Published : 06 May 2014 03:51 PM
Last Updated : 06 May 2014 03:51 PM

பதற்றத்தைத் தவிர்த்து: ஆஸ்துமாவை சமாளிக்கலாம்

உலக அளவில் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் ஹார்ட் கேர் பிரிவு, புதுமையான நிகழ்ச்சியைச் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

ஆஸ்துமா நோய் பொதுவாகக் குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும். இந்நோயின் முக்கிய அறிகுறிகள் இளைப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம் உள்ளிட்டவை. குழந்தைகளிடையே மிக நாட்பட்ட நோயாகக் கருதப்படு வதும் இந்நோய்தான் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இந்நோய் அடிக்கடி தாக்காமல் இருக்க ஒவ்வாமையைத் தவிர்க்க வேண்டும்.

காற்றின் மூலம் பரவும் கிருமிகளால் இந்நோய் தூண்டப்படுகிறது என்கிறது தேசிய இதயம், நுரையீரல், ரத்த நிறுவனம். ஃபுளூ காய்ச்சல், புகைபிடித்தல், புகை, காற்று மாசு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு, குளிர் காலம், நல்ல மணம் போன்றவை ஆஸ்துமா தூண்டப்படக் காரணமாக இருக்கின்றன.

பதற்றத்தைத் தவிர்த்தால் பாதி நோய் நீங்கிவிடும் என்பது ஆஸ்துமாவுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். இதை வலியுறுத்தும் வகையில் டாக்டர் ஜி.எஸ். கைலாஷ் பரிந்துரையில், ஆஸ்துமா நோயாளிகளுக்காகப் பழைய சினிமா பாடல்களை டாக்டர்கள் பாடினர். இந்தப் பாடல்களில் சரியான ரிதத்தில் மூச்சை நிறுத்தி வெளியிட்ட விதம், மூச்சுப் பயிற்சிக்கு நல்ல உதாரணமாக இருந்தது.

ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி.எஸ். கைலாஷ், சூர்யா மருத்துவமனையைச் சேர்ந்த நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் வேணுகோபால், டாக்டர் சந்தோஷ், டாக்டர் ஜெயந்தி, தடயவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சிவப்பிரியா, டயட்டீஷியன் காயத்ரி ராஜாராமன் ஆகியோர் பாடினர்.

சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சினிமா நடிகர் யூகி சேது, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், ராப் பாடகர் பிளாஸி, பின்னணிப் பாடகி டாக்டர் ஜி.கே. லாவண்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆஸ்துமாவைத் தவிர்க்க

# நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்துமா ஒரு அரிய நோய். இன்றோ இது பெருவாரியாகப் பரவுகிற நோயாக வளர்ந்துவிட்டது.

# 2011-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் 23 கோடியே 50 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

l ஆண்டுதோறும் சராசரியாக 2 லட்சம் பேர் ஆஸ்துமா பாதிப்பு காரணமாக உயிரிழக்கின்றனர்.

l மரபுவழி பாதிப்பைவிட சுற்றுச்சூழல் மாசு, மாறி வரும் வாழ்க்கை முறையே ஆஸ்துமா நோய்க்கு முக்கியக் காரணம்.

# நெஞ்சு இறுக்கம், தீவிரமான நீடித்த இருமல், குறுகிய மூச்சு, மூச்சிளைப்பு ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள்.

# இந்நோய்க்கு ‘அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமையே முக்கியக் காரணம். செல்லப் பிராணிகள், எலி, கரப்பான் ஆகியவற்றில் இருந்துகூடப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

# உலகில் உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் பாதிப் பேர், ஒவ்வாமை மூலமாகவே ஆஸ்துமா நோயைப் பெற்றிருக்கிறார்கள்.

# ஒவ்வாமை இல்லாமலும், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமலும், வயதான பிறகு நோயைப் பெற்றவர்களாக மீதிப் பேர் உள்ளனர்.

# சாதாரணச் சளிபிடித்தலில் ஆரம்பித்துப் படிப்படியாக மூச்சிளைப்பு வந்து, ஆஸ்துமா நோய் பெரும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியது.

# புகைபிடிப்பது ஆஸ்துமா நோயை அதிகரிக்கச் செய்யும்.

# கர்ப்பமாக இருக்கும்போது புகைபிடித்தால் பிறக்கும் குழந்தைக்கும் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x