிகழும் என்று சொல்ல முடியாது. வெகு அரிதாக இப்படிச் சிலருக்கு நிகழக்கூடும்.

யாருக்கு நிரந்தரக் கருத்தடை?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போட்டுக்கொள்ளக்கூடிய கருத்தடை ஊசி உள்ளது. ஆனால், சிலருக்கு இடையில் மாதவிடாய் வராமல் போகலாம். இது கவலையைத் தரக்கூடும்.

பெண்களுக்குத் தற்காலிக முறையாக, உறுப்பில் தடவிக்கொள்ளும் வகையிலான ஆணின்  விந்தணுக்களை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் கலந்த கிரீம்கள் (Spermicides), ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் போன்றவை கிடைக்கின்றன. இவை அவ்வளவு சிறப்பானவை அல்ல.

நிரந்தரக் கருத்தடை முறையை மருத்துவரிடம்தான் செய்துகொள்ள வேண்டும் என்பதால் யார் செய்துகொள்வது என்பதை மருத்துவரிடம் பேசித் தீர்மானிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஐந்து வயதான பிறகு செய்துகொள்ளலாம். ஆண், பெண் யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இதனால் இயல்பான உறவில் எந்த மாற்றமும் நிகழாது.

அவசரத்துக்கு  மட்டும்

‘மாத்திரை சாப்பிட்டால் குண்டாகி விடுவாய்; காப்பர்-டி போட்டால் வயிற்றுக்குள் போய்விடும்;  உறவின்போது தொந்தரவாக இருக்கும்; மாதாந்திர உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்’ என்று ஆளாளுக்குக் கருத்துச் சொல்வார்கள். இதில் உண்மையும் இருக்கும். அதீதக் கற்பனையும் கலந்திருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரியான முறையைப் பற்றித் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். மற்றவர்கள் சொல்வது சிலருக்குப் பொருந்தலாம். சிலருக்குப் பொருந்தாமல் போகலாம்.

மற்றவர்களிடம் ஆலோசனைகள் கேட்பது வேறு; ஆனால், இறுதி முடிவைத் துணைவருடனும் மருத்துவருடனும் ஆலோசித்த பிறகே எடுக்க வேண்டும்.

எதிர்பாராத விதத்தில் நேர்ந்துவிடக்கூடிய முதல் கர்ப்பத்தைக் கலைக்கவே கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு மட்டுமல்லாமல் வேண்டாத மன அழுத்தத்தையும் கொடுக்கிறது. சில நேரம் துணைவருடன் சண்டை வரலாம். வீண் பண விரயம்; வேண்டாத பயமும் கூட.

ஆண்கள் ஆணுறையைச் சரியாக அணிவது பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். உறவின்போது ஒரு வேளை கிழிந்துவிட்டால் ஒருவேளை கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டு என்பதால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவசரக் கருத்தடை மாத்திரை என்று ஒன்று உள்ளது. உறவுகொண்ட 72 மணி நேரத்துக்குள் பயன்படுத்தினால் பலன் அளிக்கக்கூடியது.

முன்பு சுலபமாக யார் வேண்டுமானாலும் போய் வாங்கக் கூடியதாக இருந்தது. இது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவந்ததால் இப்போது தடைசெய்துவிட்டார்கள். மிகவும் அத்தியாவசியமான மருத்துவக் காரணிகள் இருக்கும்போது மட்டுமே, மருத்துவரால் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

ஏன் 21 நாட்கள் தொடர்ந்து மாத்திரையை நாள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்; இப்படி அவசர கால மாத்திரையைப் பயன்படுத்திவிட்டுப் போகலாமே என்று பலர் நினைக்கலாம். இந்த அவசர கால மாத்திரையில் ஹார்மோன்கள் மிக அதிக அளவில் இருக்கிறது என்பதால் பெயருக்கு ஏற்றாற்போல் அவசர காலத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். திருமண வாழ்வில் இருப்பவர்களுக்கு இதைப் பரிந்துரைக்கவே மாட்டோம்.

ஹார்மோனில் கோளாறுகள் வரும். வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும். மாதாந்திர உதிரப்போக்கில் சீரற்ற தன்மை ஏற்படலாம். உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரும் சேர்ந்துதான் கருத்தடை குறித்துத் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் முடிவெடுத்து இன்னொருவர் பின்பற்ற வேண்டும் என்றால் நடக்காது. இரண்டாவது, இருவரது உடல்நிலையைப் பொறுத்தது.

கல்லீரல்  பிரச்சினைகள், ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பயன்படுத்தினால் கண்டிப்பாகப் பிரச்சினைகள் வரும். மூன்றாவது, இரண்டு பேரும் கருத்தடை முறைகள்  பற்றி நன்கு புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.

கருத்தடை முறையைத் தீர்மானிப்பதில் ஆண், பெண் இருவர் தவிர மருத்துவரின் ஆலோசனையும் முக்கியம்.

(நலம் நாடுவோம்)
அமுதா ஹரி, மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x