Published : 16 Jul 2019 05:11 PM
Last Updated : 16 Jul 2019 05:11 PM

பாவ்லா பிக்காசோ கதை: சிட்னி எங்கே?

தமிழில்: உதயசங்கர் 

சிட்னி சிறிய இரட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திருந்தது. அதன் மார்பு வெண்மையாக இருந்தது. எல்லா இரட்டைவால் குருவிகளையும் போல சிட்னியும் உயரே பறக்கவும் வட்டம் அடிக்கவும் விரும்பியது.

வசந்த காலத்தில் பிறந்த சிட்னி, கோடைகாலம் நெருங்க நெருங்கப் பறப்பதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றது. கோடைகாலம் இலையுதிர்காலமாக மாறியபோது, சிட்னி  தைரியமும் துணிச்சலும் கொண்ட பறவையாக மாறிவிட்டது. வானத்தில் மிக லாகவமாகப் பறந்து விளையாடியது. அதனுடைய பெற்றோர் கவலையுடன், “இன்று மாலை நாம் அனைவரும் நீண்ட பிரயாணம் போகிறோம். நீ எங்கும் போய்விடாதே” என்றனர்.
“ கவலைப்படாதீர்கள், நான் தூரமாகப் போக மாட்டேன்” என்றது சிட்னி.

தொலைபேசிக் கம்பிகளில் மற்ற இரட்டைவால் குருவிகள் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து அமர்ந்தன.
அவற்றுக்கு இந்தப் பயணம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. திடீரென்று சிட்னியின் கண்களில் ஏதோ தெரிந்தது. அருகிலிருந்த மாடி மீது பளீரென்ற நிறத்தில் ஒரு தும்பி.

ஒரு புகைபோக்கியிலிருந்து மற்றொரு புகைபோக்கிக்குப் பறந்துகொண்டிருந்தது. அப்படி அது பறக்கும்போது சூரியன் தும்பியின் சிறகுகளில் வானவில்லின் அத்தனை நிறங்களையும் அள்ளித்தெளித்து விளையாடியது. சிட்னி அதைக் கவனித்துக்கொண்டிருந்தது. திடீரென்று தும்பியை விரட்டியது. தும்பி எப்படி எல்லாம் பறக்கிறதோ அப்படி எல்லாம் பறந்து அதைப் பழிப்புக் காட்ட முயற்சி செய்தது. ஒரு நொடி சிட்னி  திரும்பியபொழுதில் தும்பி எங்கோ மறைந்துவிட்டது.

“ ஓஹோ… கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறதா?”  என்று நினைத்துக்கொண்ட சிட்னி, கட்டிடத்தின் தாழ்வாரத்தில் தலைகீழாகப் பாய்ந்து சென்றது.
ஒருவேளை அந்தப் புகைபோக்கிக் குழாய்க்குள் ஒளிந்திருக்குமோ 
என்று நினைத்தது. நீண்ட மூச்சிழுத்து விட்டு, தலைகீழாகப் புகைபோக்கிக்குள் பாய்ந்தது. உடல் எல்லாம் கறுப்பாகிவிட்டது. மேகம் போன்ற கனமான புகை வானத்தை நோக்கிப் புரண்டு எழுந்து வந்து சிட்னியின் வாய்க்குள் போய்விட்டது. ஒரு நொடி அந்த இரட்டைவால் குருவிக்கு மூச்சு விடவே முடியவில்லை. புகைபோக்கியின் பக்கச்சுவர்களில் மோதி அதனுடைய சிறகுகளில் காயம் ஏற்பட்டது. தான் எந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறோம் என்று சிட்னிக்குத் தெரியவில்லை. இதிலிருந்து வெளியே போக வேண்டுமானால் வெளிச்சம் வரும் திசையை நோக்கிப் பறக்க வேண்டும் என்று உணர்ந்தது. ஒன்றிரண்டு தடவை முயற்சி செய்த பிறகு, ஒரு வழியாகச் சிட்னி அங்கிருந்து வெளியே வந்தது.

நீண்ட பெருமூச்சு விட்டு சுற்றும் முற்றும் பார்த்தது. திடுக்கிட்டுப் போனது. நினைத்ததைவிடப் பெரிய கஷ்டத்தில் அது மாட்டிக்கொண்டது. நகரத்திலிருந்த ஏராளமான புகைபோக்கிகளில் வேறு ஏதோ ஒரு புகைபோக்கி வழியே வெளியேறிவிட்டது. அது நகரம் முடிகிற இடம். இதுவரை அந்த இடத்துக்குச் சிட்னி வந்ததே இல்லை. அதனால் சிட்னியின் அப்பா, அம்மாவையும் நண்பர்களையும் பார்க்க முடியவில்லை. வேறு ஏதேனும் இரட்டைவால் குருவிகளைப் பார்க்கலாம் என்றால், அதுவும் முடியவில்லை. சிட்னி காணாமல் போய்விட்டது. சிட்னிக்கு அழுகையாக வந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அடுக்குமாடிக் கட்டிடங்களும் தொலைக்காட்சி ஆன்டெனாக்களும்தான் தெரிந்தன. பின்னால் மேகத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி தோன்றியது. சிட்னி அதனிடம் பறந்து சென்றது.
“ நீ வேறு ஏதாச்சும் இரட்டைவால் குருவிகளைப் பார்த்தாயா? “
“ நீ எதற்காகக் கேட்கிறாய்? “
“ நாங்கள் அனைவரும் இன்று இரவு தொலைபேசிக் கம்பிகளில் கூடி, வேறு நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்” என்றது சிட்னி.

உடனே சிட்டுக்குருவி, “ நீ இரட்டைவால் குருவி இல்லை. நீ ஒரு காகம்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் பறந்து போனது. சிட்னி திடுக்கிட்டது. பிறகு ஒரு கறுப்புப் பறவையிடம் போய் எங்காவது இரட்டைவால் குருவிகளைப் பார்த்தாயா என்று கேட்டது. “கறுப்புப் பறவையான நீ ஏன் அதைக் கேட்கிறாய்?” என்று அந்தக் கறுப்புப் பறவை கேட்டது. சிட்னிக்கு அந்தக் கறுப்புப் பறவை என்ன சொல்கிறது என்று புரியவில்லை. சிட்னி கவலைப்பட்டது. அதன் பெற்றோர் அது வீடு சென்று சேரும்போது கோபப்படுவார்களே.

ஒருவேளை அவர்கள் அனைவரும் அதனை விட்டு விட்டுப் பறந்து போயிருந்தால்? சிட்னியால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பயந்து விட்டது. பறந்து சென்று நிலாவைப் பார்த்து ஆடிக்கொண்டிருந்த ஓர் ஆந்தையின் அருகில் அமர்ந்தது.
“யார் நீ?”
“நான் இரட்டைவால் குருவி.”
“உன்னைப் பார்த்தால் காகத்தைப் போலவே இருக்கிறாய். உன்னுடைய அழகிய நீல, வெள்ளை நிற இறகுகள் முழுவதும் கரியால் மூடியிருக்கிறது” என்றது ஆந்தை.

பெருங்குழப்பத்தில் மாட்டிக்கொண்டோம். தன்னுடைய குடும்பத்தாரால்கூடத் தன்னை அடையாளம் காண முடியாது என்று நினைத்தது. துயரத்தோடு பறந்து போய்க்கொண்டிருந்தது அந்தச் சிறிய இரட்டைவால் குருவி. ஒரு குன்றின் உச்சிமீது பறந்தபோது அதுக்குத் தன்னுடைய பெற்றோரும் நண்பர்களும் இருக்கிற இடம் தெரிந்தது. எங்கே அது பிரிந்து வந்ததோ அதே இடத்திலேயே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

கரிப்புகை இறகுகளோடு இருந்த சிட்னியை அம்மா அடையாளம் கண்டுகொண்டது. மற்ற இரட்டைவால் குருவிகளும் மகிழ்ச்சியில் கீச்சிட்டன. தங்களுடைய இறகுகளைச் சிலுப்பிப் பயணத்துக்குத் தயாராயின.
கடைசியில் சிட்னிக்கு ஏன் இரட்டைவால் குருவிகள் தங்களுடைய நீண்ட பயணத்தைச் சேர்ந்து மேற்கொள்கின்றன என்று புரிந்தது. அந்தக் நொடியிலிருந்து அது எப்போதும் ஒற்றுமையே பாதுகாப்பு என்பதை மறப்பதே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x